பதினேழாம் நாள் போர் முடிந்த இரவு-இறுதிச்சுற்று
அடுத்த நாளைய நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்த தர்மரும், பீமனும் சற்றுத் தொலைவிலிருந்த கண்ணனின் கூடாரத்தில் விளக்கெரிவது கண்டு வியப்புற்றனர்..
எப்போதுமே அடுத்த நாள் போர் நிகழ்வுகளை அனைவருடனும் கலந்தாலோசிக்கும் கிருஷ்ணர், இன்று எதுவுமே பேசாமல் தனித்திருப்பது கலக்கத்தைத் தந்தது தர்மருக்கு..
கண்ணனிடம் உத்தரவு கேட்டபின் அவரது பாசறைக்குள் நுழைந்தனர் இருவரும்..
இருவரையும் வரவேற்ற கண்ணனின் குரல் ஏனோ உற்சாகம் குறைந்து ஒலித்தது போலிருந்தது..
“நாளைய போர் நிகழ்வுகளைப் பற்றி கேட்டுச் செல்லலாம் என வந்தோம் கிருஷ்ணா..”
என்றார் தர்மர்..
“நாளை பதினெட்டாம் நாள் போர் இதுவே குருஷேத்திரத்தில் இறுதிநாளாக இருக்கும் என எண்ணுகிறேன்..” என்றார் கிருஷ்ணர்..
“நாளை இறுதி நாள் தான்..
அதில் ஐயமே இல்லை..
பாஞ்சாலியின் சபதம் நிறைவேறப் போகும் நாள், நாளையேதான்..
அந்த இறுதிச்சுற்றில்
துரியோதனனும், அவனது மொத்தப் படையும் அழிவது உறுதி..”
என்று கோபத்துடன் சூளுரைத்தான் பீமன்..
“நாளை நமது படைக்கு யார் தலைமை தாங்கப் போகிறீர்கள்..?”
என்று கேட்ட கிருஷ்ணரை, வியப்புடன் பார்த்தார் தர்மர்..
“யாரா..?
அதை நீயல்லவா முடிவு செய்து சொல்ல வேண்டும் கண்ணா..”
என்ற தர்மரை இடைமறித்தான் பீமன்..
“அர்ஜுனனின் பங்கு இப்போரில் கர்ணனைக் கொன்றதோடு முடிந்துவிட்டது.. நகுலனும், சகாதேவனும் நாளைய போருக்கு சரிவர மாட்டார்கள்.
அண்ணன் தர்மர் செல்லுமளவிற்கு அவசியமும் ஒன்றுமில்லை..
எனவே, துரியோதனனை அழிக்க, நானே தலைமை ஏற்கலாம் என நினைக்கிறேன் கிருஷ்ணா..”
என்றான் பீமன்.
“தாராளமாக..
அதில் தவறேதுமில்லை. அதற்குமுன், நகுலனும், சகாதேவனும் நாளை தலைமையேற்க வேண்டாம் என்பதற்கான காரணம் வேண்டுமே..” என்ற கிருஷ்ணரிடம்..
“நாளை துரியோதனப் படைக்கு தலைமையேற்பது சல்லியன் அல்லவா.. நகுலனும், சகாதேவனும், அவரது உற்ற மருமகன்களாயிற்றே..
அவர்களுடைய கையால் அவர் அழியவேண்டாமே..
ஆகவே நான் தலைமையேற்றுச் சென்று, சல்லியனை அப்புறப்படுத்தி துரியோதனனைக் கொல்வது உறுதி..
அதற்கு அனுமதி கொடு கண்ணா..”
என்றான் பீமன்..
“உன் வீரத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது..
அதே சமயம், எதிராளியியின் வீரத்தைக் குறைத்து மதிப்பிடுவது உனக்கு நல்லதல்ல பீமா.. என்றார் கிருஷ்ணர்..
“நீ சொல்வது புரியவில்லை கண்ணா..
சல்லியன் அத்தனை பலசாலியா..?”
என்று இகழ்ச்சியாகக் கேட்ட பீமனை, புன்சிரிப்புடன் பார்த்தார் கிருஷ்ணர்..
“நீயும், அர்ஜூனனும், ஏன்..
நகுலனும், சகாதேவனும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் கூட, சல்லியனை வெல்வது கடினம் பீமா..”
என்ற கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேட்டு கோபமுற்றான் பீமன்..
“என்ன சொல்கிறாய் கண்ணா..?
நேற்றுவரை தேரோட்டியாக வலம் வந்தவர், இன்று தளபதியானவுடன் வீரம் பிறந்துவிடுமா என்ன..?”
என்று கேட்ட பீமனிடம்..
“கர்ணனுக்குத் தேரோட்டியாவதற்கு முன், சல்லியனை எதிர்த்து யாரும் உயிர்தப்பினரா பீமா..?
என்று கேட்டார் கிருஷ்ணர்..
தர்மர் அப்போது யோசித்தார்..
ஆம்..
சல்லியனை எதிர்த்த எவரும் இதுவரை உயிரோடில்லை..
எதிர்த்தவர்கள் முக்கிய நபர்கள் இல்லை என்பதால், யாரும் இதை கவனத்தில் கொள்ளவில்லை என்பது அப்போதுதான் புரிந்தது தர்மருக்கு..
“கிருஷ்ணா..
பீமன், தான் செய்த சபதத்தை முடிக்கவேண்டும் என்ற வெறியில் அறியாமல் பேசுகிறான்.
அவனை மன்னித்தருளி, என்ன செய்ய வேண்டுமென்று தெளிவாக நீ எடுத்துரைக்க வேண்டும்..”
என்றார் தர்மர்..
“தர்மா..
நாளை கௌரவர் படைக்குத் தளபதியாகப் பொறுப்பேற்று வரப்போகும் சல்லியனை எவராலும் வெல்ல முடியாது என்பதே உண்மை.. அவருக்கு முன்பாக கோபத்தோடு எவர் போரிட்டாலும், எதிரியின் ஆற்றல், ஆயிரம் மடங்காகப் பெருகி, சல்லியனை அடையும் என்பது அவர் வாங்கிய வரம்..
அவரை எதிர்த்து எவர் போரிட்டாலும், அவரது ஆற்றல் அனைத்தும் சல்லியனைச் சென்றடையும்.. எதிர்த்து நிற்பவர் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான், என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் இருக்கிறேன்..”
என்றார் கிருஷ்ணர்..
கிருஷ்ணர் உற்சாகமின்றி தனது பாசறைக்குள் தனித்து இருந்ததன் காரணம் புரிந்தது தர்மருக்கு..
“கிருஷ்ணா.. உனையன்றி வேறெதுவும் எங்களை காத்தருளாது என்பதை முழுமையாய் அறிந்தவன் நான்..
இதுவரை எங்களுக்குப் பேருதவி புரிந்த நீ, இப்போதும் எங்களைக் காப்பாய் என்பதை நானறிவேன்..
பாண்டவர் படை முழுவதும் உன்னையே சரணாகதி அடைந்திருக்கிறது..
அடுத்து நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை உத்தரவிடு கிருஷ்ணா..”
என்று கைகள் குவித்து, கருணை மிகுந்த கண்களோடு, யாசிக்கும் தர்மரைக் கண்டவுடன், ஒரு முடிவு தோன்றியது கிருஷ்ணருக்கு..
எதிரியின் வலிமை அதிகம் என்றபோதும் பயப்படாமலும், கோபப்படாமலும், பீமனைப் போல அவசரப்படாமலும், நிதானமாக யோசித்து, தன்னை யாசித்து நிற்கும் தர்மரே சல்லியனை எதிர்க்கத் தகுதியானவர் என்பது கிருஷ்ணருக்குப் புரிந்தது..
பீமனை நோக்கித் திரும்பிய கிருஷ்ணர்,
“பீமா.. நாளை போர்க்களத்தில் உனக்கு எதிராக கௌரவர் படைக்குத் தலைமைதாங்கி நிற்கும் சல்லியனைக் கண்டால், என்ன தோன்றும் உனக்கு..?” என்று கேட்டார்.
“எதிரில் நிற்பவர் யாராயினும், அவர் எனக்கு எதிரியே..
அதனால் வீரத்துடன் சல்லியனை எதிர்த்துப் போரிடுவேன்..
உறவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல், களத்தில் கடமையை நிறைவேற்றவேண்டும் என்று அர்ஜூனனுக்கு உபதேசம் செய்தவனும் நீதானே கண்ணா..?”
என்றான் பீமன்..
“உண்மைதான்..
ஆனால், அன்றோடு குருஷேத்திரப் போர் முடிந்துவிட்டதா பீமா..?”
என்று கேட்ட கிருஷ்ணருக்கு பதிலளிக்க இயலாமல் தடுமாறினான் பீமன்.
“ஆனால் அந்த நிகழ்வுதான் நம்மை வெற்றியின் பாதையில் திருப்பியது. இல்லையேல், பீஷ்மரையும், துரோணரையும் அர்ஜூனனால் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்க இயலாது..” என்றான் பீமன்.
“ஆம்..
போரில் வெற்றியை நோக்கிப் பயணிக்க, கடமை முக்கியம் என அறிவுறுத்தப்பட்டது..
ஆனால், நாளைய போர், வெற்றியை அடையப்போகும் விஷயம் என்பதைவிட, போரை முடிக்கப்போகும் விஷயம் என்று கொள்வதே சிறந்தது..
ஏதோ ஒரு காரணத்தால், இரத்த உறவுமுறை கொண்ட உங்களால் இந்த யுத்தம் துவங்கப்பட்டது..
இதில், கௌரவர், பாண்டவர் என்ற உங்கள் இருவரின் ஆற்றலும், திறமையும், வரங்களும், வீரமும், துணையும், சூழ்ச்சிகளும், இராஜதந்திரங்களும் போரை நடத்திச் செல்ல பயன்பட்டன..
ஆனால் அவை எதுவுமே போரை முடித்துவைக்க உதவவில்லை..
உங்கள் ஆயுதங்களோ, பழியுணர்ச்சியோ, கோபமோ, பகையோ, ஆத்திரமோ, வருத்தமோ இந்தப் போரை முடிக்கவிடாது..”
கண்ணனை குழப்பமாகப் பார்த்த பீமன்,
“அப்படியானால் நாளையோடு இப்போர் முடிந்துவிடாதா..? பாஞ்சாலியின் சபதமும்,
நான் அவளுக்கு செய்து கொடுத்த சத்தியமும் நிறைவேறாதா..?
நான் துரியோதனன் மீது கொண்ட பழியணர்ச்சி தீரவே தீராதா..?”
என்று கேட்டான்..
“உறவினர்களுக்கிடையே பழியுணர்ச்சி உள்ளவரை எந்தப்போரும் என்றுமே முடியாது பீமா..” என்றவர், தர்மரின பக்கம் திரும்பினார்..
“தர்மா..
ஒருவேளை நாளை சல்லியன் எதிராக நீ நிறுத்தப்பட்டால், என்ன செய்வாய்..?” என்று கேட்டார் கிருஷ்ணர்..
“கௌரவர் படைக்குத் தலைமை தாங்கி போரிட்டாலும், சல்லியன் எனது மாமன்..
வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்..
அவரை வணங்குவேன்..
அவரை வெல்ல, அவரது ஆசிகேட்டு நிற்பேன்..
கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு போரிடுவேன்..”
என்றார் தர்மர்..
“தர்மா..
சற்று முன்பு என்னிடம் சரணாகதி என்றாயே.. எனது உத்தரவைக் கேட்டு நின்றாயே..
எனது உத்தரவு இதுதான்.
நாளை சல்லியனை எதிர்க்கப் போவது நீதான்..
அதேசமயம், சல்லியனை மனதால் சரணாகதி அடைய உன்னால் இயலுமா..? களத்தில் எதிரிமேல் கருணை கொண்ட விழிகளோடு உன்னால் போரிட இயலுமா..?
எதிரியின் அஸ்திரங்களுக்கு பதிலாக எய்யும் உனது அஸ்திரங்களை, சிறிதும் கோபப்படாமல், எய்த முடியுமா..?
என்னைக் கண்டால் உன் மனதில் தோன்றும் அன்பும், கருணையும், சல்லியனைக் களத்தில் காணும்போது வெளிப்படுத்த இயலுமா..?”
என்று கேட்ட கிருஷ்ணரின் ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து கொண்டார் தர்மர்..
சல்லியனின் முன்கோபத்தோடு போரிடும் எவரின் ஆற்றலும், ஆயிரம் மடங்காகப் பெருகி, சல்லியனையே அடையும் என்பதால், கோபமே படாமல், கருணையோடு போரிடச் சொல்கிறார் கிருஷ்ணர்..
எதிரியின் வலிமையைக் கூட்டாமல், பகையுணர்ச்சியைக் கூட்டாமல், கருணையையும் அன்பையும் கூட்டி, எதிராளியை செயலிழக்கச் செய்யச் சொல்கிறார் கிருஷ்ணர் என்பதும் தர்மருக்கு தெளிவாகப் புரிந்தது..
“முடியும் கிருஷ்ணா.. என்னால் முடியும். உன்னிடம் அடைவது போலவே, சல்லியனிடமும் என்னால் சரணாகதி அடைய இயலும் கிருஷ்ணா..”
என்று உறுதியாகக் கூறினார் தர்மர்..
“இது சாத்தியமே இல்லை அண்ணா..” என்று பீமன் இடைமறிக்க..
“சாத்தியம் தான்..
இது சாத்தியம் தான்..
தூணிலும், துரும்பிலும், பரந்தாமன் இருக்கிறான் என்றால், எதிரே நிற்கும் எதிரியிலும் பரந்தாமன் இருக்க முடியாதா..
என்னால் சல்லியனில் கிருஷ்ணனரைக் காண இயலும். அதனால், இது சாத்தியம் தான்..”
என்று உறுதியான குரலில் கூறினார் தர்மர்..
“நல்லது தர்மா..
குருஷேத்திரப் போர் நாளை நிச்சயம் முடிந்துவிடும்..
இதை முடிக்கப்போவது, பாண்டவரின் வீரமோ, கிருஷ்ணரின் உறுதுணையோ அல்ல..
இப்போரினை முடிக்கப்போவது உறவுகளுக்கிடையேயான அன்பு மட்டுமே..
மண்ணாசையால், பொன்னாசையால்,
பெண்ணாசையால், அதிகார போதையால், அகம்பாவத்தால் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு போரும், காலம் காலமாய் தொடர,
கர்ணன் போன்ற துணையும்,
பீஷ்மர் மற்றும் துரோணர் போன்ற வீரமும்,
சகுனி போன்ற சூழ்ச்சியும்,
கிருஷ்ணர் போன்ற உபதேசங்களும் துணையிருக்கலாம்..
ஆனால் அப்போரினை முடிவுக்கு கொண்டுவர, சல்லியனுக்கு எதிராக நீ காட்டப்போகும் அன்பு ஒன்றாலேயே முடியும்..”
என்ற கிருஷ்ணரின் வார்த்தைகளில் இருந்த உண்மை, மறுநாள் போர் முடிந்து, பாண்டவர்கள் வெற்றி பெற்ற பிறகுதான் பீமனுக்குப் புரிந்தது..!
நமக்கும் புரிகிறது..!!
ஆம்..
மகாபாரதம் வெறும் இதிகாசமோ, வீரகாவியமோ, புராணக்கதையோ மட்டுமல்ல..
ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் போராட்டம்..
இறுதியில், அன்பால் மட்டுமே எந்தவொரு வாழ்க்கைப் போராட்டத்தையும் வெல்ல முடியும் என்பது நம் அனைவருக்கும் பாரதம் உரைக்கும் பாடம்..!
அன்பு எனும் இறுதிச்சுற்று











