அன்னைக்கு பிரம்மாண்ட கோயில் – நெகிழ வைத்த தொழிலதிபர்
சர்வதேச அளவில் இன்று அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது தாய்க்கு கோயில் கட்டியுள்ள சம்பவம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது தாய்க்கு இன்று அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அன்னையர் தினத்தை சிறப்பிக்க, தத்தம் குடும்பங்களை வெளியே அழைத்து சென்று உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிர் ஒருவர் துறையூரில் மறைந்த தனது தாயின் நினைவாக கோயில் ஒன்றை அமைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சுரேஷ் குமார், தனது அன்னை தனபாக்கியம் நினைவாக சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இக்கோயிலை கட்டியுள்ளார்.
இக்கோயிலுக்கு தனபாக்கியம் அம்மாள் திருக்கோயில் மண்டபம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தனபாக்கியம் அம்மாள் திருக்கோயில் பழமையான கட்டமைப்புடன், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
முகப்பில் பிரம்மாண்ட நுழைவு வாயிலுடன் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில், நினைவுத்தூண், பூங்கா, தியான மண்டபம், மணி மண்டபம் என பல அம்சங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.










