சங்கு சுவாமிகள்- பசுவந்தனை
எத்தனையோ மகான்கள் இந்த பூமியில் அவதரித்துள்ளனர். மகான்களது அவதார காலங்கள் மாறுபட்டிருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான்! அதாவது, இறை பக்தியை இயன்றவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது; வறுமை, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு உதவுவது. இவையே அவர்களின் நோக்கம்.அதன்படி, தங்களிடம் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும் பக்தர்களது வறுமையை மகான்கள் விரட்டினார்கள்.
அவர்களின் எளிய வாழ்வுக்கு என்னென்ன தேவையோ, அவற்றை என்றென்றும் கிடைக்கும்படி அருள்புரிந்தனர். வைத்தியர்களால் கூட தீர்க்க முடியாத- விதிப் பயனால் விளைந்த நோய்களை- தங்களது அருளாசியினால் பறந்தோட வைத்தார்கள் மகான்கள்.தென்தமிழகத்தில் கோவில்பட்டியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் பசுவந்தனை எனும் கிராமம் உண்டு. இங்கே அவதரித்த சங்கு சுவாமிகள் என்பவர், மிகச் சிறந்த சித்த புருஷர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறந்தது, சமாதி ஆனது முதலான விவரங்கள் பல காலமாக அறியப்படாமலே இருந்தது. என்றாலும், சுவாமிகளுடன் இருந்த சீடர்களது காலத்தைக் கொண்டு ஓரளவு ஊகித்து அறிந்துள்ளனர்.
அதாவது, சங்கு சுவாமிகள் பிறந்தது கி.பி. 1785 என்றும், ஜீவசமாதியானது 1870 என்றும் அனுமானிக்கப்படுகிறது. சங்கு சுவாமிகளின் தந்தையார் பெயர் சிவஞான தேசிகர். இவருக்கு இரு மகன்கள். மூத்தவர் தங்கப பிள்ளை; இளையவர் சங்கு சுவாமிகள் (தங்கப் பிள்ளையின் வாரிசான- ஏழாவது தலைமுறையினர் பசுவந்தனையில் இன்றும் உள்ளனர். இவர்களில் மூத்தவரான பிரம்மநாயகம், சங்கு சுவாமிகளின் சமாதி வழிபாடுகளை கவனித்து வருகிறார். அடுத்தவரான ஐ.மாடசாமி பிள்ளை பசுவந்தனை அருள்மிகு கயிலாய நாதர் ஆலயத்தில் கணக்கராகப் பணிபுரிகிறார்).
சங்கு சுவாமிகளுக்கு திருமணம் ஆகவில்லை.
சங்கு சுவாமிகள் எப்படி இருப்பார் என்பதற்கான தகுந்த புகைப்பட ஆதாரங்கள் இன்றுவரை கிடைக்கவில்லை. எனினும், ‘இளம் வயதில் சுவாமிகள் இப்படித்தான் இருந்திருப்பார்!’ என்ற யூகத்தின்பேரில், அவரின் அன்பர்கள் வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில்… கட்டுமஸ்தான தேகம்; சாந்தமும் தெய்வீகமும் தவழும் திருமுகம்; கம்பீரமான மீசை; திருநீறும் ருத்திராட்சமும் துலங்கும் திருமேனி என அருள் ததும்பும் வடிவமாகத் திகழ்கிறார் சுவாமிகள்.
சங்கு சுவாமிகள் அவதரித்த பசுவந்தனையிலேயே இவரது ஜீவசமாதி இருக்கிறது. சமாதியின் மேல் லிங்கப் பிரதிஷ்டை. முன்னே நந்திதேவர். தவிர, இங்கு விநாயகரும் தரிசனம் தருகிறார். ஜீவசமாதி, சுதைச் சிற்பங்கள் நிறைந்த விமானத்துடன் திகழ்கிறது. சுற்றுப் பிராகாரத்தில் வலம் வந்தால், சங்கு சுவாமிகளின் சிஷ்யரான நத்தக்காடு சங்கு சுவாமிகளின் சமாதி இருக்கிறது. மேலும் கோவிந்தபுரம் சங்கு சுவாமிகள், சிங்கிலிப்பட்டி சங்கு சுவாமிகள், மாவிலிப்பட்டி சங்கு சுவாமிகள் முதலான சிஷ்யர்களும் சங்கு சுவாமிகளுக்கு உண்டு. இவர்களது சமாதி வெவ்வேறு இடங்களில் உள்ளன.
தினமும் காலை ஒன்பது மணிக்கு சங்கு சுவாமிகளின் ஜீவசமாதிக்கு வழிபாடு நடைபெறுகிறது. இங்கு வைக்கப்படும் எந்தவொரு பிரார்த்தனையும், குறைவின்றி நிறைவேறி விடுவதாகச் சொல்கிறார், இங்கு பூஜைகள் செய்து வரும் பிரம்மநாயகம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் அசுவினி நட்சத்திர தினத்தன்று சங்கு சுவாமிகளின் குரு பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அன்று திரளான மக்கள் கூடுவர். சிறு வயதில் இருந்தே இறை சிந்தனை, உயிர்களிடத்தும் பயிர்களிடத்தும் மிகுந்த அன்பு என வாழ்ந்தவர் சங்கு சுவாமிகள்.
தனக்கு எவரேனும் கெடுதல் செய்திருந்தாலும், அவர்களிடமும் அன்பு பாராட்டுவது சுவாமிகளது வழக்கம். பசுவந்தனை ஸ்ரீகயிலாயநாதர் ஆலயம் மற்றும் இதனருகே தான் உருவாக்கிய நந்த வனத்திலும் எப்போதும் இருந்து வந்த சுவாமிகளை, இவருடைய வீட்டார் மட்டுமின்றி ஊர்மக்களும் புரிந்து கொள்ளவே இல்லை. வீடு.. உதவாக்ககரை என்றது; ஊரோ… ‘பித்தர்’ என்றது.
தன்னிலை மறந்த நிலையில், பல மணி நேரம் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்தபடி இருப்பார் சுவாமிகள். மேகக் கூட்டங்களின் முடிவில்லா பயணத்தையே வெறித்து கவனிப்பார். அப்போது, எவரேனும் வந்து ஏதேனும் கேட்டால்… எளிதில் சுயநினைவுக்கு வர மாட்டார். சில நேரம் வாய் விட்டுச் சிரிப்பார்; சில நேரம் கேவிக் கேவி அழுவார். இரவு வேளைகளில், வயல்காடுகளில் தனியே உலவிக் கொண்டிருப்பார். மழை- வெயில் என்று எது குறித்தும் அறியாமல், தன்னுள் ஆழ்ந்திருக்கும் அவரை எந்த இயற்கையும் பாதித்ததில்லை.
பள்ளிக்குச் சென்று பாடம் படித்தாரா… தெரியவில்லை. ஆனால், வாழ்வியல் பாடம் மொத்தத்தையும் அறிந்திருந்தார் சுவாமிகள். பசி, உணவு என்றெல்லாம் எண்ணியது கிடையாது. ஆனால், பிறரது பசியைப் போக்கியுள்ளார். பிறரது சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொண்டு உழைத்திருக்கிறார். வயலுக்கு சொந்தக்காரர்களது உத்தரவுக்கும் வேண்டுகோளுக்கும் இணங்கி,
இரவு- பகல் பாராமல், வயலுக்கு நீர் பாய்ச்சி இருக்கிறார். அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களையும் வாழைக் குலைகளையும் கூலியாள் போல் தலையில் சுமந்தபடி, சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறார். ஆனால், இதற்காக ஊதியமே பெற்றுக் கொள்ளவில்லை சுவாமிகள். எவர் எந்த வேலையைக் கொடுத்தாலும், புன்னகைத்தபடி அதைச் செய்து முடிப்பார்.
வீட்டு வேலைகள் எதுவும் செய்யாத சங்கு சுவாமிகள், பிறர் தரும் வேலைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிப்பதை அறிந்த அவரின் தந்தையார், மனம் வெதும்பினார். ‘வீட்டு வேலைகளைச் செய்வதற்கு அவர் தயாராகவே இருக்கிறார். நீங்கள்தான் கொடுப்பதே இல்லை. எவர் சொல்லியோ வேலை செய்ப வர் நீங்கள் சொல்லியா செய்யாமல் இருப்பார்?’ என்று சொன்னார்கள் சிலர். அதன்படி, ஒரு நாள் சங்கு சுவாமிகளை அழைத்துக் கொண்டு வயலுக்குச் சென்றார் அவரின் தந்தையார். ஏர் பூட்டிக் கொடுத்தார்.
பிறகு, ‘மதியத்துக்குள் இந்த வயல் முழுதும் உழுது முடிக்க வேண்டும். கவனமாக வேலை செய்’ என்று சொல்லிச் சென்றார். சுவாமிகள் வயலை உழ ஆரம்பித்தார்.
மதியம் நெருங்க நெருங்க சூரியனின் வெம்மை, உழுது கொண்டிருந்த மாடுகளைச் சுட்டெரித்தது. ‘வெயிலில் மாடுகள் மிகுந்த சிரமப்படுகின்றனவே…’ என்று இரக்கப்பட்டு, தான் உடுத்தி இருந்த வேட்டியை அவிழ்த்து, அதை நீரில் நனைத்து ஈரம் சொட்டச் சொட்ட மாடுகளின் மேல் போட்டார். ‘மகனுக்கு இட்ட வேலையை எந்த அளவுக்கு முடித்துள்ளான்?’ என்று அறிய, அப்போது அங்கே வந்தார் அவரின் தந்தை. மாடுகளின் மீது மகன் ஈர வேட்டியை நனைத்து போட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமானார்.
”அடேய் பைத்தியக்காரா… மாடுகளின் மேல் ஈரத் துணியைப் போட்டு இப்படி வேலை செய்கிறாயே… உடல் தகிக்கிறது என்று அந்த மாடுகள் உன்னிடம் சொன்னதா?” என்று சொல்லிவிட்டு, சுவாமிகளை ஆவேசத்துடன் அடிக்கத் துவங்கினார்.
தன் மேல் அடி விழுந்தபோதும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், ”தந்தையே… என்னை அடிக்காதீர்கள்…. உங்களுக்குத்தான் கைகள் வலிக்கும்” என்றார் சுவாமிகள். அவ்வளவுதான்…. அந்த நிமிடமே தன் உடலில் இனம் புரியாத வலி ஏற்படுவதை உணர்ந்தார் தந்தையார். மகனை எந்தக் கையால் அடித்தாரோ, அந்தக் கையிலும் தோளிலும் கடும் வலி ஏற்பட்டது. ‘ஐயோ… வலி தாங்க முடியவில்லையே’ என அலறியபடி, வயலிலேயே சாய்ந்து விட்டார். அப்போது, தந்தையின் தோளையும் கையையும் மெள்ள வருடினார் சுவாமிகள். ”தந்தையே… கவலை வேண்டாம்… தங்களுக்கு ஏற்பட்ட வலி பறந்து போய் விடும்” என்றார். அடுத்த கணமே வலி, மாயமானது. மகனிடம் ஏதோ விசேஷ சக்தி குடி கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார் தந்தை. அதன் பின், அவனது செயல்களை கேலி செய்வதை அறவே நிறுத்திக் கொண்டார்.
இதேபோல், சுவாமிகளின் அண்ணன் அவரிடம் அவஸ்தைப் பட்டது தனிக் கதை!
ஒரு அதிகாலை வேளையில் சங்கு சுவாமிகளிடம், ”அடேய்… நம் வயலுக்குச் சென்று ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சு” என்றார். உடனே சுவாமிகள், ”நம் வயல் என்று தனியே இருக்கிறதா என்ன? ஊரில் உள்ள வயல்கள் அனைத்தும் நம்முடையதுதானே?” என்று கேட்டார் புன்னகையுடன்.
அண்ணனுக்குக் கோபம் வந்தது. ”ஏனப்பா… நம் வயல் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா? வயது மட்டும் ஏறிக் கொண்டே போகிறது. வாழ வேண்டிய வழி தெரியவில்லையே… சரி, நம் வயலைக் காட்டுகிறேன், வா!” என்றவர், சுவாமிகளின் கையைப் பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். அந்த இருட்டு வேளையில் சகோதரரின் உத்தரவுக்குமறுப்பேதும் இன்றி அவருடன் சென்றார் சுவாமிகள்.
”இதோ, இதுதான் நமது வயல். பொழுது விடிந்ததும், நான் மீண்டும் வருவேன். நம் வயல் முழுவதும் தண்ணீர் பாய்ந்திருக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அண்ணன். சகோதரரது உத்தரவுப்படி ஏற்றத்தின் மூலம் தண்ணீர் இறைத்து வயலில் பாய்ச்சினார் சுவாமிகள். இதைக் கண்ட பக்கத்து வயல்காரன், ‘இதுதான் தக்க தருணம்’ என்று மடையை தனது வயல் பக்கம் திருப்பி விட்டான். எனவே, நீர் முழுதும் அவனது வயலுக்குத் திரும்பியது.
விடிந்தது! தமது வயல், நீரால் நிறைந்திருக்கும் என்ற எண்ணத்துடன் வயலுக்கு வந்த அண்ணன், பக்கத்து வயலில் குளம் போல் நீர் தேங்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். சுவாமிகள் மீது ஆத்திரம் கொண்டார்.
”ஏண்டா… நம் வயலில் தண்ணீர் இறைக்கச் சொன்னால், அடுத்தவன் வயலுக்கு வேலை செய்திருக்கிறாயே… நம் வயலில் பொட்டுத் தண்ணீரை கூடக் காணோம். உனக்கு மூளை பிசகி விட்டதா?” என்று கத்தினார்.
சுவாமிகள் தண்ணீர் இறைப்பதை நிறுத்தாமல், ”அண்ணா… எங்கே பாய்ந்தால் என்ன… அதுவும் நம் வயல்தானே? அந்த வயலிலும் தண்ணீர் இல்லையே…” என்று சொல்ல… ஆத்திரமுற்ற அண்ணன், வரப்பில் கிடந்த கழியை எடுத்து, சுவாமிகளின் மேல் மாறி மாறி அடித்தார்; அப்படியே களைப்புற்றார்.
சங்கு சுவாமிகள் தன் மேல் விழுந்த அடிகளைப் பொருட்படுத்தாமல், புன்னகைத்தார். ”அண்ணா! இப்படி ஓங்கி ஓங்கி அடித்தாயே… உன் கைகள் என்னமாய் வலிக்கும். நான் கொஞ்சம் தடவி விடவா?” என்று பரிவுடன் கேட்டார். அவ்வளவுதான்! அடுத்த விநாடி, அனல் மேல் பட்ட புழு போல் அண்ணன் விழுந்து துடித்தார். இதைக் கண்டு சகிக்க முடியாத சுவாமிகள், ”கவலை வேண்டாம் அண்ணா… உமது வலி இந்தக் கணமே நீங்கும்” என்று சொல்ல… அதுவரை சகோதரனை துவள வைத்த வலி, சட்டென்று அகன்றது. அதிர்ந்து போனார் அண்ணன்.
முன்பு சுவாமிகளின் தந்தை… இப்போது அண்ணன்! ‘அடிபட்டவருக்கு வலிக்கும் என்பது சரி… அடித்தவருக்கு வலிக்குமா?’ என்று யோசித்த சகோதரர், ஏதோ ஒரு சக்தி சுவாமிகளிடம் இருப்பதை உணர்ந்தார்.
இந்தச் சேதி, மெள்ள மெள்ள அக்கம்பக்கத்து ஊர் வரை பரவியது. பிறகு, உள்ளூர்க்காரர்கள் எவரும் சுவாமிகளிடம் எந்த வேலையையும் தருவதில்லை. வேலைக்காரனைப் போல் சுவாமிகளைப் பயன்படுத்தி வந்தவர்கள், அவரைப் பார்த்ததும் மரியாதையுடன் கையெடுத்துக் கும்பிட்டனர்.
சுவாமிகள் வழக்கம் போல் இஷ்டப்படி திரிந்தார்; கிடைத்ததை உண்டார். அந்த ஊரில் உள்ள பாழடைந்த மண்டபம் ஒன்றில் படுத்து உறங்கினார். பல முறை நிஷ்டையில் ஆழ்ந்து விடும் சுவாமிகள் சமாதி நிலைக்குச் சென்று விடுவார். இந்த நிலையில் அவரைப் பார்ப்பவர்கள், ‘ரொம்ப களைப்புல தூங்கறார் போல…’ என்றே கருதுவர்.
ஒரு நாள்! தந்தை மற்றும் சகோதரருடன் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டார் சுவாமிகள். மூவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் சுவாமிகளின் தாயார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க… சுவாமிகள் மட்டும் அப்படியே கண் மூடி தவத்தில் மூழ்கிக் கிடந்தார். இந்த தருணத்தை பயன்படுத்தி, அவருடைய அண்ணன், நைஸாக சுவாமிகளின் தட்டில் இருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் கண்விழித்த சுவாமிகள், தட்டைப் பார்த்தார். அண்ணனோ சுவாமிகளை ஏளனத்துடன் பார்த்தார்.
அவ்வளவுதான்… சட்டென்று சுவாமிகள் தட்டு முழுவதும் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பி வழிந்தன! அதிர்ந்து போன அண்ணன் குழப்பத்துடன் சுவாமிகளை ஏறிட்டார்.
”அண்ணா… வேண்டுமானால், இந்த உணவையும் எடுத்துக் கொள்ளுங்கள். பகவான் பற்றிய சிந்தனையில் இருக்கும் என்னை, பசி ஒன்றும் செய்யாது” என்றார் சாந்தமாக.
ஒருமுறை, சிங்கம்பட்டி ஜமீனான நல்லக்குத்தி பெரியசாமித் தேவர் ராஜா, பூர்வ ஜன்ம வினைப் பயனால் ‘மகோதரம்’ எனும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பெரிதும் அவதிப்பட்டார். (சங்கு சுவாமிகள் காலத்தில் ஜமீனை ஆண்டு வந்தவர் இவர். பசுவந்தனையில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் இருக்கிறது சிங்கம்பட்டி. அம்பாசமுத்திரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு!) பசி எடுக்கும்; சாப்பிட முடியாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. வாந்தி, குமட்டல் என்று நரக வேதனை அனுபவித்து வந்தார் ஜமீன். இதைக் கண்ட அவருடைய குடும்பமே சோகத்தில் தவித்தது.
அரண்மனை வைத்தியர்கள், வெளியூர் வைத்தியர்கள் என்று பலர் முயன்றும், ஜமீன்தாரின் நோயை குணப்படுத்தவே முடிய வில்லை. தெய்வ பக்தியில் சிறந்தவரான ஜமீன், குடும்பத்தினரது வேண்டுகோள்படி, சிதம்பரம் சென்று நடராஜ பெருமானை தரிசித்து முறையிடுவது என முடிவு செய்தார். அதன்படி அமைச்சர் மற்றும் வீரர்கள் சூழ பல்லக்கில் பயணித்தார். நெடுநாள் பயணத்துக்குப் பின் சிதம்பரத்தை அடைந்த ஜமீன், நடராஜப் பெருமானின் ஆலயத்தினுள் நுழைந்தார்.
புனித தீர்த்தமான சிவகங்கை திருக்குளத்தில் நீராடி விட்டு, கனகசபையைக் கண்ணாரக் கண்டார். மலர்களால் சிவனாரைத் தொழுதார். அவரது கண்களில் இருந்து கரகரவென்று நீர் பெருகியது. ”பிறவி நோய் தீர்க்கும் பெருந்தகையே… அடியவர்களது இன்னல்களைக் களையும் அம்பல வாணா… அடியேனை படுத்தும் மகோதரத்தை நீக்கி அருள மாட்டாயா?” என்று வேண்டினார்.
ஆட்சியை மறந்தார்; ஆயிரங்கால் மண்டபத் திலேயே தங்கினார்; ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி ஆறு கால பூஜையை அனுதினமும் தரிசித்தார். பாலும் பழமும் உண்டு, விரதம் அனுஷ்டித்தார். ஆலயத்துக்கு வரும் பக்தர்களும் ஜமீன் குணமாக வேண்டி இறைவனிடம் பிரார்த் தித்தனர்.
இப்படியாக… ஒரு மண்டல காலம் அங்கு தங்கி இருந்தார் ஜமீன். 48-ஆம் நாள் விரதம் பூர்த்தியானது. ஆனால், மகோதர நோய் மறைய வில்லை. மனம் கலங்கினார் ஜமீன்.
அன்றிரவு! ஆலயக் கதவு சார்த்தப்பட்டது. உடன்வந்தோர் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். ஆறாத் துயரத்தில் தவித்த ஜமீன், நடராஜ பெருமானுக்கு அருகே சென்றார்.
”தில்லையம்பலவாசா! உன்னையே நம்பி வந்தேனே… உன்னை மட்டுமே நம்பி இருந்தேனே… என்னைக் கைவிடலாமா? ஒரு மண்டல காலம் உன் சந்நிதியில் தவமாய் தவம் இருந்து, உடல் நலம் குணமாகாமல் நான் ஊர் திரும்பினால், ஊரே என்னை மட்டுமின்றி உன்னையும் பழிக்காதா? எனவே, விடிவதற்குள் என் நோய் தீர வழி பிறக்க வேண்டும். இல்லையெனில், சிவ கங்கைத் தீர்த்தக் குளத்தில் விழ்ந்து என்னை நானே மாய்த்துக் கொள்வேன். இது சத்தியம்!” என்றார் ஜமீன்.
பிறகு, அயர்ச்சியில் சந்நிதியிலேயே தூங்கிப் போனார். அவரது கனவில் தோன்றிய நடராஜ பெருமான், ”அன்பனே! வருந்தாதே… உனக்கு ஏற்பட்ட நோயை எம்மால் குணமாக்க இயலாது. அதைத் தீர்க்க வல்ல ஒருவன் பாண்டிய தேசத்திலே பசுவந்தனை எனும் தலத்தில் உள்ளான். அவன் பெயர் சங்கு சுவாமிகள். எனக்கு மிகவும் வேண்டிய அடியவன். பரம ஞானி. விடிந்ததும் அவனைத் தேடிப் புறப்படு. நலம் பெறுவாய்!” என்று அருளினார்.
இறைவன் அருளியதில் குளிர்ந்து போன ஜமீன், விடிந்ததும் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, சிவனாரை வணங்கி விட்டு, பசுவந்தனை நோக்கிப் புறப்பட்டார். பல நாட்கள் பயணித்து, பசுவந்தனை திருத்தலத்தை அடைந்தார் ஜமீன்.
பல்லக்கில் ஜமீன் வருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்த ஊர்மக்கள், பல்லக்கைத் தொடர்ந்தனர். அவர்களிடம் ஜமீன், ”இந்த ஊரில் சங்கு சுவாமிகள் என்பவர் எங்கே வசித்து வருகிறார்?” என்று பவ்யமாகக் கேட்டார். ”சங்கு சுவாமிகளா… அப்படி ஒரு ஆசாமி இந்த ஊரிலேயே இல்லை” என்றனர் மக்கள். இருப்பினும் மனம் தளராத ஜமீன், ”இந்த ஊரில்தான் இருக்கிறார். ஒருவேளை, அந்த தவசீலரை நீங்கள் தரிசித்தது இல்லையோ…?” என்றார்.
அப்போதுதான் அந்தக் கும்பலில் இருந்த ஒருவன், ”மகாராஜா… இந்த ஊரில் சங்கு சுவாமிகள் என்று எவரும் இல்லை. ஆனால், சங்கு என்று ஒரு சோம்பேறி இருக்கிறான். ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற பாழடைந்த மண்டபத்தில் அந்த சோம்பேறி படுத்துக் கிடப்பான்” என்றான்.
மன்னரின் முகம் பிரகாசம் ஆனது. ”ஆமாம். அவர்தான். நான் அவரைத்தான் தரிசிக்க வேண்டும். எனக்கு வழி காட்டுங்களேன்” என்றார் கெஞ்சலாக. ஊர்ஜனங்கள் முன்னே நடக்க… பாழடைந்த மண்டபம் நோக்கிப் பல்லக்கு புறப்பட்டது. அங்கே- மண்டபத்தின் சிதிலம் அடைந்த திண்ணையில் கால் மேல் கால் போட்டு, ஏதோ சிந்தித்த பாவனையில் இருந்தார் சங்கு சுவாமிகள்.
பல்லக்கில் இருந்து இறங்கிய ஜமீன், சுவாமிகளை நோக்கி மெள்ள நடந்தார். கண்ணில் நீர் மல்க, அவரை வணங்கினார். தட்டுகளில் பழங்களும், பலகாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜமீனை ஏறெடுத்துப் பார்த்த சங்கு சுவாமிகள், ”என்ன அப்பனே… அந்த நடராஜ பெருமான், உன் நோயைத் தீர்க்க முடியவில்லை என்று என்னிடம் அனுப்பி இருக்கிறாரோ? எல்லாமே ஒரு நாடகம்தான்… இந்தா, இந்தப் பழத்தைச் சாப்பிடு” என்று தட்டில் இருந்த பழம் ஒன்றை எடுத்து ஜமீனுக்கு கொடுத்தார்.
இறை அருளால் கிடைத்த தெய்வப் பிரசாதம் எனக் கருதி அதை உண்டார் ஜமீன். என்னே ஆச்சரியம்! அந்தப் பழத் துண்டுகள் வயிற்றுக்குள் சென்றதும், ஒரு வித புத்துணர்வு ஜமீன்தாரை ஆட்கொண்டது. அமிர்தத்தை உண்டவர் போல் மகிழ்ந்தார். அந்த விநாடியே அவரை வாட்டி வதைத்த மகோதர நோய் போயே போனது!
ஆனந்த மிகுதியால் ஜமீன்தார் ஆடினார்; பாடினார். சங்கு சுவாமிகளுக்கு நன்றி தெரிவித்து விழுந்து வணங்கினார். அவரது மகிமையை ஊர் மக்களுக்கும் புரிய வைத்தார்.
சங்கு சுவாமிகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வைபவத்துக்கும் சிங்கம்பட்டி ஜமீனில் இருந்து உரிய மரியாதை இப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்கு எப்போதுமே தட்டுப்பாடு உண்டு. காரணம்- இங்கு ஆறு-குளங்கள் எதுவும் கிடையாது. எனவே மழை நீரை சேகரித்து வைத்து, அதைத் தட்டுப்பாடான காலங்களில் பயன்படுத்துவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் அதோகதிதான்!
இது போன்ற தருணத்தில் சங்கு சுவாமிகளே பல ஊருணிகளை (குளம்) ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது, அவர் எங்காவது பயணிக்கும்போது எதிர்ப்படும் எவராவது, ”சாமீ… ரொம்ப தாகமா இருக்கு… தண்ணி வேணும்” என்று கேட்டு விட்டால் போதும்… ஓரிடத்தில் உட்கார்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார். உடனே அவர்களும் சேர்ந்து தோண்டுவார்கள். சிறிது ஆழத்திலேயே தண்ணீர் ஊற்று போல் பீய்ச்சிக் கொண்டு வரும்.
சுவாமிகளின் அருள் திறத்தால் உண்டான பல ஊருணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. இவை ‘சங்கு சுவாமிகள் ஊருணி’ என்றே அழைக்கப் படுகின்றன.
எல்லா மகான்களையும் போலவே, தான் சமாதி ஆகப் போகும் காலம் இதுதான் என்று துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் சங்கு சுவாமிகள். அந்த நாளும் வந்தது! அன்று பசுவந்தனை ஸ்ரீகயிலாயநாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுதார். பிறகு, அவர் சொன்ன அதே நேரத்தில், ஜப மாலையுடனும் சின் முத்திரையுடனும் சமாதி ஆனார் சுவாமிகள்.
அவர் கூறியிருந்தபடி சமாதி அமைத்து, அவரது பூத உடலை நல்லடக்கம் செய்தனர் சீடர்கள்.
இன்றும் தன் சமாதி கோயிலை நாடி வரும் பக்தர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி, நல்லருள் புரிந்து வருகிறார் சங்கு சுவாமிகள். நாமும் அவரின் திருவடி பணிவோம்; திருவருள் பெறுவோம்!
தலம் பசுவந்தனை சிறப்பு சங்கு சுவாமிகள் சமாதி கோயில்.
எங்கே இருக்கிறது? கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது பசுவந்தனை. மதுரை- நெல்லை ரயில் மார்க்கத்தில், கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவு. மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவு. தூத்துக்குடி- மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது? பசுவந்தனைக்கு அருகில் உள்ள நகரம் கோவில்பட்டி. தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் கோவில்பட்டியை அடைவது எளிது. கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி முதலான ஊர்களில் இருந்து பசுவந்தனைக்குப் பேருந்து வசதி உண்டு. என்றாலும் பேருந்து சர்வீஸ் குறைவாகவே உள்ளது.
தொடர்புக்கு P. மாடசாமி, கணக்கர், பசுவந்தனை 628 718 ஓட்டப்பிடாரம் வட்டம் தூத்துக்குடி மாவட்டம். மொபைல் 97878 04125










