சிவன்மலை – ஒரு ஆன்மீகத் தகவல்
தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் இந்தக் கோயில் சற்று வித்தியாசமானது.
கரூரிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் காங்கேயத்தில் இறங்கி அங்கிருந்து 5கிமீ இந்த
கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்தக் கோயிலில் உள்ள முருகன் உலகத்தில் எந்த
மூலையில் உள்ள முருக பக்தருக்கும் திடீரென காட்சி தருபவர். இவர் திடீரென ஒரு பக்தர்
கனவில் தோன்றி ஏதாவது ஒரு பொருளை காண்பித்து அதை வைத்து பூஜை செய்ய சொல்வார்.
உதாரணமாக தண்ணீரை வைத்து பூஜை செய்ய சொன்னால் தண்ணீரினால் ஏதாவது
பிரச்சினை வரும். அதன்படி சுனாமி,தண்ணீர் பஞ்சம் முதலியவை வரலாம். அதன் தீவிரத்தை
குறைக்கவே முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் சென்று கட்டளையிடுகிறார். பக்தர்கள்
சொல்வதை கோயில் நிர்வாகம் உடனே கேட்பதில்லை. அவர் சொல்வது உண்மையா எனப் பூ
போட்டுப் பார்த்து சாதகமான பதில் வந்தால் தான் அவர் சொல்லும் பொருளை பூஜை செய்ய
ஒத்துக் கொள்கிறது.
சிவன் மலை வரலாறு – ஒரு சிறு பார்வை:-
தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள்.
இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர புதல்வர்களாலும் பூலோக மக்களுக்கு மிக பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது.
இதனால் சிவபெருமானிடம் முனிவர்களும், பக்தர்களும் முறையிட்டார்கள். அசுரர்களின் உலோகத்தலான கோட்டைகளை அழிக்க சிவபெருமான் பிரமாண்ட தேர் உருவாக்கி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு போரிடும் போது,
வில்லாக இருந்து மேருமலையின் ஒரு பாகம் பூமியில் விழுந்தது. அதுவே சிவன்மலை என்று அழைக்கப்படுகிறது.
அகத்திய முனிவரால் இந்த பகுதிக்கு வந்த முருகன்:-
அகத்திய முனிவர், மெய்யான சன்மார்க்க நெறியை உபதேசிக்கும்படி முருகப் பெருமானிடம் வேண்டினார். அகத்தியரை சிவன்மலைக்கு அழைத்துச் சென்று இங்கு இருந்த அத்திமரத்தின் கீழ் உபதேசம் செய்து அந்த இடத்திலேயெ நிரந்தரமாக அமர்ந்தார் முருகப் பெருமான்.
நோய்க்கு மருந்து முருகனே என்றார் கௌதம மகரிஷி
முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன்,
தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார் ‘சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்’ என்றார். கௌதமகரிஷி முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.
1717-ம் ஆண்டு முதல் முருகனின் மகிமையை அறிந்தார்கள்
சிவன்மலை கிராமத்தில் முருகன் கோயில் இருப்பதை கேள்விப்பட்ட காங்கேய நாட்டு அரசர், காடையூர் காங்கேய மன்றாடியார், காங்கேயம் பல்லவநாயர் போன்ற தனவந்தர்கள்
சிவன்மலை முருகனின் பக்தர்களாக இருந்ததால் முருகனுக்காக திருக்கோயிலுக்கு பல நன்கொடைகளை கொடுத்து திருப்பணிகளை நடத்தினார்கள்.
1717-ம் ஆண்டு சர்க்கரை மன்றாடியார் வம்சத்தை சேர்ந்த ஒருவருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்தார். அந்த இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்தால் சிவன்மலையில் தேர் வருவதற்கு பாதை அமைத்து தருவதாக வேண்டினார்.
பக்தர்களை காண விரும்பிய முருகன் அந்த பக்தனின் நியாயமான பிராத்தனைக்கு செவி சாய்த்தார். அவர் கஷ்டங்கள் தீர்ந்தது. வேண்டிய படி முருகனின் தேர் வீதி உலா வர சிவன்மலையில் பாதை அமைத்தார் அந்த பக்தர்.
வெண்குஷ்டத்தை போக்கிய முருகன்:-
வள்ளியாத்தாள் என்ற பெண்ணின் மகன் விசுவநாதன் வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டான். இதற்கு நிறைய வைத்தியம் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணை என்பதால் வள்ளியாத்தாள்,
சிவன்மலை முருகனை பற்றி அறிந்து தன் மகனை அழைத்துக் கொண்டு திருக்கோயிலுக்கு சென்று முருகனை வணங்கி அர்ச்சனை செய்தாள். இதன் பலன்கள் சில மாதங்களிலேயே தெரிந்தது. ஆம்… விசுவநாதனின் வெண்குஷ்டம் நோய் நீங்கியது இதனால் மகிழ்ந்து,
‘ஐயா சிவமலைவாழ் ஆண்டவனே பன்னிரண்டு
கையாஎன் சேய்விசுவின் காலதனில்-மெய்யாக
வந்த வெண்குட்டமதை மாற்றிக் கருணையது
தந்தவனே நின் தாள் சரண்’
இப்படி பாடல் மூலமாக சிவன்மலை முருகனை போற்றினாள் வள்ளியாத்தாள். சிவன்மலை குமரப்பெருமானை வணங்கினால் தீராத வியாதிகளை தீர்ப்பான். நாமும் இப்பெருமானை வணங்குவோம் வாழ்வில் மேன்மை அடைவோம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!











