ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் –
இக்கோவில் பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே இருந்திருக்கக் கூடும். ஆனால் அது குறித்த உறுதியான செய்திகள் கிடைக்காதது துரதிர்ஷ்டமே. பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு பின்னர் கோயில் கட்டப்பட்டு விஸ்தரிப்பு செய்யப்பட்ட செய்திகள் நமக்கு தெளிவாகவும் விரிவாகவும் கிடைத்துள்ளன.
கோயிலுக்கு வலப்பக்கம் உள்ள திருச்சுழி சாலையை ஒட்டி தெற்கே ‘சூரியர புஷ்கணி’ என்னும் தெப்பக்குளம் பன்னிரெண்டாம் நூற்றாண்டிலேயே இருந்தது என்பதை தெப்பக்குளத்தில் உள்ள ஒரு கல்வெட்டு உறுதி செய்கிறது. எனவே, தெப்பக்குளம் இருந்த காலத்தில் கோயிலும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அக்காலத்தில் இக்கோயில் பிரசித்தி பெற்றதாக இருக்கவில்லை என்பதையும், சிறியதாக இருந்திருக்கும் என்பதையும் நாம் கணிக்க முடிகிறது.
திருவாள உடையார் சோழகங்க மகன் அருளாள அழக பெருமாள் கி.பி.1193 ல் இக்குளத்தை வெட்டியதாக தெப்பக்குள கல்வெட்டு கூறுகிறது. ஆனால், சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1216 ல் இக்கோயிலை குருசாப நிவர்த்திக்காக கட்டியதாக பிற்காலத்திய கல்வெட்டு கூறுகிறது.
இது ஒரு தவறான செய்தியாகும். ஏனெனில் சுந்தரபாண்டியனுக்கு முற்பட்ட ஜடாவர்மனின் கல்வெட்டு (கி.பி.1208)உள்ளதால் சுந்தரபாண்டியன் கோயிலைக் கட்டினான் என்பதை ஏற்க இயலாது.
அதிக அளவில் திருப்பணிகள் செய்து, கோயிலை விஸ்தரிப்பு செய்த சுந்தரபாண்டியனின் பெயரில் கல்வெட்டுக்கள் அதிகமாக உள்ளதால் கோயிலை கட்டியவன் என்ற பொதுவான பெயர் அவனுக்கு ஏற்பட்டு விட்டது.
வளர்ச்சி படிகள்:
1.கி.பி. 11, 12 ம் நூற்றாண்டில் வெறும் வில்வ வனமாய் இருந்தது.
2.கி.பி.1193ல் திருவாள உதயன் சோழகங்கன் மகன் அருளாள பெருமாள் தெப்பக்குளத்தை வெட்டினான். இச்செய்தி தெப்பக்குள மடையின் இரு பக்கமும் உள்ள கல்வெட்டில் உள்ளது.
3.கி.பி.1216ல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கோயிலுக்கு விஜயம் செய்து கோயிலை மேலும் விரிவு செய்து, திருப்பணி செய்தான். மேலும் நித்திய நியம பூசை, விழா, கட்டளை முதலியவற்றை ஏற்பாடு செய்தான்.
4.கி.பி. 1219ல் உலக நாராயண சக்கரவர்த்தி அழகன் அருளாள பெருமாள் தன் பெயரில் சந்தி பூசை என்னும் சிறப்பு பூசையை ஏற்படுத்தினான்.
5.கி.பி.1225ல் தென் இலங்கை விக்கிரம பாண்டிய பெருந்தெருவில் வசித்து வந்த செகன் சேவகத்தேவன் என்பவன் அருந்தவ நாச்சியார் என்னும் பார்வதி சிலையையும் இலிங்க புராணத்தேவர்(லிங்கோத்பவர்) சிலையையும் நிறுவினான்.
6.கி.பி.1227ல் சோழகங்கன், இணக்கு நல்ல பெருமாள் என்னும் கற்சிலையையும், உற்சவர் பெண் தெய்வ(உலோக) சிலை ஒன்றையும் செய்தான். இதற்கு நெய்வேத்தியம் செய்ய நிலங்கள் தானமாக அளித்தான்.
7.கி.பி. 1231ல் துர்க்கை சிலை நிறுவப்பட்டது.
8.கி.பி.1232ல் அருளாளன் அழகப் பெருமாள் ஒரு கிணறு வெட்டினான்.
9.கி.பி.1500ல் மதுரை திருவாலவாய்ச்செட்டி என்ற வணிகன், இறைவன் தன் கனவில் சொல்லிய வண்ணம் சூரிய புஷ்கரணி தெப்பக்குளத்தை ஆழப்படுத்தி படித்துறைகளையும் கட்டி முடித்தான்.
10கி.பி.1804ல் இராமநாதபுரம் சமஸ்தானம் சேது ராணி ஸ்ரீ மங்களேஸ்வரி நாச்சியார் பூசைகளுக்கும், உற்சவங்களுக்கும் 2000 ஏக்கர் புன்செய், 350 ஏக்கர் 02 செ. நன்செய் நிலங்கள் கொண்ட கருவக்குடி, கோடாங்கினேந்தல், பெரிய புளியம்பட்டி ஆகிய கிராமங்களை கவுல் இனாம் சாசனமாக (வரி மட்டும் பெற்றுக்கொள்ளும் வகையில்) அளித்தார்.
11.கி.பி.1898ல் இராணி பர்வதவர்த்தினி நாச்சியாரும் நிலக்கொடைகளை வழங்கினார்.
12.31-1-1918 ல் செட்டி நாட்டு வணிகர் தி.அ.சு. அண்ணாமலை செட்டியார் நான்கு பக்க திருமதில் சுவரைக் கட்டி கும்பாபிசேகம் செய்தார்.
13.கி.பி.1920ல் மதுரை அறச்செல்வியார் திருமதி.வ.சோமசுந்தரத்தம்மையார் தென்புற பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களை பிரதிஷ்டை செய்து, கட்டிடம் ஒன்றை கட்டளையாகக் கொடுத்து குருபூசை நடத்த ஏற்பாடு செய்தார்.
14.கி.பி.1922ல் ரிசீவர் ஆட்சி நடைபெற்று கடன்கள் அடைக்கப்பட்டன.
15.21-1-1926ல் (குரோதன தை 8ம் நாள்) தெப்பக்குள பிரமடையை கருப்பசாமி கொத்தன் மகன் குப்புசாமி கொத்தன் என்பவன் கட்டினான். தெப்பக்குளத்திற்கு வடக்கேயுள்ள தபசு மண்டபத்தை ஒட்டி பின்புறத்தில் மடையடி கருப்பண்ணசாமி கோயிலையும் மேற்படியார் கட்டி வைத்தார்.
16.கி.பி.1943ல் சாது.தமா.ராமசாமி நாயக்கர் குடும்பத்தார், பல்லாயிரக் கணக்கில் பணம் செலவழித்து சூரிய புஷ்கரணி குளத்தை பழுதுபார்த்தார். இதே காலத்தில்தான் வினை தீர்க்கும் விநாயகர் கோயிலும் கட்டப்பட்டது.
17.கி.பி.1949ல் ஜமீன் ஒழிப்பால் ரிசீவர் ஆட்சி முடிவடைந்தது. இதே காலத்தில் மேற்கு பிரகாரத்தில் சன்மார்க்க சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இடைக்காலத்தில் இரண்டு தேர்களும், தேரை ஒட்டியுள்ள மண்டபமும் கட்டப்பட்டது. தெப்பக்குள வடகரையில் வினை தீர்க்கும் விநாயகர் கோயிலும் கட்டப்பட்டது. வடமேற்கு மூலையில் விநாயகர் கோயிலொன்றும் கட்டப்பட்டது. சுவாமி கருவறைக்கும் தற்போது அம்மன் கருவறைக்கும் இடையே உள்ள சிறிய அறையில் இருந்த அருந்தவம் செய்த நாச்சியார் மீனாட்சியாக தற்போது உள்ள அம்மன் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
18.20-4-51 ல் நல்லையா நாயுடு தக்காராக நியமிக்கப்பட்டார். கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.
19.31-8-55ல் பரம்பரை மற்றும் பரம்பரை அல்லாத தர்மகர்த்தாக்கள் நியமிக்கப்பட்டனர்.
20.26-12-61ல் சாது.தா.ராமசாமி நாயக்கர் தக்காராக நியமிக்கப்பட்டார். மு.மல்லையா சர்மா உதவி தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டார்.
21.13-10-65 ல் நிர்வாக திட்டம் சீரமைக்கப்பட்டது.
22.1966ல் கோயில் அலுவலகம், உள் மண்டபம், தேவார பாடசாலை கணபதி சுவாமிகளின் முயற்சியால் கட்டப்பட்டது. மதில் சுவரை ஒட்டி கிழக்கு மூலையில் இருந்த நவகிரக சிலைகளை மகா மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் ச.வீரப்பன் செட்டியார் அமைத்தார்.
23.14-1-73ல் தெப்பகுளம், பிரகார மண்டபத்துடன் சாது.த.ராமசாமி நாயக்கரால் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
24.1975ல் இச்சா, ஞான, கிரியா சக்தி சிலைகள் அம்மனின் கருவறையினைச் சுற்றி வைக்கப்பட்டன.
25.1976ல் துர்க்கைக்கு முன்பாக மண்டபம் கட்டப்பட்டது. மேலும் சூரியன், உஷா, சாயா தேவி சிலைகள் நிறுவப்பட்டன.,
26.1977ல் தெப்பக்குளம் செப்பனிடப்பட்டது. வடக்கு படித்துறையில் சித்தி விநாயகர் கோயில் பழுது பார்க்கப்பட்டது.
27.1977ல் தெப்ப உற்சவம் இராமசாமி நாயக்கர் குடும்பத்தாரால் நடத்தப்பட்டது.
28.5-2-78ல் நாயன்மார்கள் படிமங்களுக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆசார்ய சுவாமிகள்,ஜீர்ணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிசேகம் நடத்தினார்.
29.1979ல் சுப்பிரமணியர், மயில்வாகனம், பலிபீடம் அமைக்கப்பட்டது. சாது.தா.ராமசாமி நாயக்கர் முயற்சியால் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அண்ணாமலையர், சண்டிகேசுவரர், விசாலாட்சி, கன்னி விநாயகர், சங்கரநாராயணர், வள்ளி, முருகன், தெய்வானை, கற்பக வல்லியம்மன், சப்த கன்னிகள், பைரவர், கார்த்திகை, சந்திரன், ரோகிணி, அனுக்ஞை விநாயகர், துவார பாலகர் நிறுவப்பட்டது.
30.1979ல் சுற்றுப் பிரகாரம் முழுவதும் கல்தள வரிசை, குடி தண்ணீர், குழாய் வசதி ஆகியவற்றை எஸ்.எஸ்.கருப்பசாமி செய்துள்ளார்.
31.11-5-1984ல் (சித்திரை 29) இராசகோபுரம் திருப்பணி முடிக்கப்பட்டு, திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது. இதற்கு மூல காரணமாக இருந்து அருந்தொண்டு ஆற்றியவர்கள் எஸ்.எஸ்.கருப்பசாமி மற்றும் டி.ஆர்.தினகரன் ஆவார்கள்.











