வீட்டை அழகுறச் செய்வது விளக்கு
ஒரு வீடு எத்துணை உயர்ந்திருப்பினும், அகன்றிருப்பினும், ஆசனாதிகள் அமைந்திருப்பினும் அழகு பெறமாட்டாது. அந்த வீட்டில் விளக்குகள் இல்லையானால் இருள் பரவியிருக்கும். பகலாக இருப்பினும் மூதேவி நடமாடும். ஒரு திருவிளக்கு எரிந்தாலே அந்த வீடு மங்கலமாகத் திகழும். எனவே வீட்டை அழகுறச் செய்வது விளக்கு.
அதுபோல் நாட்டை அழகுற செய்பவர் புலவர். புலவரால் நாடு பொலிவுறும்: விளக்கு இருளை நீக்குவது போல், புலவர்கள் அறியாமையாகிய இருளை அகற்றுவர். விளக்கு ஒளி வீசுவதுபோல் புலவர்கள் ஞானவொளியை பரப்புவர்.
அவ்வாறு நமது தமிழகத்தில் அஞ்ஞான இருளை நீக்கி ஞானவொளியை தந்த புலவர்கள் பலர் அவ்வப்போது தோன்றி நாட்டை அலங்கரித்தார்கள்.
திருவள்ளுவர், சேக்கிழார் பெருமான், ஒட்டக்கூத்தர், கம்பநாடர், புகழேந்தி, காளமேகம், இரட்டைப்புலவர், வில்லிபுத்தூரர், சிவப்பிரகாசர், குமரகுருபரர் முதலிய பற்பல அறிவு சுடர்கள் தோன்றினர். அவர்கள் பாடிய பாடல்கள் இன்றும் குன்றாமல் நின்று நிலவுகின்றன. அவை வானோர் விருந்தமுதாக இருந்து பவப்பசியை மாற்றி சிவத்துவத்தை வழங்குகின்றன.
அன்றியும் சிந்தனைைய தூண்டிவிடுவதாகவும், சில பாடல்கள் உன்னுந்தோறும் உன்னுந்தோறும் உவட்டாத உவகையை ஊட்டுவதாகவும் அமைந்துள்ளன.
ஒரு விஷயத்தை இங்கு சிந்திப்போம். சிவபெருமானுக்கு மூன்று கண்கள். அப்படியே அம்பிகைக்கும் மூன்று கண்கள்; ‘த்ரியம்பகி’ என்று பெயர்.
‘‘அமலை யாரியை அந்தரி சுந்தரி
இமய மாமயில் அம்பைத்ரி யம்பகி’’
என்பது திருவகுப்பு.
விநாயகருக்கும் மூன்று கண்கள், ‘த்ரியம்பக விநாயகன்’ என்று கூறுகின்றார் அருணகிரிநாதர் மயில் விருத்தத்திலே – முருகருக்கும் மூன்று கண்கள், எனவே அந்த குடும்பத்திலே தாய், தகப்பன், பிள்ளைகள் எல்லோருக்குமே மூன்று கண்கள் என்கிறார்.
‘‘த்ரிலோசனாய நம:’’ என்று ஒரு மந்திரமும் உண்டு.
த்ரியம்பகம் என்பது ஒரு தலம். அது கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்திலே உள்ளது. பன்னிரு ஜோதிலிங்கத்திலே ஒன்று.
இனி வேதத்திலேயும் சிவபெருமானைப் பற்றி த்ரிலோசனம் என்று பல இடங்களில் வருகின்றன.
‘‘த்ரயீவேத்யம் ஹ்ருதயம் த்ரிபுரஹரமாத்யம் த்ரிநயனம்’’
என்று ‘சிவானந்த லகரி’ பேசுகிறது.
இப்படியெல்லாம் சிவபெருமானை ‘முக்கண்ணன்’ என்று கூறுவது மலையிலக்கு.











