தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, திட்டைத் திருத்தலம். பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது என்ற மகத்துவம் திட்டைத் திருத்தலத்துக்கு உண்டு. இந்தத் தலத்தில் சிவபெருமான் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடனும் அம்பாள் மங்களாம்பிகை என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் பஞ்சலிங்கத் தலமாக விளங்குகிறது. இங்கு நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் அமைந்து அருள்கின்றன. நடுவில் வசிஷ்டேஸ்வரர் அருள்கிறார். அதனால், இது பஞ்சபூதத் தலமாகவும் விளங்குகிறது.
🌼
இந்தத் தல இறைவி சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.
இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்தத் தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும். தேவர்களின் ராஜகுருவான பிரகஸ்பதி வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது.
தேவர்களின் குரு என்றும், ராஜகுரு என்றும் உயர்ந்த ஸ்தானத்துக்கு வந்தாலும், எந்த கர்வமும் இல்லாமல், சிவபூஜை செய்வதிலேயே ஈடுபட்டு வந்தார் பிரகஸ்பதி. திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வில்வம் சமர்ப்பித்து, நமசிவாய மந்திரம் ஜபித்தபோது சிவபெருமான் பிரகஸ்பதிக்கு காட்சியளித்தார்.
‘உலகைத் தன் அசைவில் வைத்திருக்கும் கிரகங்களில் நீயும் ஒருவன்’ என்றும் அருளினார். பிரகஸ்பதி எனும் ராஜகுருவுக்கு, குரு பதவியையும், குரு யோகத்தையும் தந்தருளிய புண்ணியம் நிறைந்த தலம் – திட்டை.
🌼
திட்டை குரு பகவான்
குரு பகவானுக்குத் தெற்கு நோக்கி தனிக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜ குருவாக நின்ற நிலையில், அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார் குருபகவான். இந்தத் தலம் குருப்பெயர்ச்சி பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. குருவை வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை











