மதம் என்பது ஒன்றுமில்லை கடவுளை அடைய மதம் தடையில்லை.
ராமதேவர் நாகப்பட்டினத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
இளம் வயதிலேயே அஷ்டமாசித்திகள் கைவர பெற்றவர்.
சித்த மருத்துவத்தின் சிகரம் தொட்டவர். யுனானி மருத்துவத்திற்கு வழிகாட்டியவர்.
யுனானியிலும் சித்த மருத்துவத்திலும் வல்லவரான இராமதேவர் தமிழிலும் அரபியிலும் வித்தகர்.
சில சித்தர்கள் தங்கள் உடலை கிடத்திவிட்டு, ஆன்மாவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆங்காங்கு கிடைக்கும் உடல்களில் புகுந்து கொண்டு சேவை செய்வார்கள்.
ராமதேவர் மிகவும் வித்தியாசமானவர்.
முயற்சி… முயற்சி… முயற்சி…இதுவே அவரது தாரக மந்திரம்.
இந்த மந்திரத்திற்கு மாபெரும் பலன் கிடைத்தது.
ராமதேவர் தன் உடலுடனேயே பிற தேசங்களை விரைவில் அடையும் சித்தியை பெற்றார்.
இவர் குண்டலினி யோகம் செய்து மகாசக்தியாகிய மனோன்மணி தன்னுள் இருந்து தன்னை வழி நடத்திச் செல்வதை உணர்ந்தவர்.
அவர் இராமதேவர் பூஜா விதி என்ற சிறு நூலின் காப்புச் செய்யுளை
ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்’
அகண்டபரி பூரணத்தை காண வேண்டும்,
சோதியென்ற தூய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம் பெறவே மனோண்மணியென் னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி நினின்ற நிலை யாரும் காணார்,
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்குவதும் பூசையிது வீண்போ காதே
தியானத்தின் போது குண்டலி சிரசை அடைந்து புருவ மத்தியில் வெண்ணிறவொளியாய் காட்சி தரும் இதுவே பரிபூரண இன்பமாகும். மனோன்மணியேகுண்டலி சக்தியாகும்.
மனோன்மணியைப் பெண் சக்தியாக பரிபாஷையில் சித்தர்கள் குறிப்பிடுவார்கள். ஆத்தாள்(அகத்தாள்) எனவும்,தாயாகவும் கருதுகிறார்கள். அகத்தில் பேரொளியாய் சக்தி திகழ்வதால் இச்சக்தியை அகத்தாள் என்கிறார்கள் சித்தர்கள்
இதில் இறைவனுக்கு செய்யும் பூஜைகள் வீண் போகா என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
ஒருமுறை இவர் கங்கைக்கு நீராடச் சென்ற போது, சட்டைநாதரின் விக்ரகம் அவருக்கு கிடைத்தது. அதை நாகப்பட்டினம் கொண்டு வந்து ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.
சித்தர்களின் ஆசி சில சித்தர்களின் தரிசனமும் இமயமலைக் காடுகளில் அவருக்கு கிடைத்தது.
அவர்கள் ராமதேவரிடம்,
சித்தனே! நீ மெக்கா செல்.
அங்கே ஏராளமான காயகல்ப மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து, மருந்து தயாரித்து மக்களின் பிணி தீர்க்கும் உன்னதமான பணியைச் செய், என்று வற்புறுத்தினர்.
அவர்களது கட்டளையை ஏற்ற ராமதேவர் தன் சித்தியால் மெக்கா சென்றடைந்தார்.
புதியவர் ஒருவர் தங்கள் நாட்டுக்கு வந்ததும், அரபு நாட்டு மக்கள் அவரை ஏற்க மறுத்தனர்.
அரபு நாட்டவரைத் தவிர மற்றவர்கள் அங்கு தங்க அனுமதி கிடைக்காது என்று கூறி அவரை திரும்பி விடும்படி எச்சரித்தனர்.
நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்று அவர் அவர்களிடம் சொல்லவே, மிக நல்லது, அப்படியானால், நீங்கள் எங்கள் மதத்தில் இணைந்து விட வேண்டியது தானே! குர்ஆனையும் நீங்கள் ஓத வேண்டும். அவ்வாறு செய்தால், நீங்கள் இங்கிருக்க அனுமதி தருகிறோம், என்று மக்கள் கூறினர்.
அவ்வளவுதானே!
அதை நான் செய்கிறேன், என்றார் ராமதேவர். அவருக்கு யாக்கோபு என்று பெயரிட்டு தங்கள் மதத்தில் சேர்த்துக் கொண்டனர் அரபு மக்கள்.
ராமதேவ சித்தர் இப்போது யாக்கோபு சித்தர் ஆகிவிட்டார்.
அரபுநாட்டில் கிடைத்த பலவகை மூலிகைகளை ஆய்வு செய்து அவற்றின் குணம், குணப்படுத்தும் நோய்கள் ஆகியவை குறித்து எழுத ஆரம்பித்தார்.
சிறிது காலத்திலேயே அரபு மொழியையும் கற்று, அந்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் வைத்திய சிந்தாமணி என்னும் நூலை அரபு மொழியில் எழுதினார்.
அரபு மக்கள் அவரை போற்றத் துவங்கினர். அவரிடம் பலர் மருத்துவ முறைகளையும் கற்றுக் கொண்டனர்.
ஒரு நாள் நபிகள் நாயகம் ஒளி உருவில் யாகோபுக்குக் காட்சியளித்து தெய்வீக சாதனைகள் புரியும் நுட்பங்களை விளக்கி அருளினார்.
போகரின் ஆணை
இந்நிலையில், போகர் சித்தர் அவர் முன்பு தோன்றினார். ராமதேவா! நீ வைத்திய முறைகளை முழுமையாக அறிந்து கொண்டு விட்டாய்.
இனி நீ நாடு திரும்பு. சதுரகிரி மலைக்குச் சென்று இந்த மூலிகைகளை ஆய்வு செய்தது குறித்து எழுது. மேலும், இம்மூலிகைகளை ஆய்வு செய், என்றார்.
அதன்படி ராமதேவர் சதுரகிரி மலை வந்து சேர்ந்தார்.
தனது சீடர்களிடம், போகரின் அறிவுரைப்படி நான் பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்யப் போகிறேன்.
நான் வரும் வரை நீங்கள் சமாதி வாசலில் காத்திருங்கள், என்றார்.
பத்தாண்டு காலம் சமாதிக்குள் இருக்கும் ஒருவர் எப்படி திரும்புவார்? இது சாத்தியமல்ல என்று நினைத்த சீடர்கள், அவர் சமாதிக்குள் சென்றதும் அங்கிருந்து சென்று விட்டனர்.
ஒரே ஒரு சீடர் மட்டும் தனது குரு நிச்சயம் திரும்புவார் என நம்பி சமாதி வாசலில் காத்திருந்தார்.
சமாதிக்குள் சென்ற சித்தர், மூலிகைகளை ஆய்வு செய்தார்.
சமாதிக்குள் இருந்தே யாரும் அறியாத வண்ணம் பல்வேறு இடங்களுக்குச் சென்றார்.
ஒருமுறை சமாதிக்குள் இருந்த காலங்கிநாத சித்தரைத் தரிசித்தார்.
அவர் தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ராமதேவருக்கு போதித்தார். ஆக, ராமதேவ சித்தர் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார்.
சமாதியில் இருந்து மீண்ட அற்புதர்
எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்ற பிறகு, அவர் சொன்னபடியே சமாதிக்குள் இருந்து பத்தாண்டுகள் கழித்து வெளிப்பட்டார்.
தன்னுடைய சீடர்களே தன்னை நம்பாமல் சென்றது பற்றி அவர் சிறிதும் வருந்தவில்லை.
ஒரே ஒரு சீடன் விசுவாசத்துடன் தங்கியிருந்தது பற்றி சந்தோஷம் கொண்ட அவர், சீடனே! மற்றவர்கள் என்னைத் தூற்றி விட்டு சென்றது பற்றி நான் கவலைப்படவில்லை.
ஏனெனில், நான் எத்தனை ஆண்டுகாலம் இந்த சமாதிக்குள் தங்கி மூலிகை ஆய்வு செய்தாலும், நோய்கள் தற்காலிகமாக குணப் படுத்தப்பட்டாலும், பல நூறு ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்தாலும், ஒருநாள் மரணம் சம்பவிக்கத்தான் செய்யும்.
இந்தக் கருத்தின்படி பார்த்தால், நமது குரு தேவையில்லாமல் சமாதிக்குள் அமர்ந்து, மூலிகை ஆய்வு செய்கிறார் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கும்.
அது நியாயமான சிந்தனை தானே! இருப்பினும், வாழும் காலத்தில் மனிதன் சுகமாக வாழவே இந்த ஆய்வை மேற்கொள்கிறேன்.
நான் மேலும் முப்பதாண்டுகள் சமாதியில் இருக்கப்போகிறேன். மூலிகை ஆய்வைத் தொடர்வேன், எனச் சொல்லிவிட்டு சமாதிக்குள் சென்று விட்டார்.
அந்த சீடனும் அங்கேயே காத்திருந்தான்.
முப்பதாண்டுகள் கழித்து வெளிப்பட்ட சித்தர், பொறுமைக்கார சீடனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் போதித்தார்.
அந்த சீடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவனது பொறுமைக்கு மிகுந்த பரிசு கிடைத்தது.
இதனிடையே ராமதேவர் சமாதிக்குள் சென்ற பிறகு, அவரை நம்பாமல் சென்ற சீடர்களின் பார்வை பறிபோய் விட்டது.
அவர்களும் சித்தரை வணங்கி மன்னிப்பு கேட்டு பார்வை பெற்றனர்.
அவர்களிடம், நான் இப்போது நிரந்தர சமாதிக்குச் செல்கிறேன்.
மதுரை அருகிலுள்ள அழகர் மலையில் சமாதியாகி மக்களுக்கு அருள் செய்வேன், என சொல்லிவிட்டு சென்றார். அங்கேயே சமாதியானார்.
கரடுமுரடான காட்டுப் பாதையில் நூபுர கங்கை இராக்காயி அம்மன் கோயில் மேலே அடர்ந்த காட்டு பகுதிக்கு மேலை மலை முகட்டில் இராமதேவர் சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது
காலம்: ராமதேவர் முனிவர் மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 6 நாள் ஆகும்.
இயற்றிய நூல்கள் –
1.இராமதேவவைத்தியக்காவியம்
2.இராமதேவநிகண்டு
3.இராமதேவஜாலம்
4.இராமதேவகலைஞானம்
5.இராமதேவ சிவயோகம்
6.இராமதேவ பரிபாஷை
7.இராமதேவ தண்டகம்
8.இராமதேவ பட்சணி
9.இராமதேவ பரஞான கேசரி
10.இராமதேவ வைத்திய சூத்திரம்
11.இராமதேவ சுத்திமுறை
12.இராமதேவ அட்டாங்க யோகம்
13.இராமதேவ முப்பூ சூத்திரம்
14.இராமதேவ பரிபாஷை விளக்கம்
15.இராமதேவ களங்கம்
16.இராமதேவ வாத சூத்திரம்
17.இராமதேவ வைத்திய சிந்தாமணி
18.இராமதேவ வைத்தியம்.
தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு;
தனதான் நூற்றெட்டுக் குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர்பதி யெட்டு மாடும்;
அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்;
கோனென்ற கோடிசித்துக் கனத்தி லாடுங்
குணமாக ரேவதிநாட் செய்ய நன்று;
வானென்ற அட்டமியிற் செய்ய நன்று;
வளர்பிறையின் செய்தவனே யோகி யாமே.
குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் எழுப்ப 108 மாத்திரையால் கும்பிக்க மூலாதாரம் சித்தியாகும்.இந்த மூலாதார சித்தியால் தேவலோங்கள் வசப்படும்.64 மூலிகைகளின் இரகசியங்கள் வெளிப்படும்.எந்த மூலிகை எப்படி இருக்கும்என்பது சித்தர்க்கு மட்டுமே தெரியும்.
இச்சித்தியை ரேவதி நட்சத்திர நாளில்செய்யலாம் அல்லது எட்டாம் திதியாகிய அட்டமியில் செய்யலாம். இதனைவளர்பிறையில் செய்தவன் யோகியாவான்.










