கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும்.
ஆண்டு தோறும் மார்கழி மாதம் 27ஆம் நாள் வைஷ்ணவத் திருத்தலங்களில்,
‘கூடாரவல்லி’ என்ற பெயரில் ஒரு வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த நாளில்
ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த தம்பதியர்
கூடுவார்கள் என்பது ஐதிகம்.
மாதங்களில் சிறந்தது மார்கழி. அதை தனுர் மாதம் என்றும் போற்றுகிறோம்.
மார்கழி மாதம் தேவர்களின் நேரமான விடியற்காலையில் “யார் ஒருவர் பிரம்ம
முகூர்த்தத்தில் எழுந்து, பக்தியுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்கள்,
ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை தனுர்மாதமான
மார்கழி மாத ஒருநாள் வழிபாட்டில் கிடைக்க பெறுகிறார்கள்.
மாதம் முழுவதும் வழிபட்டால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது
கணக்கில் அடங்காது. சிவ-பார்வதியின் அருளைப் பெறுவதற்காக
திருவெம்பாவையையும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அருள் பெறுவதற்கு
திருப்பாவையையும் மார்கழியில் அதிகாலையில் பாராயணம் செய்பவர்களுக்கு
இறை அருள் விரைவில் பெறுவர்
ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ
கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள்
“கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா” எனும் பாடலை பாடி, “மூடநெய் பெய்து
முழங்கை வழி வார” என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரஅடிசல்
நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
நெய் வழிய அக்கார அடிசல்
“கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே vதோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.” என்று தன் 27வது பாசுரத்தில் கண்ணனை நினைத்து பாடியுள்ளார்.
கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த நாளில் குறிப்பாக
வைஷ்ணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த ‘சர்க்கரைப் பொங்கல்’
எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர்.
ஆண்டாளின் வேண்டுதல்
பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம்
செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து
படைப்பதாகs கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள்.
ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு
அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில்
வந்த எம்பெருமானாராகிய ராமானுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள்
வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச்
சமர்ப்பித்தார்.
இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் 27ஆம் கூடாரவல்லி வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் mதயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
குருவும் சுக்கிரனும்
ஜோதிட ரீதியாக கூடாரவல்லிக்கு குருவும் சுக்கிரனுமே காரக கிரகம் ஆகின்றனர். குருவும் சுக்கிரனும் ஜோதிடத்தில் நைசார்கிக சுபர்கள் ஆவர். அவர்கள் இருவரும் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்துவிட்டாலே வாழ்வில் கூடாதது என்பது கிடையாது எனலாம்.
திருமணம், குழந்தை பேறு, வசதி வாய்ப்பு , மகிழ்ச்சியான வாழ்க்கை இப்படி எது வேண்டுமானாலும் குரு மற்றும் சுக்கிரனின் அருள் இன்றி நிறைவேறாது.
கணவன் மனைவி ஒற்றுமை
கூடாரவல்லியின் சிறப்பு உணவான அக்காரவடிசலுக்கும் குருவும் சுக்கிரனும்தான் காரகர். ஆம்! நெய் மற்றும் இனிப்பின் காரகர் குரு பகவான். சுவையான இனிப்பு உணவிற்க்கு சுக்கிரனும் காரகர் தான். கால புருஷ ராசிபடி குரு பகவான் ஒன்பது மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளான தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதிகளாக விளங்குகிறார்.
மேலும் சந்திரனின் வீடான கடகத்தில் உச்சமாகிறார். சுக்கிர பகவான் போஜன ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடான ரிஷபம் மற்றும் கணவன் – மனைவி, நண்பர்கள், பொதுத்தொடர்பு, கூட்டாளிகள் ஆகியவர்களை குறிக்கும் ஜென ரஞ்சக ராசியான துலாராசிக்கும் அதிபதியாவார்.











