திருஷ்டி கழிய ஞாயிற்றுக் கிழமையில் வீடு முழுவதும் இது போல் செய்யுங்கள்
பண்டிகை என்று வந்து விட்டாலே வீடு தலைகீழாக மாறிவிடுகிறது. சாதாரண நாட்களை
விட பண்டிகை நாட்களில் நம்முடைய உற்சாகத்திற்கு அளவில்லாமல் போய்விடுகிறது.
நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்து பேசும் அந்த தருணங்கள் மனதிற்கு
புத்துணர்வைக் கொடுக்கும். அதற்காகத்தான் எந்த ஒரு பண்டிகையையும் தவறாமல்
பலரும் அனுஷ்டித்து வருகின்றனர்.
எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் கால்களுக்கும், மூளைக்கும்
ஓய்வு கொடுக்கும் நாளாக பண்டிகை மாறி வருகிறது. பண்டிகையின் பொழுது நம்
வீட்டில் கண்டிப்பாக திருஷ்டிகள் பலவும் பட்டிருக்கலாம். இதை வீட்டில் இருந்து
நீக்குவது மிகவும் நல்லது. அதை எப்படி செய்யலாம்.?
பண்டிகையின் பொழுது நாம் நம்முடைய வீட்டில் தோரணங்களும், அழகிய வண்ணக்
கோலங்கள் போடுகின்றோம். புத்தாடை உடுத்தி, புன்னகை பூத்த முகத்துடன் அன்றைய
நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியிலும், உள்ளேயும் சென்று வருகின்றோம்.
இதனால் வீட்டில் அல்லது உங்கள் மேல் பல பேருடைய திருஷ்டிகள் பட்டிருக்கும்.
சில சமயங்களில் பண்டிகையின் பொழுது சில பேருக்கு ஏதாவது உடல் நலக் கோளாறு
வந்து விடும். அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் சமயங்களில் நிறைய பலகாரங்கள்
சாப்பிட்டு பண்டிகை முடிந்ததும் போதும்! உடல் ஆரோக்கியம் குன்றி பொலிவிழந்து
காணப்படும்.
பண்டிகையின் பொழுது ஏற்படும் திருஷ்டிக்கு எளிமையாக வீட்டில் ஒரு தூபம்
போட்டால் போதும். வீட்டில் இருக்கும் திருஷ்டிகள், தீய சக்திகள் நீங்கி பழைய நிலைக்கு
திரும்பி விடுவோம். தூபம் போடுவது என்பது ஒரு வீட்டில் ஹோமம் செய்வதற்கு
இணையானதாக கருதப்படுகிறது.
தூபத்தில் இருந்து வெளிவரும் புகையானது வீட்டை புத்துணர்வு அடைய செய்யும். வாரம் ஒருமுறை வீட்டில் தூபம் போடுவது மிகவும் நல்லது. சாதாரண தூபம் போடுவதை விட, அதில் மூலிகை பொருட்கள் சேர்த்து போடப்படும் தூபம் விசேஷமானதாக கருதப்படுகிறது.
இந்த பண்டிகையின் பொழுது நீங்கள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருந்திருப்பீர்கள். அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என்று உங்களுடன் உங்களுடைய மகிழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்று யாருடைய திருஷ்டியும் உங்களை தாக்காமல் இருக்க வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அன்று இது போல் தூபம் போட்டு விடுவது மிகவும் நல்லது.
அந்த காலத்திலெல்லாம் வீட்டில் தூபம் போடாமல் விளக்கு ஏற்றுவதே கிடையாது. வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு, வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைத்திருந்தார்கள். இன்று நம்மால் அதனை செய்ய முடியாவிட்டாலும், இது போன்ற தருணங்களில் ஆவது தூபம் போட்டு வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்க செய்யலாம்.
தூபக்காலில் கொட்டாங்குச்சியை எரித்து கிடைக்கும் நெருப்புத் தணலில் சாம்பிராணி போட்டு அதனுடன் சில மூலிகைகளை சேர்த்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் திருஷ்டிகள், கண் பார்வைகள், பொறாமைகள், கெடு பலன்கள் அனைத்தும் நீங்கும்.
குறிப்பாக அதில் வென்கடுகு போடுவது பகைவர்களின் துஷ்ட எண்ணங்களை நீக்கும். சிறிதளவு வேப்பிலையை காய வைத்து தூபத்துடன் சேர்த்தால் வீட்டில் இருக்கும் நுண்கிருமிகள் நீங்கிவிடும். உடல் ஆரோக்கியம் பெற குங்குலியம், வெட்டிவேர் சேர்க்கலாம்.
இந்த மூலிகைப் பொருட்களில் உங்களிடம் தூபத்திற்கு சேர்க்கும் மற்ற பொருட்கள் இருந்தாலும் அதையும் போட்டு வீடு முழுவதும் மூலை, முடுக்குகளில் எல்லாம் தூப புகையை காண்பித்து, வீட்டின் ஜன்னல் கதவுகளை எல்லாம் ஒரு மணி நேரமாவது திறந்து வைத்திருக்க வேண்டும்.
தூபம் காண்பிக்கும் பொழுது கட்டில், சோபா போன்ற பொருட்களுக்கு அடியிலும் தூபத்தை காண்பியுங்கள். ஒரு இடம் விடாமல் அந்த புகையானது வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள். இப்படி செய்யும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் கண் திருஷ்டிகள் நீங்கி ஆரோக்கியம் சீராக இருக்கும்.











