12/9/2018 ஸ்ரீ பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்!
திருவாரூர் – தஞ்சை மார்க்கத்தில் திருவாரூரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
விளமர் என்று புராணத்திலும், தற்போது விளமல் என்றும் வழங்கப்படும் இதற்கு திருவாரூரிலிருந்து டவுன் பஸ் வசதி உண்டு.
பஸ் நிறுத்தத்திற்கு வெகு அருகில் கோவிலைக் காணலாம். காவிரித் தென் கரைத் தேவாரத் தலங்களில் இது 90ஆவதாகும்.
தலபுராணம்
தில்லையில் நடராசனைக் கண்டு களித்த பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் பாம்புருவாகவும், புலிக்காலாகவும் மாறித் திருவாரூரில் கமலாம்பிகையைத் தரிசித்து, அவள் கூறியவண்ணம், விளமர் என்னுமிடத்தில் விமலாக்கவைரம் என்னும் தேவலோக மண்ணால் லிங்கம் பிடித்து வழிபட, அதில் மகிழ்ந்த ஈசனார் அவர்களுக்குப் பிரத்யட்சமாகி, அஜபாவன நர்த்தனம் ஆடித்தன் ருத்ர பாதத்தைக் காட்டியருளினார் என்பது இத்தலப்புராணமாகும்.
தசரதர் புத்திரபாக்கியம் வேண்டித் தவமிருந்த தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கு பைரவர் ஷேத்ரபாலகராகப் பிரத்யட்சமானதால், தனியாக நவக்கிரக சந்நதி கிடையாது. இங்கு திருமாலின் சிரசில் எம்பெருமானார் திருவடி வைத்திருப்பது மற்றொரு சிறப்பு.
திருவாரூர் தியாகராஜன் முகத்தையும், இங்கு ருத்ரபாதத்தையும் ஒரே நாளில் தரிசிப்போருக்கு பிறவாநிலை கிட்டும் என்பர்.
மூலவர் பதஞ்சலி மனோகரர் என்று பெயர் கொண்டுள்ளார்.
சிவனாரின் மூன்றாவது தீக்கண்ணைப் போல, இங்கு மதுரபாஷினி என்னும் திருநாமம் கொண்டுள்ள அம்பிகைக்கு நெற்றியில் சந்திரன் குளிர்ச்சியான மூன்றாம் கண்ணாக அமைந்துள்ளது பெரும் சிறப்பு. தன்னை தஞ்சமென வந்த அடியோருக்குக் கருணைக்கடலாக விளங்கும் தாயாகிறாள்.
தலச்சிறப்பு
இறக்கும் தருவாயில் உள்ளோருக்காக இங்கு மோட்சதீபம் ஏற்றுகிறார்கள். அவர்களுக்குப் பிறவிச் சங்கில் அறுந்து விடும் என்பது நம்பிக்கை.
கோள்களினால் ஏற்படும் சகலதோஷங்களுக்கும், குறிப்பாக ராகு கேதுவினால் உண்டாகும் காலசர்ப்ப தோஷத்திற்கு, இது பரிகாரத்தலமாக விளங்குகிறது.











