ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி ஆமாவாசை தினத்தை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதோஷ வழிபாட்டுடன்
ஆடி அமாவாசை விழா தொடங்கியுள்ளது. சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில்
சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.
சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆடி அமாவாசை விழா பிரசித்தி பெற்றது. சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா ஆகஸ்டு 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு 7 நாட்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆகஸ்டு 8ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14 ஆம் தேதி வரை லட்சக்கணக்கானோர் மலையேறி சுவாமி தரிசனம் செய்வர்.
இந்த நாள்களில் காலை 4 முதல் மாலை 4 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மலைப்பாதை திறக்கப்பட்டது.
அன்று ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்றனர்.இந்த நிலையில் இன்று காலை மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்களில் பிரதோஷ வழிபாட்டுடன் ஆடி அமாவாசை விழா கோலாகலமாக தொடங்குகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனத்திற்காக குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெரிசலைத் தவிர்ப்பதற்காக பக்தர்கள் வெள்ளைப்பாறை வழியாக
சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து பின்னர் புதிய பாதை வழியாக வெளியே வந்து சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரும்பும் பாலத்தின்
வலதுபுறம் கீழே இறங்கும் வகையில் ஒருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.











