அதுதான் காலம் – அதுதான் கடவுள்.
பத்திரிகைகளில் அந்தப் படத்தை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். அந்த வேலு பிரபாகரனா இவர் ?
இயக்குனர் வேலு பிரபாகரனை உங்களுக்கு நினைவு இருக்கிறதா ?

‘கடவுள்’ என்று ஒரு படம் 1997 ல் வெளி வந்தது. அதில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்திருந்தார் வேலு பிரபாகரன். அந்தப் படத்தில் அவர் பேசிய பகுத்தறிவு வசனங்கள் அந்த கால கட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
அந்த படம் வெளியான சில நாட்களுக்குப் பின் தற்செயலாக வேலு பிரபாகரனை சென்னை உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் சந்தித்தேன். வேறு யாருக்காகவோ ஹோட்டல் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார். வலியப் போய் வாழ்த்தி விட்டு வந்தேன்.
“உங்கள் துணிவான வசனங்களுக்கு பாராட்டுக்கள் சார். எல்லோருக்கும் வந்து விடாது இந்த தைரியம்” என்றேன். பணிவோடு சிரித்து என் பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டார். அதற்குள் நான் சந்திக்க வேண்டிய நண்பர் வந்து விட நான் அங்கிருந்து நகர்ந்தேன்.
ஆனாலும் வேலு பிரபாகரன் பேசிய அந்த புரட்சிகரமான வசனங்கள் வெகு நேரம் என் மனதுக்குள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.
ஆம். அர்த்தமுள்ள அனல் பறக்கும் வசனங்கள் அவை :
“நாகரிகத்திலும் செல்வச் செழிப்பிலும் முதலிடத்தில் இருந்த நம் நாடு
இன்று இப்படி தாழ்ந்து கிடப்பதற்கு என்ன காரணம் ?
தலைவிதி, பூர்வஜென்மம், பாவ புண்ணியம், கடவுள் செயல், இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள்தான் நாம் முன்னேறாமல் இருப்பதற்கு மூலகாரணம்.
அநீதியை எதிர்த்து போராட வேண்டிய இளைஞர்களும் மக்களும், பக்திக்காக பாத யாத்திரை போவது, மலை ஏறுவது, மாலை போட்டுக் கொள்வது, தீ மிதிப்பது, இப்படிப்பட்ட எந்த பலனும் இல்லாத மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும்வரை நம் நாடு ஒருபோதும் முன்னேற முடியாது.
சர்வ வல்லமை படைத்த கடவுள் என்று சொல்லிவிட்டு அந்த கடவுளை பாதுகாக்க பலத்த ஏற்பாடுகள் செய்து சிறை கூண்டுக்குள் பூட்டி வைப்பது போல கடவுளை பூட்டி வைக்கிறோம். அது ஏன் ?
அந்த சர்வ வல்லமை படைத்த கடவுள் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள மாட்டானா ? இப்படி தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் எப்படி மக்களை காப்பாற்ற முடியும் ?
படிப்புக்கு ஒரு கடவுள், பணத்துக்கு ஒரு கடவுள், இப்படி எல்லாம் நம் நாட்டில் இருந்தாலும், படிக்காத பாமரர்களும் பணமில்லாத ஏழைகளும் நம் நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள்.
இந்தக் கடவுள்களை எல்லாம் நம் அளவுக்கு கும்பிடாத அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் நம்மை விட அதிகமான படித்தவர்களும் பணக்காரர்களும் இருக்கிறார்களே அது எப்படி ?
நன்றாக சிந்தித்துப் பார்த்தால் கடவுள் நம்பிக்கையால் நாம் முட்டாள் ஆக்கப்பட்டு இருக்கிறோம் என்பது உங்களுக்குப் புரியும். கடவுள் என்ற மூடநம்பிக்கைக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் போராட வேண்டும்.”
இதுதான் அந்த வசனம்.
அப்படி போராடி முடித்த அந்த வேலு பிரபாகரனை புதிதான ஒரு கோணத்தில் காலை செய்திகளில் பார்த்தேன். திருச்செந்தூர் கோவில் முன்பாக பணிவோடும் பக்தியோடும் நின்று கொண்டிருக்கிறார் வேலு பிரபாகரன்.
இப்போதும் அவரை நான் பாராட்டுகிறேன். வெளியில் ஒரு வேடம் வீட்டுக்குள் ஒரு வேடம் போடாமல், தான் ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்வதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
ஆம். எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது இந்த தைரியம்.
சரி. பகுத்தறிவின் உச்சத்தில் இருந்த வேலு பிரபாகரனை, பக்தியின் உச்சத்துக்கு கொண்டு வந்தது எது ?









