உப்புமா என்றால் என்ன – சுவாமி விவேகானந்தர்.
It was not easy for Swami Vivekananda to understand what is “uppuma”.
சுவாமி விவேகானந்தரைப் பற்றிய வரலாற்றுத் துணுக்குகளில் இதுவும் ஒன்று. சுவாமி தமிழகத்தில் தங்கியிருந்தபோது, அவரது தமிழ்ச் சீடர்களில் ஒருவரது வீட்டிற்குச் சென்றி்ருந்தார்.
சுவாமியின் பசியைப் போக்க, வீட்டில் வேறொன்றும் இல்லாததால், அந்த சீடர் உடனடியாக உப்புமா தயாரித்து விவேகானந்தரின் முன் கொண்டு வைத்தார்.
“இது என்ன உணவு ?” என்று கேட்டார் சுவாமி.
“உப்புமா”
“உப்புமா என்றால் என்ன ?”
இதற்கு என்ன பதில் சொல்வது, எப்படி விளக்குவது என்று புரியாமல் அருகிலிருந்த சீடர்கள் எதையோ சொன்னார்கள். சுவாமியும் புரியவில்லை என்பதையால் கையால் ஜாடை காட்டினார். அப்போது கணிதப் புலமை வாய்ந்த ஒரு தமிழ்ச் சீடர்,
“உப்புமா = அல்வா – சர்க்கரை + உப்பு” என்று தமது பீஜகணித ஞானம் தோன்ற விளக்கம் கொடுத்தார்.
வடநாட்டுக்காரரான சுவாமிகள் ஏற்கனவே அறிந்திருந்த அல்வாவைக் கொண்டு இவர் அறியாதிருந்த உப்புமாவை விளக்க முயன்றது ஏற்கனவே தெரிந்ததைக் கொண்டு தெரியாத ஒன்றை விளக்க முற்பட்டது நல்ல நுட்பமான முறை தான். இருந்தும் கணித முறைப்படி விளக்கம் பெற்றும் உப்புமாவின் தத்துவம் உள்ளபடியே விளங்கவில்லை அந்த வேதாந்த விளக்காகிய விவேகானந்தருக்கு !
உப்பமாவை ருசி பார்த்த பின்புதான் அது எப்படிப்பட்டது என்று தெரிந்தது சுவாமிகளுக்கு. அவர் சொன்னாராம், “வேதாந்த ஞானமும் இப்படித்தான் சொல்லித் தெரிவதன்று ; அனுபவித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்”
இந்திய பலகார உலகில் அல்வாவைப் போல உப்புமாவுக்கும் ஓர் இடமுண்டு என்பதை அதன் ருசி அந்த சமரச ஞானியின் மூலம் உணர்த்தி விட்டது !











