அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்–சேர்ந்தபூமங்கலம்
சிறப்பம்சம்: நவகைலாயங்களில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும்.
நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார்.
அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.
இரண்டும் சேர்ந்து “சேர்ந்தபூமங்கலம்” ஆயிற்று.
கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர்.
நவகைலாயங்களுக்கும் சென்று வழிபட்டால் நவக்கிரக தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் உண்டு.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
மூலவர் : கைலாசநாதர்
அம்மன்/தாயார் : அழகிய பொன்னம்மை
தீர்த்தம் : தாமிரபரணி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : சேர்ந்தபூமங்கலம்
மாவட்டம் : தூத்துக்குடி
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி, தை ஆடி அமாவாசை
வழிகாட்டி: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது.
தல சிறப்பு:
நவகைலாயங்களில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும்.
திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், சேர்ந்தபூமங்கலம், தூத்துக்குடி.
இக்கோயில் இரண்டு வாசல்களுடன் அமைந்திருக்கிறது.கன்னி விநாயகர், சந்திரன், சூரியன், சொக்கநாதர், மீனாட்சியம்மன், சனீஸ்வரர், பைரவர் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள முருகனை வலதுபுறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காணலாம்.
இக்கோயிலை பாண்டியன் குலசேகரன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என்பதற்கு சாட்சியாக மதுரை சொக்கநாதருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை: செல்வம் பெருக இங்குள்ள குபேரரை வழிபட்டுச் செல்கின்றனர்.
நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சைப்பொடி சாதம், தயிர்ச்சாதம் நைவேத்யம் படைத்து, வெண்தாமரை மலர் படைத்து வழிபடுகிறார்கள்.
தேவியருடன் குபேரன்: கருவறையின் மேலுள்ள விமானத்தில் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தேவியர் அவருடன் இருக்கின்றனர்.
தேவியருடன் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். கருவறையில் கைலாசநாதர், சுக்கிர அம்சத்துடன் காட்சி தருகிறார். அம்பாள் அழகிய பொன்னம்மையின் பெயரிலேயே பொன் இருக்கிறது.
இவள் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். விமானத்திலுள்ள குபேரரை வணங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஜாதகத்தில், சுக்கிரன் அனுகூலமாக இல்லாதவர்கள், நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சைப்பொடி சாதம், தயிர்ச்சாதம் நைவேத்யம் படைத்து, வெண்தாமரை மலர் படைத்து வழிபடுகிறார்கள்.
வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரை நேரத்தில் (காலை 6-7) இவரை வழிபடுவது விசேஷம்.
தீர்த்த சிறப்பு: தாமிரபரணி இத்தலத்தின் தீர்த்தம். நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசத்தில், பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, இவ்வூர் அருகிலுள்ள புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தை மற்றும் ஆடி அமாவாசையில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த போது, உலகை சமப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தார்.
அவரது சீடரான உரோமச ரிஷிக்கு தாமிரபரணிக் கரையின் பல இடங்களில் சிவலிங்கம் அமைக்கும் எண்ணம் எழுந்தது. அகத்தியரின் ஆலேசனைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார்.
அவை ஒதுங்கிய இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில், அவ்விடங்களில் கோயில்கள் எழுந்தன. ஒன்பதாவது மலர் கரை ஒதுங்கிய தலம் சேர்ந்தபூமங்கலம்.











