பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வரும் முன்னோர்களை வரவேற்க தயாராவோம்.

முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடும் ஆடி அமாவாசை இந்த ஆண்டு ஆடி மாதம் 23ம் தேதி ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது.
அமாவாசை திதி ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 7.56 மணி வரை அமாவாசை நீடிக்கிறது. பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வரத்தயாராகும் முன்னோர்களை ஆடிஅமாவாசை நாளில் வரவேற்க தயாராவோம்.
முன்னோர்களுக்கு அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்பது மரபு.
பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை நாளில் பித்ருக்கள் அனைவரும் பூமியில் ஒன்று சேருவதாக ஐதீகம். அன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச்செய்து, அவர்களுடைய ஆசிகளைப் பெற வேண்டும்.
தை அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்கள் பித்ருலோகத்துக்குத் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்று நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
முன்னோர்களுக்கு வரவேற்பு
நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். அதுவே நம்முடைய முன்னோர்கள் வந்தால் அவர்களுக்கு பிடித்தமானவைகளை கொடுத்து வழிபட வேண்டும். பித்ருக்களுக்கு தேவையானவைகளை கொடுப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பங்கள், பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
நம்மை காண்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வரும் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணமே அவர்களை மகிழ்விக்கிறது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலையில் நீராடி, பின்னர் சிவாலயத்தில் சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். நம்மால் இயன்ற அளவு அன்னதானம் கொடுப்பது சிறப்பு.
நம்மை பாதுகாத்த முன்னோர்களுக்காக தர்பணம் அளித்து ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் பரம்பரை பரம்பரையாக நமக்கு நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.
பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நலம். இவ்வாறு தர்பணம் அளிக்காவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்கின்றது புராணங்கள்.











