அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி, ராஜகீழ்ப்பாக்கம்.
1936-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பதி என்ற ஊரிலுள்ள காளியம்மன் கோவிலில் திடீரென்று ஒருநாள் கோவணத்துடன் தோன்றிய சுவாமிகளின் முகவசீகரம் அந்த ஊர் மக்களைக் கவர்ந்திழுத்தது. அவர் எங்கு பிறந்தார், எங்கிருந்து வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை.
அவரை இறைவனின் அவதாரமாகக் கருதிய அந்த ஊர்மக்களின் அன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு அவரை அங்கேயே தங்கவைத்தது. திருமூலர் கூறிய சிவசித்தரின் இயல்புகளை முழுவதுமாகப் பெற்றிருந்த சுவாமிகள், தம்மை நாடி வந்தவர்களுக்கு உபதேசங்கள் செய்ததுடன் அதிசயங்களையும் நிகழ்த்திக்காட்டினார்.
காசி, அயோத்தி என்று பல இடங்களுக்குச் சென்றுவிட்டு நாசிக்கில் உள்ள பஞ்சவடியில் ஒரு மலைக்குகையில் சிறிது காலம் தவமியற்றினார். மீண்டும் தமிழகத்துக்கு வந்து,
கணக்கன்பதியில் தங்கியிருந்த போது அவரது மெய்யன்பர்கள் அவரது அனுமதியுடன் 1938-ம் ஆண்டு அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையை நிறுவினர்.“கரணங்கள் நான்கும் தனக்குள் ஒடுங்கிடில்கருமம் இல்லையென்று பாரு”
அதாவது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தகரணங்களும் அவற்றால் ஆட்டிவைக்கப்படும் பஞ்சஞானேந்திரியங்களையும் அடக்கினால் வினைகள் தீரும். வினைகள் தீர்ந்தால், நாம் எடுத்த பிறவியின் நோக்கம் புலப்படும் என்றார்.அத்துடன் அகங்காரம் நீங்க சாந்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள் என்றார்.
அடங்காமல் அலைந்துகொண்டிருக்கும் சித்தத்தை அடக்க, ஏகம் என்ற எங்கும் நிறைந்திருக்கும் சிவத்தைப் பற்றிக்கொள்ளவும் கூறினார். புத்தி தெளிவு பெற சத்தியத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்; பின்னர் மனம் தானாகவே இறையுடன் ஒன்றும் என்று போதித்தார்.
1945-ம் ஆண்டு சென்னை மாகாண கவர்னரின் கேம்ப் கிளார்க் தனகோபால் அவர்களுடன், சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அரசினர் மாளிகையில் தங்கியிருந்தார். கவர்னர் பொறுப்பில் இருந்த ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, சுவாமிகளின் மகிமையை உணர்ந்து அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான், தமது உடலிலிருந்து ஆன்மாவை விலக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக அறிவித்தார்.அதன்படி,1946-ம் ஆண்டு நவம்பர் மாதம், 19-ம் நாள் மாலை ஐந்தரை மணிக்கு சுவாமிகள் விதேக முக்தி அடைந்தார். கிழக்கு தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கத்தில் (SHELL Petrol Station அருகில்) சுவாமிகளின் குருசேத்திரம் அமைந்துள்ளது.











