இன்றைய தலைமுறை. அறியாத ஒன்று – கூட்டுக்குடும்பம்
இடம் பத்தலை ….தலையணை இல்லை….போர்வை எனக்கு…என்ற சண்டைகளை மீறி தூங்கிய பிறகு
தலையணை எல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட …தலையணை பறி போனாலும்…. ஆளுக்கொரு டைரக்ஷனில் … உருண்டு..புரண்டு..மரண தூக்கம் தூங்கி ….
காலையிலேயே….அத்தை…சித்தி..யோட கைக்குழந்தை…பூபாளம் பாட…நை நைன்னு எரிச்சலோட தூக்கம் கலைந்து விழிப்போம்….
அடுத்து பல்துலக்கும் படலம்…
தாத்தாவோ மாமாவோ…பொறுப்பு இந்த டிபார்ட்மன்ட்டுக்கு…
இல்லையேல் Colgate tooth powder டப்பா ஒரே நாள்ல காலி…கொஞ்சமா எல்லார்கைலயும் போடறது…
Next காபி படலம்…
விறகு அடுப்பில்
பாலைக்காய்ச்சி…
ஈயம்பூசிய பித்தளை குண்டான்ல.
காபி கலந்து….ஓட்டல்ல அடுக்கற மாதிரி…20 பேருக்கு காபி கலந்து ஒவ்வொண்ணா கொஞ்சம் பெரிய பிள்ளைக கையில் தந்து தாத்தா சித்தப்பா மாமா என ஆண்களுக்கு கொடுத்து வர சொல்லுவாங்க…
பிறகு சின்ன பள்ளிக்கூடம் போல இருக்கும் வாண்டு பட்டாளத்தை வரிசையா உக்காரவச்சி உக்காந்து குடின்னு கைல கொடுத்தாலும் அதில் சிலது காப்பி டம்ளரை டபுக்னு கவிழ்த்து விட்டு….ரெண்டு முதுகுல வாங்கி #வீர் னு அலறும்….தாத்தாவோ பாட்டியோ சமாதானப்படுத்த….
வீட்டு
பெண்களுக்கு தயாராகும் அடுத்த டோஸ்…. டிகாக்ஷனில் காபி கொடுக்கப்படும்….
திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டே கதை பேசிக்கொண்டிருக்கும் எங்கள் கூட்டத்தில் அழுதழுது
கன்னத்தில் காய்ந்த கண்ணீர் கோடுடன் காபியை குடித்து விட்டு வந்து
அமரும் வாண்டுவை வலிக்குதா…சரி சரி. அழாதே….அத்தை தான அடிச்சாங்கன்னு
சமாதானபடுத்துவோம்……
அடுத்து குளியல் படலம்…
சித்தியோ…பாட்டியோ…பொறுப்பு இந்த டிபார்ட்மன்ட்டுக்கு
கதற கதற கண்ல சோப்பு சீயக்காய் பட்டாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும் துள்ளிக்குதிக்கும் ஜல்லிக்கட்டு கன்னுகுட்டிகளை குளிப்பாட்டி பவுடர் போட்டு தலை வாரி விட்டு அடுத்த செக்ஷனுக்கு அனுப்புவாங்க…
அப்பாடா…
டிபன் படலம்….
அணையா அடுப்பு காலை டிபன் முடிய 11 மணி ஆகும்…. எனக்கு குட்டி தோசை…எனக்கு ரோஸ்ட்…எனக்கு இட்லி…ன்னு விதவிதமா ஆர்டர் கொடுத்தாலும் கிளை அடுப்பை முடுக்கி விட்டு கட கடவென சப்ளை செய்யும் மாமியும் சித்திகளும்……
பத்துமணிக்கு மேல் அவங்க துணிகளை சர்ஃப்பில் நனைக்க …செல்ல மிரட்டலை மீறி
சோப்புக்குமிழிகளை அள்ளிக்கொண்டு…விளையாட ஓடுவோம்….
உண்டு முடித்ததும் ..வயது வாரியாக பிரிந்து தாயம்… பல்லாங்குழி… தோட்டத்து பப்ளிமாஸ் மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடுதல் என..பொழுது போகும்….வீட்டு பெண்கள் குளித்து துவைத்து. துணிகாயப்போட மாடிக்கு போகையில் நாங்களும் ஓடறது….மற்ற நேரத்ல மாடி கதவு பூட்டப்படும்….பாதுகாப்புக்காக….
யாருக்கேனும் எப்போதும் ஒரு கைக்குழந்தை இருப்பதால் வீட்டில் தூளி தொங்கிக்கொண்டே இருக்கும்…..
குழந்தையை குளிப்பாட்ட எடுத்து போகின்ற இடைப்பட்ட நேரத்தில் அதில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுவோம்… அதை உட்காரக்கூடாது தம்பிக்கு உடம்பு வலிக்கும் என்று இறக்கி விட்டுவிடுவார்கள்… பாட்டி
குழந்தையை குளிப்பாட்ட எண்ணெய் வெந்நீர் எடுத்து கொடுக்க…பவுடர் கண்மை எடுத்து வரன்னு….மதிய வேளை நெருங்கிடும்…..
மதிய உணவில் பச்சடி பொரியல் வறுவல்னு…பக்கத்துல இருக்கறவனை(ளை) விட நமக்கு குறையாம இருக்கான்னு பாத்துகிறது….இல்லன்னா கோவிச்சிகிட்டு சீன் போட முடியாதுல்ல..😜😜😜…..
மூணு மணிக்கு பெண்கள் சாப்பிட்டு வெற்றிலை பாக்கு போட்டுகிட்டே சிரித்து கதை அளந்து கண்ணயர்ந்து…..நாலு மணி போல் எழுந்து..
வீடு பெருக்கி…..
மாலையில்…புரச இலையில் சூடாக கட்டி தரும் மிக்ஸர் கடை பொட்டலம் வாங்கி தந்து…காபியைக் கொடுத்து
மாமாவின் தலைமையில் பார்க்குக்கு அழைத்து போக pack பண்ணி விட்ருவாங்க…
போகும் போதே பனாரஸில் பால்கோவா…வாங்கி கொண்டு போய் பார்க்கில் அமர்ந்து தின்றுவிட்டு… அங்கு ஒலிக்கும் ரேடியோ பாடலுடன் செய்திகளையும் கேட்டு….
வீடு திரும்புகையில் மாமா சொல்லும் சில டுபாக்கூர் கதை உண்மை கதைகளை கேட்டுக்கொண்டே வருவோம்
வீட்டுக்கு வந்து கை கால்களை கழுவி….இரவு
சாப்பாடு…கூடத்தில் வட்டமாக குழந்தைகளை அமரவைத்து…குண்டானில் சோறு போட்டு…சுடசுட சாம்பார் ஊற்றி ..தளதளவென பிசைந்து உருண்டை உருட்டி..
நடுவில் குழித்து…பொறியை வைத்து…புறங்கையில்.. சாம்பார் ரசம் வழிய… காதுகளில் பாட்டி சொல்லும் மந்திரவாதி கதைகள்..புராணக் கதைகளை கேட்டாங்கே வாய் பிளந்திருப்போம்…
ம்ம்ம்…சாப்பிடு… சாப்பிட்டால்தான் கதை… என்று தொடரும் போட்டுவிடுவார் பாட்டி…
மீதிக்கதை உறங்கும்போது தொடரும்…… பாட்டியின் மீதே கால்களை போட்டு கொண்டு இடது புறம் நான் … வலது புறம் நீ…என போட்டி போட்டு படுத்துறங்குவேம்..
அந்த மகிழ்வான நாட்கள். இன்றைய தலைமுறை. அறியாத ஒன்று.











