நவபுலியூர் யாத்திரையின் 8வது ஸ்தலம் தப்பளாம்புலியூர்
இறைவன்: வியாக்ரபுரீசுவரர்
இறைவி : நித்யகல்யாணி அம்மன்
ஸ்தல விருட்சம்: காட்டாத்தி மரம் மற்றும் வன்னி மரம்
தீர்த்தம்: வியாக்ரபாத தீர்த்தம், பதஞ்சலி தீர்த்தம்
தப்பளாம்புலியூர் எனும் மண்டூகவியாக்ரபுரம், திருவாரூருக்கு தென்கிழக்கே சுமார் 5 கி.மீ.
தொலைவில் உள்ளது. மண்டூக மகரிஷிக்கும் வியாக்ரபாதருக்கும் அருள் வழங்கிய இடம்.
வியாக்ரபாதரின் புலிக்கால் புலிக்கை திருமேனியை நீக்கி முன்புபோல் பொலிவை
பெற்;றுத்தந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாதர், மண்டூக ரிஷி மூவருமே திருநடனக்காட்சியை
கண்டுகளித்ததால் நடராஜ மூர்த்தமே கல்லால் வடிவமைக்கப் பெற்று கோஷ்டத்தில் இடம்
பெற்றுள்ளது.
மண்டூகவியாக்ரபுரம் எனும் திருநாமம் இவ்விடத்திற்கு ஏற்பட்டது. தமிழில் தப்பளாம்புலியூர்
என்று அழைக்கப் பெற்றது. இத்தலம் சனி பரிகாரதலமாகும்.
ஸ்வயம்பு மூர்த்தம், மிக அழகிய திருக்குளம் வியாக்ர தீர்த்தம் பின்புறமாக உள்ள பதஞ்சலி
தீர்த்தம். இது சனி பரிகாரதலமாக அமைந்துள்ளதால் சனீஸ்வரபகவான் கிழக்கு நோக்கி தனிச்
சந்நிதியாக கோயில் கொண்டுள்ளார். சூரியன், இரண்டு பைரவர்கள் ஆகியோரும் உள்ளனர்.
ஸப்தமாதா சந்நிதி ஜேஷ்டாதேவி, வீரபத்திரர் விநாயகருடன் கலைநயத்தோடு மிளிர்கிறது.
ஜேஷ்டாதேவி தன் இரு குழந்தைகளான மந்தன் மற்றும் மாந்தியோடு சற்றே பெரிய
திருமேனியுடன் விளங்குகிறார்.
8-ம் நூற்றாண்டுவரை ஸ்ரீ ஜேஷ்டாதேவி வழிபாடு செழித்திருந்தது. ஏழ்மை, பகைமை,
இயலாமை, சோம்பல் போன்றவைகள் அழிய ஜேஷ்டாதேவி வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தாக
அமைந்துள்ளது. குறிப்பாக பெண்கள் இந்த தேவியை வழிபட இல்லாமை என்பது அழியும்.
மன அழுத்தம் என்று சொல்லக்கூடிய பழைய நினைவுகளால் வாடி வதங்குபவர்கள் இந்த
தேவிக்கு கேட்டை நட்சத்திரம் மற்றும் அஷ்டமி தினங்களில் பால் அபிஷேகம் செய்து
அன்னம்படைத்து காக்கைக்கு இட்டு வழிபட்டால் இது போன்ற தொல்லைகளிலிருந்து
விடுபடலாம். இங்குள்ள மூன்று கால்களுடைய ஜுரஹரேஸ்வரர் மிகுந்த வரப்பிரசாதி ஆவார்.
சிறு குழந்தைகளுக்கு நோய்கள் எதுவும் அண்டாமல் இருக்க ஜுரஹரேஸ்வரரை வழிபட வேண்டும். இங்குள்ள சனீஸ்வரர் அனுக்ரஹ சனீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். ஏழரைச் சனி, அஷ்டம சனி, சனி திசை கண்டக சனி ஆகிய காலங்களில் பாதிக்கப்பட்டோர் இங்குள்ள சனீஸ்வரர்,
பைரவரர் மற்றும் ஏகபாதருத்ரர் சன்னதிகளில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அபிஷேக அர்ச்சனை ஆராதனைகள் தங்கள் நட்சத்திரம் வரும் நாளிலோ அல்லது சனிக்கிழமைகளிலோ செய்து வழிபடலாம். வுசதியில்லாத மக்கள் நல்லெண்ணை தீபம் ஏற்றி கோவிலை 9 முறை வலம் வந்து வழிபட வாழ்வின் மாற்றத்தைக் காணலாம்.
சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ நித்யகல்யாணி அம்மன்:
அகில உலகங்களையும் காத்து அருளும் அன்னையின் பல்வேறு வடிவங்கள் சிவத்தலங்களின் பெருமை பெற்று விளங்குகின்றன. தப்பளாம்புலியூரின் அருள் அன்னை ஸ்ரீ நித்ய கல்யாணி பெயரிலேயே திருமண வரம் அருளும் கருணாமூர்த்தியாக விளங்குகிறாள். இவிவூரில் அன்னை குடிகொண்ட வரலாறு மிகப்பழமையானது, நெல்லை மாவட்டம்,
தென்காசி அருகிலுள்ள கடையம் பகுதியில் வாழ்ந்த ஒரு சித்தரின் உபாசனாமூர்த்தியான அம்பிகை, அவருடன் பெண்குழந்தை வடிவினளாக விளையாடி நின்றாள். மாறாத பக்திகொண்ட சித்தரும் அன்னைக்கு கல்யாணி என்று பெயரிட்டு அழைத்து அகமகிழ்ந்தார்.
ஒரு முறை மலையாள தேசத்தில் திருமணம் ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது குழந்தை கல்யாணி வடிவிலான அன்னை அவருடன் வரவில்லை. மிகவும் வருத்தமுற்ற சித்தர் சிவபெருமானிடம் முறையிட்டு வருந்தியபோது, சிவபெருமான் “நின்மகளை யாம் திருமணம் முடித்துவிட்டோம். ஆவளை தேடவேண்டாம். அவள் இனி நித்யகல்யானியாக என்னுடன் கோயில் கொள்ளட்டும்” என்று ஆறுதல் அளித்து மறைந்தார்.
அன்று முதல் சித்தரும் அன்னையை நித்யகல்யாணி வடிவில் மானஸ உபாசனை செய்து வழிபட ஆரம்பித்தார். அன்னையில் பேரருள் காரணமாக நன்கு ஆன்மீக முதிர்ச்சி அடைந்த சித்தரும் கடையம் என்ற பகுதியை விட்டு வெளியேறி சிவாலய தரிசனத்திற்காக பல்வேறு திருத்தலங்களுக்குப் புறப்பட்டார். அவர் தப்பளாம்புலியூரில் சிறிது காலம் தங்கி வியாக்ரபாதரையும் இதர தெய்வங்களையும் அன்னையுடன் சேர்த்து வழிபட்டுக்கொண்டிருந்தார். அவரது இறுதிகாலம் நெருங்கியதை உணர்ந்த சித்தர், பலகாலம் உபாசித்த அன்னையை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து விட்டு சமாதியடைந்துவிட்டார்.
விக்ரம சோழனால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் ஆதியில் அம்பிகையின் சந்நிதி இல்லாமல்தான் இருந்தது. ஆனால் அம்பிகையின்; அருளால் ஸ்ரீ நித்யகல்யாணி என்ற திருநாமத்துடன் இங்கு அன்னையின் திருச்சந்நிதி அமைந்தது. பெயருக்கு ஏற்றார்போல் கல்யாணம் மற்றும் குழந்தைவரம் பெற்ற பக்தர்கள் இங்கு அனேகம். அம்பிகை இங்கு போகமோட்சப்ரதாயினியாக இருப்பதாக நமது மகாபெரியவா எனும் காஞ்சி மாமுனிவரால் உணர்த்தப்பட்டவள்.
ஆம்பிகை இகபர சுகங்களையும் அளித்தது எல்லாம் வல்ல மோட்சத்தையும் அளிப்பதாக பெரியவர் கூறியுள்ளார். அன்னைக்கு இங்கு மஞ்சள் காப்பு, மல்லிகை மலர்மாலை, லலிதா சகஸ்ரநாம பாராயணம் மிகவும் விஷேசமாகும்.
ஏகபாத ருத்ரர்:
இங்குள்ள ஏகபாத ருத்ரர் மிகவும் விஷேசமானவர். அமாவசைக்கு முன்பு வரும் சதுர்த்தசி தினம் மற்றும் அமாவாசை தினங்களில் இவரை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். மாதம் தோறும் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் அபிஷேக ஆராதனைகள் செய்வது விஷேசம். நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.
கோஷ்டத்தில் உள்ள நடராஜமூர்த்தம்:
இவ்வாலயத்தில் வேறு பல விஷேகங்களும் அமைந்துள்ளது. பொதுவாக கோஷ்ட தெய்வங்களில் முதலில் நடன விநாயகர் தஷிணாமூர்த்தி லிங்கோத்பவர் அல்லது மகாவிஷ்ணு பிரம்மா இறுதியில் துர்க்கை ஆகிய வடிவங்களே எழுந்தருளி இருக்கும். ஆனால் தப்பாளம்புலியூரில் பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் மண்டூக மகரிஷிக்கு திருநடனக் காட்சி அருளியதால் கோஷ்டத்தில் மிக அற்புதமான வடிவாக, ஆனந்த நடராஜமூர்த்தம் சிறந்த வேலைப்பாடுடன் செதுக்கப்பட்டு எல்லா தேவர்களுடனும் ரிஷிகளுடனும் காட்சி கொடுப்பதாக அமைந்துள்ளது.
மாதந்தோறும் வரும் பூசம் நட்சத்திரம் அன்றும் தைப்பூசம் அன்றும் ஸ்ரீ நடராஜபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது சிறப்பு. மேலும் லிங்கோத்பவருக்கு பதிலாக அவ்விடத்தில அர்த்தாநாரீஸ்வரர் அமைந்துள்ளார். அவருக்கு நேர் எதிராக மகாலட்சுமி சந்நிதி அமைந்துள்ளது.
சனீஸ்வரபகவான்:
மிகச்சிறந்த சனீஸ்வர தலங்களில் ஒன்றான தப்பாளம்புலியூரில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகிறார். சனீஸ்வரர் இங்கு அனுக்ரஹ சனீஸ்வரர் என்ற பட்டம் தாங்கி உள்ளார். அவரை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு நற்பலனை பெறுவோமாக.
தொடர்புக்கு: திரு. வெங்கட்ராமன் – 98400 36514
திரு. கல்யாணராமன் – 99429 84901
திரு. சுவாமிநாத குருக்கள் – 97865 82271
நாளை யாத்திரையின் 9வது ஸ்தலமான பெரும்புலியூர் பற்றி பார்க்கலாம்…











