சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்-ஜீவசமாதி
மதுரை ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் உள்ள திருப்பாச்சேத்தி அருகே உள்ள கட்டிக்குளம்
என்ற ஊரில் ஒரு மண்பாண்டம் செய்யும் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் மாயாண்டி சுவாமிகள்.
பக்தர்கள் வாழ்வில் பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தியவர்.இவரிடம் சூடான கம்பி ஒன்று இருக்கும் இதை சூட்டுக்கோல் எனக்கூறுவர்.தம்மிடம் குறைகளை கூறவருபவரிடம் கைகளை நீட்டச்சொல்லி தொடச்சொல்வார். நியாயம் அவர் பக்கத்தில் இருந்தால் அந்தக்கம்பி சுடாது,
அவர் அநியாயம் செய்பவராக இருந்தால் கம்பி சுடும்.சூடு தாங்க முடியாமல் அலறும் பக்தர்களை பார்த்து என்ன அப்பு உண்மை சுடுதா என சிலேடையாக இவர் கேட்பதுண்டு.
பின்பு அவரை மன்னித்து அவரின் குறைகளை விளக்கி அவரின் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவார்.மதுரையில் இவரை வழிபடும் பக்தர்கள் அதிகம்.
இவருக்கு ஒரு வழிபாட்டு மன்றம் வைத்து வணங்கி வருகின்றனர். இவரின் அற்புதங்கள்
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒருமுறை ரயிலில் செல்லும்போது ஒரு வெள்ளைக்கார டிக்கெட்
பரிசோதகர் இவர் தோற்றத்தை பார்த்து அடிக்காதகுறையாக ரயிலில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்.
இவர் இறங்கியவுடன் அந்த ரயில் அசையவில்லை.ரயிலை என்னென்னவோ
முயற்சிசெய்தும் இயக்கமுடியாத சூழ்நிலை, என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில்
அந்த பரிசோதகர் தன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன் ரயில் கிளம்பி
சென்றுள்ளது.
திருப்பரங்குன்றம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்த திருக்கூடல்மலையில் தங்கினார்.
அவர் அங்கிருந்தபடி பக்தி மார்க்கத்தைப் பரப்பினார். பல மகிமைகளை செய்தார்.
அந்த ஊரிலேயே பெரும் பணக்காரரான கருப்பண்ண கோனார் என்பவருக்கு பூர்வ ஜென்ம கர்ம வினையினால் வாழ்கை முடிய உள்ளது என்பதை தெரிந்து கொண்டவர்,
கருப்பண்ண கோனார் வேண்டிக் கொண்டதினால் நாற்பத்தி எட்டு நாட்கள் தவம் இருந்து அவருடைய ஜென்ம கர்மாக்களை தன் மீது ஏற்றிக் கொண்டு அவருக்கு உயிர் பிச்சை தந்தார்.
கருப்பண்ண கோனாரே அந்த இடத்தில் சுவாமிகளின் உத்தரவின்படி ஆலயம் மற்றும் சமாதிகளைக் கட்டினாராம்.
மாயாண்டி ஸ்வாமிகள் இப்படியாகப் பலமகிமைகளை செய்து காட்டியவண்ணம் ஆன்மீகப் பயணத்தில் இருந்தவர் 1930 ஆம் ஆண்டு சமாதி அடைய அவருடைய சமாதி திருக்கூடல் மலையில் நிறுவப்பட்டது.
இவரது ஜீவசமாதி திருக்கூடல்மலை என்ற காகபுஜண்டர் மலையில் உள்ளது. இது திருப்பரங்குன்றத்தில் உள்ளது.










