சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கி விட வேண்டும். அன்று ஒரு வேளை மட்டும்
சாப்பிட வேண்டும்.
சிவராத்திரி நாளில் முழு நேரமும் உண்ணாமல் சிவசிந்தனையுடன் இருக்க வேண்டும்.
முடியாதவர்கள் இருவேளை பால், பழமும், ஒரு வேளை உணவும் உண்ணலாம். உடல்நிலை
சரியில்லாதவர்கள், எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
‘ஓம் நமசிவாய’, ‘ஓம் சிவாயநம’ மந்திரங்களை 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில்
கோயிலில் நடக்கும், நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்தி
ருக்க வேண்டும். பசி தாங்குவதன் மூலம் ஆசை, கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து
விடுதலை கிடைக்கும்.
ஏழைகளின் பசியை உணரும் தன்மையும், தர்ம சிந்தனையும் ஏற்படும். விழித்திருந்து
சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். ”சிவனே! நான் அறியாமல் செய்த பாவங்களை
போக்கி வாழ்வில் மகிழ்ச்சி தர வேண்டும்,” என்று பிரார்த்திக்க வேண்டும்.
நான்கு ஜாமமும் யாரை வணங்குவது?
மகா சிவராத்திரியன்று மாலையில் நடராஜரையும், பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும்.
இரவின் முதல் ஜாம பூஜையில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில்
தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும்,
நான்காம் காலத்தில் சந்திரசேகரரையும் (ரிஷபத்தில் பார்வதியுடன் எழுந்தருளியிருப்பவர்)
வழிபட வேண்டும். அவர்கள் முன்பு சிவபுராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர்
வரலாறு, தேவாரம், திருவாசகம் முதலான நுால்களை படிப்பது, மிகுந்த புண்ணியம் தரும்.
சிவலிங்கம் தோன்றிய நேரம்!
சிவன் தன்னை லிங்கமாக மாற்றி கொண்டு தோன்றிய நேரத்தை லிங்கோத்பவ காலம் என்பர்.
சிவராத்திரியன்று இரவு 11.30 மணி முதல் 12.30 மணி வரை உள்ள காலம் இது. இரவு முழுவதும்
விழிக்க முடியாதவர்கள், இந்த நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது வழக்கம்.
சிவபூஜை செய்த சிவன்!
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் அனைவரும் சிவபூஜை செய்த
தலங்கள் பல உள்ளன. இதுபோல, சிவன் தன்னைத்தானே பூஜை செய்து வழிபட்ட தலமாக
இம்மையில் நன்மை தருவார் கோயில் மதுரையில் உள்ளது.
இங்கு மூலவர் சிவலிங்க வடிவில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவன், பார்வதி சிலைகள்
உள்ளன. மதுரையில் சிவபெருமான் ‘சுந்தர பாண்டியர்’ என்னும் பெயரில் மன்னராக
இருக்கிறார்.
பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது வழக்கம். மதுரை
மன்னரான சிவன் பட்டாபிஷேகம் நடக்கும் ஆவணி மூல நட்சத்திர நாளில், சிவன் நேரில்
எழுந்தருளி பூஜை செய்கிறார்.
சிவபெருமானின் எட்டு நாமங்கள்!
சிவராத்திரியன்று விழித்திருப்பவர்கள் மனதிற்குள் சொல்லும் மந்திரம்.
ஓம் ஸ்ரீபவாய நமஹ
ஓம் ஸ்ரீசர்வாய நமஹ
ஓம் ஸ்ரீருத்ராய நமஹ
ஓம் ஸ்ரீபசுபதயே நமஹ
ஓம் ஸ்ரீஉக்ரயே நமஹ
ஓம் ஸ்ரீமகா தேவாய நமஹ
ஓம் ஸ்ரீபீமாய நமஹ
ஓம் ஸ்ரீஈசாநாய நமஹ.
பணக்காரனாக்கும் விரதம்!
ராமனின் தந்தை தசரதருக்கு முன்பு அயோத்தியை ஆண்ட மன்னர் சித்திரபானுவை,
அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் சந்திக்க வந்தார். அன்று விரதமிருந்த மன்னன்
முனிவரிடம்,
”நான் சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை
விற்பது என் தொழில். ஒரு நாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு, மான்
ஒன்றை கொன்றேன்.
காட்டிலேயே தங்கி விட்டேன். அன்றைய தினம் சிவராத்திரி என்பது எனக்கு தெரியாது.
மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசியில் துாக்கம் வரவில்லை.
இலைகளை பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பிறகு வீட்டுக்கு சென்று விட்டேன். நான்
மரணமடைந்ததும், இரு சிவதுாதர்கள் என்னை அழைத்து சென்றனர்.
செல்லும் வழியில் அவர்கள், ”நீ வேட்டையாடச் சென்ற நாள் ‘சிவராத்திரி’. ஏறியது ஒரு வில்வ
மரத்தில். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்து போட்டபடி
இருந்தாய். உறங்கவும் இல்லை.
அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனை செய்ததால், உனக்கு
நற்கதி கிடைத்தது,” என்றனர். அதனால், இப்போது நாடாளும் மன்னனாகும் பேறு பெற்றேன்,
என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும்
பணக்காரர்களாக இருப்பர்.










