அருள்மிகு பிரசன்ன நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில். நெடுங்குடி. கைலாசபுரம். புதுக்கோட்டை மாவட்டம்.
நெடுங்குடி கைலாசநாதர் திருக்கோயில் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுங்குடி, கைலாசபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயமாகும்.
இச்சிவாலயம் பிரசன்ன நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் எனவும் அறியப்படுகிறது
காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் கீழாநிலைக்கோட்டையிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் மேற்கில் உள்ளது.
இவ்வாலயத்தைத் தென்கயிலை என்றே இம்மாவட்டத்தில் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலும் இருந்து வரும் பக்தர்களும் அழைக்கின்றனர்.
அசுர சகோதரர்கள் இருவரின் விருப்பத்திற்கிணங்க, கைலாசநாதர் காசிநாதர் என்று இரு வடிவிலும் சிவன் மகிழ்வுடன் வசிப்பதாகச் சொல்கிறது தலபுராணம்.
புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலை குன்றுகள் இருந்தது.
இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட எண்ணினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார். அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்கு சென்றார்.
ஆனால் பூஜைக்கு உரிய நேரத்தில் தம்பி வராததால், தானே சிவலிங்கம் ஒன்றை செய்து அண்ணன் சிவவழிபாடு செய்தார்.
காசிக்கு சென்ற தம்பி சிரஞ்சீவி தாமதமாக வந்து, தான் கொண்டுவந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூஜை செய்ய சொன்னார். அண்ணன் மறுக்கவே, ஆத்திரமடைந்த தம்பி கயிலைநாதனை நோக்கி தவமிருந்தார்.
கயிலைநாதன் இருவர் முன்பும் தோன்றி பெருஞ்சீவி பூஜை செய்த லிங்கம் கைலாசநாதர் எனவும், சிரஞ்சீவி கொண்டு வந்த லிங்கம் காசிநாதர் என பெயர் சூட்டி, இங்கு வழிபட்டால் காசியிலும், கையிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்க அருளினார்.
13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.










