தொன்மையான வழிபாட்டு முறையாக கருதப்படும் தாய் தெய்வ வழிபாட்டில் துவங்கும் தவ்வை தாய் வழிபாடு, பின்னர் சமண சமயத்தில் சிறிது காலம் சிறுதெய்வ வழிபாடாக நீள்கிறது.
சமணத்தில் செல்வாக்கு குறைந்த பின், சக்தி வழிபாட்டில் சற்றே காலம் கழித்தாள்.
பின்னர் பல்லவர்களாலும் சோழர்களாலும் போற்றி வணங்கப்பட்டு சைவம் மார்க்கத்திற்குள் எடுத்து வரப்பட்டாள்.
மதங்கள் மாறலாம், மனிதர்கள் மாறலாம், மனங்கள் மாறலாம், நான் மாற மாட்டேன் என்றவாறு அமர்ந்திருக்கும் இவ்வன்னையை,இன்றும் தமிழகத்தின் அனைத்து பழமையான கோவில்களிலும் காணலாம்.
பெயர் தெரிந்தும் தெரியாமலும் இன்றும் இவர் நம் வணக்கங்களிலும் வழிபாடுகளிலும் வாழ்ந்துதான் வருகிறார். இவர் சோம்பலை நீக்கும் தெய்வம், சப்தகன்னியரில் ஒருவரான ஜேஷ்டா தேவி எனும் மூத்த தேவி எனும் மூதேவி. தவ்வையை வள்ளுவர் தனது வரிகளில் பயன்படுத்தியிருப்பது ஒரு ஸ்வீட் ஷாக்.
குறள் :
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். ( அதிகாரம் – 17 , குறள் – 167 )
நாமக்கல் கவிஞர் உரை :
பொறாமைப்படுகிறவனிடத்தில் வெறுப்புக்கொண்டு சீதேவியானவள் தன் அக்காளாகிய மூதேவியிடம் அவனைக் காட்டிவிட்டு அவளை விட்டுப் போய்விடுவாள்.










