சுவாமிமலை
திருத்தணி
பழனி
பழமுதிர்சோலை
திருச்செந்தூர்
திருப்பரங்குன்றம்
அறுபடைவீடுகளின் இருப்பிடம்
தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுள்களில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு
கோயில்கள், ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என
அழைக்கப்படுகின்றன. அவைகள்:
1.திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
2.திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
3.திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
4.திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
5.திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
6.பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)
பொருளடக்கம்
- 1திருப்பரங்குன்றம்
- 2திருச்செந்தூர்
- 3பழனி
- 4சுவாமிமலை
- 5திருத்தணி
- 6பழமுதிர்சோலை
திருப்பரங்குன்றம்
முதன்மைக் கட்டுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,
மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட
நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில்
அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.
திருச்செந்தூர் (ஆங்கிலம்:Thiruchendur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்
வட்ட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று
போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இப்பேரூராட்சியில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி
அலுவலகம் உள்ளது.
திருச்செந்தூர் பேரூராட்சி,மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து35 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 52 கிமீ
தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 0.5 கிமீ தொலைவில் உள்ளது. [4].மதுரை சர்வதேச விமான
நிலையத்திலிருந்து 173 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
10.5 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரம்
திருச்செந்தூர் கோவிலின் கதவு
புவியியல் அமைப்பு
திருச்செந்தூரின் கிழக்கில் வங்காள விரிகுடாவும்,வடக்கே காயல்பட்டிணமும்,தெற்கே ஆலந்தலையும்,மேற்கே
மேலத்திருச்செந்தூரும் அமைந்துள்ளது.
சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில்
அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும்
சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. இது மட்டுமின்றி ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு
புகழ்பெற்றவை ஆகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர்
சுவையாக இருக்கின்றது.
வனத்திருப்பதி
வனத்திருப்பதி கச்சனாவிளை இரயில் நிலையம் அருகில் புன்னை நகரில் அமைந்துள்ள ஒரு அழகான பெருமாள் கோவில்.
திருச்செந்தூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.
பழனி
பழனி முருகன் கோயில்
பழனி, முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம்
கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
பழனி முருகன் கோவில் (அ) பழநி முருகன் கோவில் (Arulmigu Dhandayuthapani Swami Temple) முருகனது சிறப்புடைய கோவில்களில்
ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை
போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது
அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.
ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு
போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக
அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி
அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில்
குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் “பழம் நீ ” (பழனி) என அழைக்கப்படுகிறது.
பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும்
தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில்
உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம்
நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.
முருகன் சிலையின் சிறப்பு
முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது
ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக
கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு
(சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது
இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
போகர் வரலாறு
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும்.
அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ
நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.
அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால்
மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு
குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில்
வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.
கோவில் திருவிழாக்கள்
பழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்,
- தைப்பூசம்
- பங்குனி உத்திரம்
- சூரசம்ஹாரம்
சிறப்பு
பஞ்சாமிர்தம் – மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம்.
தங்கத் தேர் வழிபாடு
காவடி சுமந்த பக்தர்கள்
குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் (பழனி மலைக்கு கீழ்(அடிவாரத்தில்) உள்ளது)
உச்சியை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளது 1.யாணை பாதை ஏறுவதற்கு இதை பயன்படுத்தினால் எளிதாக இருக்கும் 2.நோ்
பாதை இதை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்
பிழை
பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே
திருவாவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று
என்று தவறாக எண்ணப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா
இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்
குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை.
வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால்
நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர்
உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.
வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன்
பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.
இழுவை ஊர்தி
பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல மூன்று இழுவைத் தொடருந்து ஒரு
கம்பிவட இழுவை ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது.
இழுவை ஊர்தி
இழுவை ஊர்திக்காக நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்
கம்பிவட ஊர்தி
பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல கம்பிவட ஊர்திகள்
அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் மீண்டும் ஒரு கன்பிவட ஊர்தி அமைக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
சுவாமிமலை
சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில்
உள்ளது. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு
சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை
வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில்
காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளதால் இக்கோயிலை சுந்தரேஸ்வரசுவாமி
கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர்.
பெயர்க்காரணம்
முருகப்பெருமான் இக்கோயிலில் ‘தகப்பன்சுவாமி’ எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை
என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என
அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது.
இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என
அழைக்கப்படுகிறது.
அறுபடை வீடு
முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல
நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம்
திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய
இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது.
இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில்
ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார்.
உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர்
ஆகியோர் சிலைகள் உள்ளன. சுவாமிநாதசுவாமியின் சன்னதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது.
இது இந்திரன் அளித்ததாகும். கருவறையில் முருகன் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள்
பாலிக்கின்றார்.
கும்பகோணம் சப்தஸ்தானம்
கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர்
கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்,
கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி
கோயில்(சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்) ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம்
முதலிடத்தைப் பெறுகிறது.
சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி
நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.
இவ்விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.
அருகில் உள்ள மற்றொரு முருகன் கோயில்
இக்கோயிலுக்கு அருகேயுள்ள மற்றொரு முருகன் கோயில் ஏரகரம் கந்தநாதசுவாமி கோயிலாகும். கும்பகோணத்திலிருந்து
சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் ஏரகம்
சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது
குடமுழுக்கு
2015 செப்டம்பர் 9 அன்று காலையில், இக்கோயிலில் இராஜகோபுரம், மூலவர் விமானம், சுவாமி அம்பாள் விமானம், மற்றும் பரிவார
தெய்வ விமானங்களுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது.
திருத்தணி
முதன்மைக் கட்டுரை: திருத்தணி முருகன் கோயில்
திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடத்தின் மலையின் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட
தலமாகும். திருத்தணி குன்றின் மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம்.[1] இக்கோயிலை தணிகை
முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
திருத்தணி முருகன் கோயில், (Thiruthani Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது
இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான்
வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும்.
ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால்
பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
திருத்தணி முருகன் கோயில்
சரவணப் பொய்கை, திருத்தணி முருகன் கோயில் தெப்பம்
வரலாறு
சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.
தல வரலாறு
தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து
கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி ஆகும்.
ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது.
தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம்,
கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும், திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி
மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி
மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப்
பொய்கை என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது.
இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது மடம் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக்
கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும்.
ஆகையால் அருணகிரிநாதர் இதை அழகு திருத்தணி மலை எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.
கோயில் அமைப்பு
இந்த கோயில் தணிகை மலை என்ற மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு
வளாகங்கள் உள்ளன. இக்கோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் உள்ளன. இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம்
எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான
சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது.
அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி
சந்நிதிகள் உள்ளன.
திறக்கும் நேரம்
வழக்கமாக காலை 5:45 மணி முதல் இரவு 09:00 மணி வரை கோயில் திறந்திருக்கும். சிறப்பு நாட்களில், கோயில் முழு நாளிலும்
மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநில எல்லைக்கு
அருகே திருத்தணி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து, திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.
பழமுதிர்சோலை
கோயில்
பழமுதிர்சோலை – முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது
இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ளது.
அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
பழமுதிர்சோலை முருகன் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில், இத்தலம் ஆறாம் படை வீடு ஆகும்,
மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி,
தெய்வானையுடன் அடியவர்களுக்கு அருள் செய்கிறார். இங்கு முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவில்
முற்காலத்தில் சோலைமலை என அழைக்கப்பட்டது
மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வையார் பாட்டிக்கு முருகப்பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம்
வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம், சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக் காட்டிய
உன்னதமான தலம் இதுவாகும். இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும்.
இத்தலத்தில் முன்னர் முருக வேல் மட்டுமே இங்கு இருந்ததாகவும், பின்னர் முருகன்–வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி
உருவாகியது என்பர்.
நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் ஆகியோர் முருகனை துதித்துப் பாடிய பெருமை வாய்ந்த தலமாகும்.
சோலை மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் பெருக்கெடுக்கும்
தீர்த்தம் மிகவும் சுவையாக உள்ளது. இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.
விழாக்கள்
சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி
கார்த்திகை தீபம்
வைகாசி விசாகம்
பங்குனி உத்திரம்
போக்குவரத்து
மதுரை மாநகரிலிருந்து பேருந்து மூலம் அழகர் கோவில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக நடந்தும், சிற்றுந்துகள் மற்றும்
வாடகை வண்டிகள் மூலம் சோலைமலை எனப்படும் பழமுதிர்சோலை அடையலாம்.











