அண்ணாமலையும் அருணை மாமுனிவரும்
ஸ்ரீ பகவானது வாழ்க்கை முறையும், அனுபவமும் “அருணாசலமே பகவான்” அல்லது அருணாசலனே ஒரு மானிட வடிவங் கொண்டு உலக மக்கள் உய்வதற்கு ரமணாசாரியனாக அருணையில் தங்கி, அருள்பாலித்தான் என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.
அருணாசலத்தைப் பகவான் தனக்கன்னியமாக ஒருநாளும் எண்ணியதேயில்லை. தானாகவே தன்னில் உணர்ந்து தன்மயமாகவே அனுபவித்தது. எப்பொழுதும் சகஜாத்மநிஷ்டையில் (ஸ்தித பிரக்ஞையில்) வாழ்ந்து காட்டியது. மேலும், பகவானுக்கு தன் சொரூப நிலையை விடாமலே எந்தக் காரியமும் செய்வது ஸ்வபாவமாக இருந்தது. அதற்குப் பல சான்றுகள் பகவானின் ஜீவிய காலத்திலேயே நடந்திருக்கின்றன.
மரணானுபவத்தினால் அடைந்த ஆத்மானுபவத்திற்கு பிறகும், பகவானுக்கு அருணாசலத்தினிடம் பித்ரு பாவமே இருந்திருக்கிறது. அதனால்தான் பகவான் வீட்டை விட்டு புறப்படும் போது எழுதி வைத்த கடிதத்தில்கூட “நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை வந்ததும் அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று இறைவனைக் கண்டதும், உடலின் வெப்பம் தணிந்து உவகை மேலிட்டவராய் “அப்பா! உன் உத்தரவுப்படி வந்து விட்டேன்” என்று தன் ஞானத் தந்தையிடம் தன்னை ஒப்புவித்திருக்கிறார்.
அண்ணல் ரமணர் ‘பிராம்மண சுவாமி’யாக பவளக் குன்றில் இருந்தபோது, அன்னை அழகம்மை தன் மகனை வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டுமென்று எண்ணினார்.
அது நிறைவேறாமல் போகவே மாளாத் துயரத்தில் ஆழ்ந்தார். அவர் ஊருக்குத் திரும்புமுன் அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று சந்நிதியில் நின்று கண்ணீர் பெருக “அப்பனே அருணாசலா! இனிமேல் வேங்கடராமன் என் பிள்ளை இல்லை. உன் பிள்ளை. உன் பிள்ளையை உன்னிடம் ஒப்படைக்கிறேன்” என்று கூறி ஆறாத்துயரத்துடன் அண்ணாமலையை விட்டு அகன்றார்.
ஸ்ரீ பகவான், தான் இயற்றிய அருணாசல நவமணிமாலை கடைசிப் பாடலில் “அம்மையுமப்பனு மாயெனைப் பூமியி லாக்கியளித்து” என்று பாடுகிறார். இப்படிக் கூறும் ஸ்ரீ பகவான் சில சமயம் ஹாலில் சோபாவிலிருந்தபடியே ஜன்னல் வழியாக அருணாசலத்தைப் பார்த்தபடி இருப்பார்.
அந்த பார்வை சலனமற்று விளங்கும். இதைக் கண்ட அடியார் ஒருவர் பகவானைப் பார்த்து, “நீங்கள் எப்போதும் ஏதோ ஒன்றைப் பார்த்துக் கொண்டி ருக்கிறீர்களே!” என்று கேட்டார். “அதுவா உங்கள் சந்தேகம்! என்னையே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கன்னியமாக எதுவும் இல்லை” என்று கூறித் தன் அபேத பாவத்தை விளக்கினார்.
ஒரு நாள் பக்தர் ஒருவர் பகவானைப் பார்த்து, “நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். பகவான் “ஆ! பார்த்திருக்கிறேன்” என்றார். அதற்கு அவர் “அந்தக் கடவுள் எப்படி இருப்பார்?” என்று கேட்டார்.
பகவான் கம்பீரமான முகப்பொலிவுடன் “இதோ பார்! ஒவ்வொரு வருஷமும் அருணாசலேச்வரருக்கு திருவிழா மிகக் கோலாகலமாக நடக்கும். நான் பார்ப்பதற்குப் போவேன். எனக்கு சைதன்யரைப் போல மதுர பாவமில்லை. அத்வைதம்தான். அருணாசலனே நான்! ஆனால் அந்த வைபவத்தைப் பார்க்கும்போது என் உடல் புல்லரித்து கண்ணீர் பெருகும்” என்று கூறி மௌனமானார்.
– கனகம்மா அவர்களின் “நினைவில் நிறைந்தவை” நூலிலிருந்து











