கற்குவேல் அய்யனார் கோயில் ஸ்தலவரலாறு
இப்போது கற்கோயிலில் கொலு வீற்றிருக்கும் கற்குவேல் அய்யனார் இதற்கு முன் குடிசையில்
குடியிருந்தார் என்றால் நம்ப முடியாதுதான்.
ஓரிரு பக்தராவது வருவாரா என்று எதிர்பார்த்து பூசாரி ஏங்கியிருந்த காலம் போய், இப்போது
கோயிலுக்கு பக்தர்கள் வராத நாளே இல்லை என்றாகிவிட்டது. ஒற்றையடிப்பாதை, மாட்டு
வண்டி பாதையாகி, இப்போது தார்ச்சாலை அமைந்துவிட்டது.
அதனால் பக்தர்கள் எளிதில் வந்து செல்ல வசதியாகவே இருக்கிறது. ஐவராஜா என்ற மன்னன்
அந்த நகரத்தை ஆண்டு வந்த நேரத்தில் அவரிடம் தலைமை மந்திரியாக இருந்து வந்தார்
அய்யன். மன்னனின் தோட்டத்தில் ஒரு அபூர்வ மாமரம் இருந்தது.
அதில் தினம் ஒரு கனி தோன்றும். அதை சாப்பிட்டால் அபூர்வ சக்தி கிடைக்கும். ஆகவே
அதற்கு பலத்த காவல் போட்டிருந்தான் மன்னன். ஒருநாள் நள்ளிரவு அந்த பழம் கனிந்து
மரத்திலிருந்து அருகிலிருந்த குளத்தில் விழுந்தது.
அந்த நேரம் கணவனை இழந்த பெண் ஒருத்தி தண்ணீர் எடுக்க வந்திருந்தாள். அவளே
அறியாதபடி அந்தக் கனி நீர்க்குடத்திற்குள் சென்றது.
விடிந்ததும் மரத்தில் கனியைக் காணாத காவலாளிகள் மன்னனிடம் விஷயத்தைக்கூற,
பிரச்னை பூதாகரமானது. அந்த ஊரில் உள்ள அத்தனை வீடுகளிலும் சோதனை நடந்தது.
விதவைப் பெண் வீட்டில் குடத்துக்குள் கனி இருப்பதைக் கண்டுபிடித்து அந்தப் பெண்ணை
குற்றவாளியாக மன்னன் முன் நிறுத்தினர்.
கோபம் கொண்ட மன்னன் சுண்ணாம்பு காளவாயில் அந்தப் பெண்ணை நிறுத்தி எரிக்க
உத்தரவிட்டான். ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று அந்தப் பெண் எவ்வளவோ சொல்லியும்
காதில் ஏறவில்லை மன்னனுக்கு. தலைமை மந்திரியாக இருந்த அய்யன் மனம் குமுறினார்.
‘அந்தப் பெண்ணே அறியாமல் இப்படி நடந்திருக்கலாம். விட்டு விடுங்கள்’ என்று கேட்டுக்
கொண்டும் மன்னன் மனம் மாறவில்லை. துயரத்தின் எல்லைக்குப் போன அந்த உத்தமி
மன்னனைப் பார்த்து, ‘‘இந்த ராஜ்ஜியம் மண்ணாகப் போகட்டும்.
உன் மந்திரி அய்யன் இருக்கும் இடம் மட்டும் ஒரு முறம் அளவுக்கு பசுமையாக இருக்கட்டும்’’
என்று சாபமிட்டாள். எதையும் பொருட்படுத்தாத மன்னன் அவளைக் கொன்று விட்டான்.
அன்று அவளுக்காகப் பரிந்து பேசிய அய்யன் இன்று கோயில் கொண்டிருக்கும் மணல் பரப்பை
மேலிருந்து பார்த்தால் முறத்தைப்போல காட்சி தரும். தன் இறுதி நாளில் அய்யன் கற்குவா
மரத்திற்குள் புகுந்து மறைந்தார் என்கிறார்கள்.
பிற்காலத்தில் அந்த வழியாக விறகு வெட்ட சென்றவர்கள் அந்த மரத்தின் வேர்களை வெட்ட,
ரத்தம் பீறிட்டது. அதில்தான் அய்யன் குடிகொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டவர்கள்
அங்கேயே கோயில் அமைத்தனர்.
கற்குவா மரத்தில் இருந்த காரணத்தால் ‘கற்குவா அய்யன்’ என்று அழைத்தனர். பின்னர் அதுவே
‘கற்குவேலய்யன்’ என்று மாறியது.
வருடந்தோறும் அய்யனாருக்கு அருகில் கோயில் கொண்டுள்ள பேச்சியம்மனுக்கு திருவிழா
எடுப்பது பூசாரிகளின் வழக்கம். ஒருநாள் திருவிழா நடத்தி முடித்துவிட்டு இரவானதும்
பூசாரிகள் ஊருக்குள் திரும்பிவிட்டனர்.
இரவு நேரத்தில் பேச்சியம்மன் கோயிலுக்குள் புகுந்த கள்வன் ஒருவன், அங்கிருந்த பொருட்களை திருடிக்கொண்டு வெளியேறினான். கோயிலை விட்டு அவன் வெளியே வந்தவுடன் அவன் பார்வை இழந்தான். தட்டுத் தடுமாறினான்.
அப்படியே மேற்கு நோக்கிச் சென்றான். அங்கே காவல் தெய்வமாக வீற்றிருந்த வன்னியராஜா கோபம் கொண்டு அவன் தலையைத் துண்டித்தார். ரத்தம் பீறிட மண்ணில் சாய்ந்தான் கள்வன்.
இந்தக் காட்சிகள் எல்லாம் ஊரில் தூங்கிக் கொண்டிருந்த பூசாரிகளின் கனவில் அப்படியே வந்தன. உடனே கிளம்பிச் சென்று பார்த்தனர். கள்வனின் தாயார் அய்யனிடம் முறையிட்டு அழுது கொண்டிருந்தாள்.
உடனே கருணை மிகுந்த அய்யன் கோயில் பூசாரியை அழைத்து, ‘தலை துண்டிக்கப்பட்ட கள்வன் மீது புனித நீரை தெளியுங்கள்… உயிர் பெறுவான்’ எனக்கூறி மறைகிறார். அதன்படியே உயிர் பெற்ற கள்வன் அய்யனின் திருவடியைச் சரணடைந்தான்.
அவர்கள் குடும்பத்தினரே வழிவழியாக இன்றும் கள்வன் சாமியாடியாக வருகிறார்கள். அது முதல் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி மூன்று நாட்கள் இக்கோயிலின் விசேஷ நாட்களாக மாறின.
கார்த்திகை முப்பதாம் நாள் கள்வர் வெட்டு திருவிழா விமரிசையாக நடக்கும். கார்த்திகை மாதத்தில் 29 நாட்கள் அமைந்தால், அடுத்து மார்கழி 1-ம் தேதிதான் கள்ளர் வெட்டு நடக்கும். யாருக்கும் அழைப்பு அனுப்புவதில்லை. பிரமாண்டமாக விளம்பரம் செய்வதில்லை. ஆனாலும், மக்கள் கூட்டம் கூட்டமாய், குடும்பம் குடும்பமாய் வந்து குவிந்து விடுகின்றனர்.
மூன்று நாட்களும் கோயிலை சுற்றிப் பரந்து விரிந்துள்ள நிலப்பரப்பில் கூடாரம் அமைத்து தங்கிவிடுகிறார்கள். இவர்களை அழைத்து வருவது யார்? அதற்கும் ஒரு கதை உண்டு.
கார்த்திகை ஒன்றாம் தேதி கொடி ஏற்றம் விசேஷ பூஜைகளுடன் ஆரம்பமாகிவிடும்.
அன்றிலிருந்து முப்பது நாட்களும் கோயிலில் பகல் நேரத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி இரண்டு வேளை நடக்கும். பூசாரிகளே வில்லுப்பாட்டு பாடுவார்கள். வில்லுப்பாட்டு கதைப்படி அய்யனார் வெள்ளைப்புரவியில் ஏறி திருவிழாவுக்கு பக்தர்களை அழைத்துச் செல்கிறார்.
ஒவ்வொரு ஊர் பெயராக சொல்லி அய்யனார் இந்த இந்த வழியாக செல்கிறார் என்று தொடங்கி மீண்டும் கோயிலுக்கு வருவதாக கதை முடிவு பெறும். அதேபோல கள்ளர் வெட்டு திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கனவில் அய்யன் வந்து அழைத்ததாக சொல்வதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும்.
கள்ளர் வெட்டு அன்று பகல் 3 மணி அளவில் இளநீர் ஒன்றின் மேல் பாகம் லேசாக சீவப்படும். அதன் மீது குங்குமம் பூசப்படும். அதன் மீது வெள்ளைக் கயிறு வைத்து சுற்றப்பட்டு அய்யனாரின் பாதத்தில் வைத்து பூஜைகள் நடத்தப்படும். கூடவே கள்ளர் சாமியாடுபவரின் கைகளில் கட்ட பாசக்கயிறு எடுத்து வரப்படும்.
வன்னியராஜா இளநீர் வெட்டும் அரிவாளை கொண்டு வந்து பூசாரிகள் கையில் கொடுக்க, அது சாமி பாதத்தில் வைக்கப்படும். கயிற்றின் ஒருமுனை, கள்ளர் சாமி ஆடுபவரின் கைகளில் சுற்றப்பட்டும், மறுமுனை வன்னியராஜா சாமி ஆடுபவர் கைகளில் இருக்கும்.
பின்னர் சாமி ஆடுபவர் மேளதாளங்கள் முழங்க, கோயிலின் எதிரே கடைகள் வைத்திருப்போரிடம் சென்று திருடுவது போல போல பொருட்களை எடுத்து வருவார். இந்த நிகழ்ச்சிக்கு ‘எடுப்பு எடுத்தல்’ என்று பெயர்.
அதில் கிடைத்த பொருட்களில் சிறிது வில்லுப்பாட்டு பாடியவர்களுக்கு கொடுக்கப்படும். அது முடிந்ததும் கோயிலில் இருந்து இளநீரை பூசாரிகள் கைகளில் ஏந்தியபடி வெளியே கொண்டு வருவார்கள். அதற்கு முன்பாக கள்ளர் சாமி தேரிக்கு செல்வார்.
அவரைத் தொடர்ந்து வன்னியராஜா கையில் அரிவாளுடனும், தளவாய் நல்ல மாடசாமி, பெரியாண்டவர், ஐவராஜா, கருப்பசாமி மற்றும் தேவதைகள் பின்தொடர்ந்து செல்வார்கள். இளநீரும் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படும்.
குறிப்பிட்ட இடத்துக்கு சென்றதும் கள்ளர் சாமி ஆடுபவரை கீழே படுக்க வைத்து, அவர் தலைக்கு அருகில் இளநீர் வைக்கப்படும். உடனே வன்னியராஜா அரிவாளால் இளநீரை இரண்டாக வெட்டி சாய்ப்பார். குங்குமம் பட்டு இளநீர் ரத்தம் போல மண்ணில் சிதறும்.
அந்த மண்ணை அள்ளிச் செல்ல பக்தர் கூட்டம் அங்கே பாயும். இப்போது கூட்டம் அதிகம் என்பதால் கள்ளர் சாமியை கீழே படுக்க வைக்காமல் இளநீர் மட்டும் கீழே வைத்து வெட்டப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து எடுக்கப்படும் மண் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
அதை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் கொழிக்கும். வியாபாரம் பெருகும், நோய் நொடிகள் அண்டாது என்பது நம்பிக்கை. அய்யனாருக்கு அருகில் குடிகொண்டுள்ள பேச்சியம்மனை வழிபடுவோர் வேண்டிய வரம் கிடைக்கப் பெறுகிறார்கள்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் நேர்த்திக் கடனாக மரத்தொட்டில், மர பொம்மை வாங்கி வைத்தால் அடுத்த வருடம் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் என்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் தேரிக்குடியிருப்புக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. சாதாரண நாட்களில் திருச்செந்தூரிலிருந்து காலை, மாலை வேளைகளில் மினி பஸ் கோயில் வரை செல்கிறது.
விசேஷ தினங்களில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. திருச்செந்தூரிலிருந்து கோயில் வரை டாக்ஸியில் செல்ல ரூ.150 முதல் 200 வரை ஆகும். சாதாரண நாட்களில் ஓட்டல் வசதி கோயிலில் கிடையாது. எப்போது போனாலும் குளிக்க வசதி உண்டு.
திருவிழா நாட்களில் மட்டுமே கோயிலில் தங்குவதற்கு வசதி. மற்ற நாட்களில் மாலையில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் இரவு தங்க முடியாது. பூரணை, பொற்கமலம் சமேதமாக அருள் பாலித்து வரும் கற்குவேல் அய்யனாரை வழிபடச் செல்ல வேண்டும் என்று நீங்கள் மனதில் நினைத்தாலே போதும்… அடுத்த கள்ளர் வெட்டு திருவிழாவுக்குள் உங்களையும்











