சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதி – திருப்போரூர்
ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள். இவர் ஒரு தவ முனிவர்.
வெறும் பனங்காடாக இருந்த திருப்போரூரில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலையும், அருகில் உள்ள ஒரு ஓடையை ஒரு பெரிய திருக்குளமாகவும் உருவாக்கியவர் சிதம்பர சுவாமிகள்.

அது மட்டுமல்ல. சாலையின் மறுபுறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலை வடிவமைத்தும் இவர் தான்.
அந்த கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கபாதை அமைத்து அதில் சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் முதல் ஆதீனமாக விளங்கியவர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள்.
இவர் வைகாசி விசாக நாளில் சுவாமிக்கு பூஜை செய்யும்போது ஜோதி வடிவில் மறைந்தார். இதையடுத்து ஆண்டுதோறும், கண்ணகப்பட்டில் உள்ள அவரது மடத்தில் குருபூஜை விழா நடத்தப்படுகிறது.

இவரைத் திருப் போரூர் சிதம்பர ஸ்வாமிகள் என்று சொன்னாலும் இவரின் பூர்வீகம் எதுவெனத் திட்டமாய்த் தெரியவில்லை.
அருணகிரிநாதர், ஷிர்டி பகவான் போன்ற பெரிய மகான்களைப் போல் ரிஷிமூலம் அறிய முடியாதவர் இவர். ஆனால் இவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நான்மாடக் கூடலாம் தென்மதுரையில் சங்கப் புலவர் மரபில் உதித்தவர் என்றும்,
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர் என்றும் தெரியவருகிறது. இளம்பிராயத்திலேயே தமிழை நன்கு கற்றுக் கவிபாடும் ஆற்றலோடு, இறைவழிபாடு, யோகம் போன்றவற்றிலும் தனித் திறமை பெற்றிருந்தார்.











