அருள்மிகு சுந்தரகுஜாம்பிகா சமேத ஸ்ரீ வீழிநாதஸ்வாமி
அருள்மிகு காத்யாயினி அம்பிகா சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில்…????
திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலம்
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம்
தலவிருட்சம் : வீழிச்செடி
திருத்தலச் சிறப்புகள் : இத்திருத்தலம் தேவலோகத்திலிருந்து விமானத்தைத் தருவித்துப் பூசித்த தலம். இறைவன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு படிக்காசு அளித்து அதன் மூலம் சிவனடியார்களுக்கு அமுதூட்டிய தலம். வீழிச்செடிகள் நிறைந்திருந்தமையால் வீழிமலை என்ற பெயர் உண்டாயிற்று.
திருஞானசம்பந்தர்க்கு இறைவன் தாம் சீர்காழியில் எழுந்தருளும் திருக்கோலத்தை விண்ணிழி விமானத்தில் காட்டியருளிய தலம். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்சரபுரம், தட்சிணாகாசி, சண்மங்களத் தலம், சுவேத கானனம், ஆகாச நகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம் ஆகியன இத்திருத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
காத்யாயன முனிவர் புத்திரப்பேறுக்காக தன் மனைவி சுமங்கலையுடன் சிவனை வேண்டினார். சிவன் அம்பிகையை அவருக்கு மகளாகப் பிறக்கும்படி செய்தார். முனிவர் அவளுக்கு காத்யாயணி என பெயரிட்டு வளர்த்தார்.
திருமண வயதில் சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்ட, சுவாமி இத்தலத்திற்கு வந்து அம்பிகையை மணந்து கொண்டார் என்பது ஐதீகம். மாப்பிள்ளையாக வந்த சிவன் மாப்பிள்ளை சாமி என்ற பெயரில் மணக்கோலத்தில் அம்பிகையுடன் உள்ளார்.
கையில் பூச்செண்டு வைத்திருக்கிறார். அம்பிகைக்கும், சுவேதகேது என்ற பக்தனுக்காக எமதர்மனை கண்டித்த காலசம்ஹார மூர்த்திக்கும் சன்னிதிகள் உள்ளன.
இங்குக் கல்யாண சுந்தரேசுவரர் சிறப்பு மூர்த்தியாவர். பிரகாரத்தில் விநாயகர், முருகர், மகாலட்சுமி, சண்டேசுவரர், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன. மேலும் மகாலட்சுமி, காமதேனு, ரதிதேவி முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலமாக இத்திருத்தலம் சிறப்புப் பெறுகிறது.
தலவரலாறு : மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்கராயுதம் தேய்ந்து போனபோது ஆற்றல் பொருந்திய சக்கரம் பெறுவதற்காக விஷ்ணு சிவனை பூஜித்ததாக திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் புராண வரலாறு கூறுகிறது.
இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதை பொருத்துவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார். ஆயிரம் மலர்களால் சிவனை அர்ச்சித்தால் எண்ணியது கிடைக்கும் என்று அறிகிறார்.
அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார். ஆயிரமாவது மலர் இல்லை. இன்னொரு தாமரை மலரை கொண்டு வந்து அர்ச்சனை செய்ய நேரமும் இல்லை.
குறைந்த ஒருமலருக்குப் பதிலாக தாமரை மலருக்கு ஒப்பான தனது இருகண்களில் ஒன்றை பெயர்த்து எடுத்து பூஜையை முழுமையாக செய்து முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து விஷ்ணு விரும்பியபடி அவருக்கு சக்ராயுதம் கொடுத்து அருள் செய்த தலம்.
கோயில் அமைப்பு : இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூலவர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்திற்கு பின்புற கர்ப்பக்கிருஹ சுவற்றில் பார்வதி, பரமேஸ்வரர் திருஉருவங்கள் இருக்கின்றன. சிவன் சந்நிதியில் எதிரே மற்றொரு லிங்கம் இருக்கிறது.
மன்னர் ஒருவர் இங்கு திருப்பனி செய்தபோது பணிகளை சிவனே மேற்பார்வையிடும் வகையில் ஒரு லிங்கம் அமைத்தாராம். இவர் மூலநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தைவிட கர்ப்பக் கிருஹத்தின் மேல் இருக்கிற சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்பவேலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மூலவரின் வலப்பக்க மண்டப அறையில் கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் தோற்றத்தில் விஷ்ணு காட்சி அளிக்கிறார்.
கோயில் வடக்கு வீதியில் கீழக்கோடியில் சம்பந்தர் தங்கியிருந்த திருமடமும், மேற்குக் கோடியில் அப்பர் தங்கியிருந்த திருமடமும் உள்ளது.
இத்தலத்தில் வௌவால் நெத்து (வாவல் நெற்றி) மண்டபம் மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் உள்ளதாகும். கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள் சில தலங்களில் உள்ள அரிய திருப்பணிகள் நீங்கலாகச் செய்யும் ஒப்பந்தங்களில் இம்மண்டபமும் ஒன்றாகும்.
வௌவால் நெத்து கல்யாண மண்டபம் உள்ளது. இது மிகவும் அழகுடன் நடுவில் தூணில்லாமல் சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள அமைப்பு காண்பவரை வியக்க வைக்கும் சிறப்புடையது.
இறைவன் சந்நிதி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று கூறப்படுகிறது. 16 சிங்கங்கள் தாங்கும் சிறப்புடைய இவ்விமானம் திருமால் கொணர்ந்தது. “தன்றவம் பெரிய சலந்தரனுடலந்..” என்ற சம்பந்தரின் பதிகத்திலிருந்து அறியப்படுகிறது.
இத்தலத்தில்தான் ‘மிழலைக் குறும்பர்’ என்னும் வேடுவர் விளாங்கனியை நிவேதித்து அருள்பெற்றார்.
வீழிமிழலை
அருள்மிகு சுந்தரகுசாம்பிகை உடனுறை விழியழகர்
மரம்: விழிச்செடி
குளம்: விஷ்ணு தீர்த்தம்
முகவரி: திருவீழிமிழலை அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம், 609505
தொபே. 04366 273050
சோழவளநாட்டில் காவிரித் தென்கரையில் விளங்கும் 61ஆவது தேவாரத்தலம். நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது.
மயிலாடுதுறை – திருவாரூர் இருப்புப் பாதையில் பூந்தோட்டம் இரயில் நிலையத்துக்கு மேற்கே 10 கிமீ. தொலைவில் உள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இத்தலம் காத்தியாயன மகரிஷியின் யாகத்தில் தோன்றிய உமாதேவியாரைத் திருமணம் செய்துகொண்டு இறைவன் என்றும் மணக்கோலத்தோடும் இருக்கும் தலம்.
திருமால் சக்கரம் பெறும் பொருட்டு, நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூவைக்கொண்டு அர்ச்சிக்க, ஒருநாள் ஒரு மலர் குறைய, அதற்காகத் தமது தாமரை மலர் போன்ற கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்துச் சக்கரம் பெற்றதலம்.
திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞானசம்பந்த சுவாமிகளும் படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கியதலம். இத்தலத்து வடக்கு வீதியில் அப்பர் சம்பந்தர் திருமடங்கள் தனித்தனியே இருக்கின்றன.
மூவர் அருளிய தேவாரமும், சேந்தனார் பாடிய திருவிசைப்பாவும், அருணகிரி நாதரின் திருப்புகழும் உள்ளன.
விமானம்:
விண்ணிழி விமானம். இது விஷ்ணுவால் தாபிக்கப் பெற்றது.
மூலத்தானத்துக்குப் பின் பார்வதி பரமேசுவரரது திரு உருவங்கள் உள்ளன. இங்குக் காழிக் கோலத்தைச் சம்பந்தமூர்த்திக்கு இறைவன் காட்டியருளினார்.
விழா:
சித்திரைத் திங்களில் பெருவிழா நிகழும். மணக்கோலத் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. மணவாளப் பெருமான் திருவடியில் திருமால் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளம் இன்றும் இருக்கிறது.
சுவாமி நேத்திரார்ப்பணேசர், வீழியழகர் எனவும் வழங்கப் பெறுவர். அம்மை சுந்தரகுசாம்பிகை.
தீர்த்தம்: விஷ்ணு தீர்த்தம்.
தலவிருட்சம்:
வீழிச்செடி.
திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.










