இந்து தர்மத்தை அறிவோம் பெயர்க்காரணம் :-
இந்துதருமம் உலகிலேயே மிகப் பழையதும் மனிதர்கள் காலத்திற்கு முந்தையதும் என்றாலும், ‘இந்து’ என்ற பெயர் அண்மையதே.
எப்படி இந்தியா எனும் பெயர் அண்மையதோ, அதேபோல் இந்து என்ற பெயரும் அண்மையதே. அண்மையதே தவிர, இந்து எனும் பெயர் அந்நியது அல்ல.
பண்டைய பாரதநாட்டில், யோகி, யோகினி, பக்தன், சன்யாசி, சாம்கியவாதி, வேதாந்தினி, முனி, பண்டிதன், சுவாமி, சித்தன், சைவன், வைணவன், பௌத்தன் என்ற பெயர்கள் நிலவியிருந்தனவே தவிர இந்து என்ற பெயர் அப்போது இல்லை.
ஆதியும் அந்தமும் இல்லா எல்லாருக்கும் உடமையான, சராசரத்தின் எல்லாப் பொருள்களும் கட்டுப்பட்டு செயல்படும் அறநெறிக்கு அண்டத்தின் ஒரு புள்ளியான பூலோகத்தில் குடியிருக்கும் மானிடர்கள் வைத்த பெயரே “இந்து தர்மம்”.
கிரேக்கர்களும் பார்ஸிகளும் சிந்து நதிக்கு அப்பாலிருக்கும் தேசத்தைப் சிந்துஸ் என்றும் ஹிந்துஸ் என்றும் குறிப்பிட்டனர். (டரியுஸ் கல்வெட்டு கி.மு. 550-486) சிந்துநதியைப் பற்றிய குறிப்பு ரிக்வேதத்தில் இடம்பெற்றுள்ளது. ரிக்வேதத்தில் சப்த சிந்து என்று குறிக்கப்படுகின்றது.
நீர் வழிந்தால் நீர் சிந்துகிறது எனக் கூறுவார்கள், சிந்துநதி செழிப்பாக வழிந்தோடுவதால் அதை ‘சிந்து’ எனப் பெயரிட்டிருக்கலாம்.
இவ்வாறு சிந்துநதிக்கு அப்பால் இருக்கும் கண்டத்தையும், அங்கு வாழும் மக்களையும் ‘சிந்துக்கள்’, ‘ஹிந்துஸ்கள்’ என்றெல்லாம் அழைத்தனர். 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ‘ஹிந்துஸ்தான்’ என்று தென் ஆசியாவைக் (இந்தியா, வங்காளம், ஆப்கானிஸ்தான், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை, பூத்தான்) குறிக்கின்றது.
[Thapar 1993, p.77] 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன வரலாற்று நூலில் ‘ஹிந்து’’’’ எனும் சொல் பாரத மண்ணைக் குறிப்பிட உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
பண்டைய பார்ஸிகள் (Zoroastrians) இந்தியர்களை ஹிந்தூ என குறிப்பிட்டதன் காரணமாக, அரபிகள் இந்தியர்களை அல்-ஹிந்த் எனக் குறிப்பிட்டனர். 13-ஆம் நூற்றாண்டில், ஹிந்துஸ்தான் எனும் பெயர் பரவலானது. சமஸ்கிருதத்தில் ஸ்தானம் என்றால் இடம், நாடு எனப் பொருள்படும். ஹிந்துஸ்தான் என்பது ஹிந்துநாடு எனப் பொருள்படும்.
அதன்பிறகு 1450-ஆம் ஆண்டில்’ஹிந்துகா’ எனும் சமயநூலை காஷ்மீர் பண்டிதர்கள் படைத்தனர். ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் ‘ஹிந்துகுஷ்’ எனும் இடம் அமைந்துள்ளது. அதன் இயற்பெயர் பாரியாத்திர பர்வதம் ஆகும்.
அதன் பின் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தமாலா எனும் பக்திநூல் ‘இந்துதருமம்’ எனும் சொல்லைக் கொண்டு இந்தியாவில் தோன்றிய தருமநெறி வாழ்வைக் குறிப்பிடுகின்றது.
அதன்பின்னர் வணிகர்களாக நுழைந்து பின் நாட்டையே தட்டிப்பறித்த ஐரோப்பியர்கள், எல்லா இந்திய சமயங்களையும் ஒட்டுமொத்தமாக ‘ஹிந்து’ எனக் குறிப்பிட்டனர். அன்று முதலாக, இந்திய மண்ணில் தோன்றிய சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், சமணம், வேதாந்தம், கிராமபுர நம்பிக்கைகள் மற்றும் பற்பல சமயங்கள் எல்லாமே ஒட்டுமொத்தமாக ஹிந்துசமயம் என்று அழைக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல், இந்தியா எனும் சொல் இந்து எனும் சொல்லில் இருந்து பிறந்ததே! இந்தியாவின் இயற்பெயர் ‘பாரதம்’. (மகாபாரதம்: பாரதவர்ஷம்)
ஆசியாவில் அமைந்திருக்கும் இந்தோனேசியா எனும் நாடு ஒரு காலத்தில் இந்து நாடாகத் திகழ்ந்தது. இந்துவின் தேசம் என்பதால் அதன் பெரும்பாலான இடங்கள் தமிழ்/சமஸ்கிருத மொழிகளில் அமைந்திருக்கும்.
இந்தோனேசியா எனும் பெயர் ‘இந்து’ எனும் சொல்லில் இருந்தே பிறந்தது. இன்னமும் இந்தோனேசியாவில் இராமாயணம்/மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எல்லா மதத்தினராலும் போற்றிப் புகழப்படுகின்றன.
உண்மையில், பாரத மண்ணில் உதித்த மார்கங்கள் தருமநெறிகள், கர்மநியதி, மறுபிறப்பு, பரம்பொருளாகிய ஈஸ்வரன், வேதங்களை முதன்மையாகக் கொள்ளல் ஆகிய பல்வேறு முக்கிய கருத்துகளை உடையதாக திகழ்பவை ஆதலால் அவை யாவும் ‘சனாதன தருமம்’ என்றே நம் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
சுவைமிகுந்த கனிகள் நிறைந்துள்ள வியத்தகு விருட்சமே சனாதன தர்மம். சனாதன தர்மம் என்ற இந்த விருட்சம் தருமநெறி எனும் வேரால் தாங்கிப் பிடிக்கப்படுகின்றது.










