‘நான் சீக்கிரம் இறந்துவிடுவேன்.நான் நட்டுவைத்த மரங்களில் இருந்து வெளியாகும் காற்றைச் சுவாசிக்கும் மக்களின் சுவாசத்தில் என்றென்றும் வாழ்ந்திருப்பேன்.’’
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாநில கவர்னராக இருந்தவர் ஹாக். அவர் இறக்கும் தருவாயில், “நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னம் எழுப்பி காசு,பணத்தை வீணடிக்காதீர்கள்; என் கல்லறையின் தலைமாட்டில் பெக்கன்கொட்டை மரத்தை நடுங்கள்;
என் கால் மாட்டில், வால்நட் மரத்தை நடுங்கள். இரண்டும் மரமாகி விதைகளைத் தரும் போது, அவற்றை என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய டெக்சாஸ் மக்களுக்கு விநியோகம் செய்யுங்கள்.அவர்கள் அதைப் பயிர் செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் செழிக்கட்டும்” என்றார்.
அதுபோலவே 1926ஆம் ஆண்டு முதல் அந்த மரங்களில் இருந்து கிடைத்த விதைகளை அருகிலேயே வரிசையாக நட்டு பெரிய மரச் சோலையை வளர்த்தனர். அவை பெரிதாகி விலையுயர்ந்த பெக்கன் மற்றும் வால்நட் விதைகளைக் கொடுக்கின்றன.
அவற்றை நட்டு மரக்கன்று வந்தவுடன், அவற்றை அவ்வூர் பள்ளிக்கூடங்களுக்கும், மக்களுக்கும் வினியோகம் செய்கின்றனர்.
என்ன ஒரு அருமையான யோசனை! தன் நாட்டை செழிக்க வைத்து தன் நினைவையும் நிலைக்க வைக்க யோசனை!
இதேபோன்று ஒரு அருமையான யோசனை நம் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் தோன்றி இருக்கிறது.
சூரத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் ஸ்ரூச்சி வடலியா. சில மாதங்களுக்கு முன்பு அவரது மூளையில் கட்டி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 27 வயதான வடலியா தனக்கிருக்கும் நோய் குறித்து கவலைப்படவில்லை.
அதே நேரத்தில் புற்று நோய் உள்ளிட்ட பல கொடிய நோய்களுக்கு ஆதாரமாக காற்று மாசுபாடு இருப்பதாக உறுதியாக நம்பினார் வடலியா. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த வடலியா,
இன்று 30 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டுள்ளார். தவிர, குஜராத்தில் உள்ள கிராமங்களுக்கும் பள்ளிகளுக்கும் சென்று மரம் நடுவதன் அவசியத்தைப் பகிர்ந்து வருகிறார்.
இறந்துகொண்டிருக்கும் நேரத்திலும் மற்றவர்களின் நலனுக்காகப் போராடும் வடலியாவை இணைய உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது.
‘‘நான் சீக்கிரம் இறந்துவிடுவேன். ஆனால், நான் நட்டுவைத்த மரங்களில் இருந்து வெளியாகும் காற்றைச் சுவாசிக்கும் மக்களின் சுவாசத்தில் என்றென்றும் வாழ்ந்திருப்பேன்’’ என்று நெகிழ்கிறார் வடலியா.
இருக்கும்போது என்ன செய்தோம் நாம்? இறக்கும் தருவாயிலும் இந்த பூமியை உய்விக்க ஹாக், வடலியா போன்றவர்கள் சிந்தனை செய்கிறார்கள் இருந்தும் இறந்தும் நம் பெயர் சொல்ல நாமும் ஏதாவது செய்ய முயலலாமே?










