அந்த நாளை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
நாம் நினைப்பதையும், நாம் செய்ய இருப்பதையும்
அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்ய வேண்டும்.
தியானம் மூலம் அமைதி உண்டாகும். அமைதி இருக்குமிடத்தில் மனமும் ஒருமுகப்படும்.
அந்த நிலையில் செய்யும் செயல்கள் எளிதில் வெற்றி கண்டுவிடும்.
இறைவனை முழுமையாக நேசிப்பவர்கள், தன்னை இறைபணிக்கே சொந்தமாக்கிக் கொள்வார்கள்.
இறைப்பணிக்கென தன்னை ஒப்புவித்தவர்கள், வாழ்க்கையில் தான் செய்யப் போவதைப் பற்றித் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள்.
தான் செய்து முடித்ததைப் பற்றிப் பெருமை பேசவும் மாட்டார்கள்.
‘எனக்குத் தெரியாதா? எனக்கு எல்லாம் தெரியும்’, என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்.
எத்தனை தோல்விகள் ஏற்பட்ட போதிலும் இறுதி வெற்றிக்காகத் தொடர்ந்து போராடி வெற்றிக்கனியை எட்டிப் பறிப்பார்கள்.
நாமும் அந்நிலைக்கு உயரும்படியாக நம் சிந்தனைகள் தூய்மையுடன் இருக்க, செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலை நம்மை நெருக்குவதாக நினைக்காமல், எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொள்ள பழக வேண்டும்.
நோயாளி தனக்கு வைத்தியம் செய்யும் மருத்துவர் மீதும், தான் உண்ணும் மருந்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நோயாளி வைக்கும் நம்பிக்கையே அவரை நோயிலிருந்து சீக்கிரம் மீளும் ஆற்றலைத் தருகின்றது. அதுபோல, ‘நம்மை ஒருபோதும் இறைவன் கைவிடமாட்டார்,
அவரது சாம்ராஜ்யத்தில் எல்லாம் நன்மை அன்றி வேறொன்றுமில்லை’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தது என்றால், நம்மால் எல்லாவிதத் துன்பங்களையும், என்ன விதமான சூழ்நிலைத் துயரங்களையும், மிகமிக மோசமானவை என்று கருதப்படுபவற்றையும் எதிர் நோக்க முடியும். இதற்கு தேவை, இடைவிடாத இறை பக்தியும், ஊக்கமும், மனம் உடையாத மனோநிலைமையும் தான்.
நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அவற்றாலேயே சூழப்பட்டிருப்போம். நாம் இழிவான பொருட்களைப் பற்றி எண்ணினால் நிச்சயம் இழிவான சூழலில் மாட்டிக் கொள்வோம்.
அதனால் நம் சிந்தனை எப்போதும் உயர்வானவையாக இருக்கட்டும். வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனுக்காக வாழ்தலாகும். இறைவனும் உண்மையும் வேறுவேறல்ல. இறைவனே உண்மையாகும். உண்மையே இறைவனாகும். எந்த அளவிற்கு இறைவனை அறிகிறோமோ, அந்த அளவிற்கு நம் துன்பங்கள் நம்மை விட்டு விலகுவதை உணர முடியும். அதனால் இறைசிந்தனையிலிருந்து விலகாது இருக்க வேண்டும்.










