அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோவில்.
மாகறல் கிராமம்.
திருஞானசம்பந்தர் பாடல் பதிகம் பெற்ற ஸ்தலம்.
செய்யாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகரங்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது.
மூலவர் மாகறலீஸ்வரர் சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்மன் திருபுவனநாயகி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.
வடக்குப் பிராகாரத்தில் தலமரம் எலுமிச்சை உள்ளது.
பிராகாரத்தில் பொய்யாவிநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், நால்வர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன.
விசாலமான வெளிப்பிரகாரம் வலமாக வந்து படிக்கட்டுகளையேறி, விநாயகரையும், மறுபுறம் சுப்பிரமணியரையும் வணங்கியவாறே, துவாரபாலகர்களைக் கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார்.
இறைவன் மாகறலீஸ்வரர் எங்கும் காண இயலாத உருவில் உடும்பின் வால் போன்று விளங்கக் காணலாம்.
இராஜேந்திர சோழ மன்னருக்கு பொன்னுடும்பின் வால் வடிவில் இவ்வாலயத்தின் இறைவன் காட்சியளித்துள்ளார்.
இத்தலத்தில் முருகப்பெருமான் மயில்மீது ஆறு திருமுகங்களுடன் இருதேவியர் உடனிருக்க வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக அக்னி தீர்த்தமும், செய்யாறும் உள்ளன.
அக்னி தீர்த்தத்தில் நீராடி அகத்தீசுவரரை வணங்கினால் எமலோக பயம் நீங்கி சிவலோகத்தில் எப்பொழுதும் வாழலாம் என்று தலபுராணம் விவரிக்கிறது.
மற்றொரு தீர்த்தமான சேயாறு இத்தலத்திற்குத் தெற்கில் ஓடுகிறது.
இத்தலத்தில் சோமவார தரிசனம் விசேடமாகும்.
பிள்ளைப்பேறு இல்லாதவர் இக்கோயிலை உடலால் வலம் வந்தால் பிள்ளைப்பேற்றை அடைவர் என்பர்.
இத்தலத்தைத் தேவேந்திரன் வழிபட்டுப் பேறு பெற்றான்.
இத்தலத்திற்கான சம்பந்தர் பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
இப்பதிகம் வினை தீர்க்கும் பதிகம் என்று போற்றப்படுகிறது.
திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இப்பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.










