“நிறைவு செய்யமுடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக்கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம். மன அமைதி முதலில் போயிற்று. மனதின் பலம் போயிற்று செயல் திறன் போயிற்று. உடல் நலம் போயிற்று நற்குணங்கள் போயின எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவுபோய் சோகம் படிந்தது.
ஆகையினால் மனதின் இந்நிலையை மாற்றியமைக்க மனதின் தரத்தை உயர்த்த முறையான உளப்பயிற்சி அவசியமாகிறது. நமது மனவளக்கலை பயிற்சியில் மனம் தன் திறமையையும் உறுதியையும் வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சி தான் அகத்தவ பயிற்சி ஆகிய குண்டலினியோகமாகும் ஆகும்.
தன்னைப்பற்றி தன் தேவையைப் பற்றி தன் செயலின் விளைவைப் பற்றி தன் தகுதியைப் பற்றி தன் மதிப்பைப் பற்றி ஆராய்வது தான் தற்சோதனை (Introspection) என்கிற தன்னை ஆராயும் பயிற்சியாகும்.
இந்தத் தற்சோதனை பயிற்சியில் வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. மனதில் தைரியம் வந்துவிடுகிறது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து விடுகிறது.
மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்து விட்டதால் பொறுமை அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. கடமை உணர்ந்து பொறுப்புணர்ந்து எண்ணத்தில் தூய்மையோடு காரியங்களை ஆற்றுவதால் எடுத்த காரியத்தில் வெற்றியும் கிடைக்கிறது”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
“துன்பம் குறைந்திட இன்பம் நிலைத்திடும்
இன்பம் பெருக்கிடத் துன்பம் விளைந்திடும்.”
துன்பம் தவிர்க்க:
“இன்பத்தை முறையோடு அளவுடன் அனுபவிக்கத்
துன்பமே பெரும்பாலும் தோன்றாது ஆய்ந்துணர்வீர்.”
இன்பம் மிக:
“இன்பமே அளவுமுறை மீற மாற
துன்பமாய் மாறிவிடும் இயற்கை உண்மை
இன்பமே துய்க்க வெனில் தோன்றுகின்ற
துன்பத்தை ஒழுக்கமுடன் தீர்த்தால் போதும்.”
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.










