பெரும்பாலானவர்கள், தன் இஷ்டத்திற்கு கோவிலுக்குள் நுழைந்த உடனேயே, வேறு எந்தப் பக்கமும் திரும்பாமல், நேராக அந்த கோவிலில் மூலவர் சன்னதிக்கு சென்று வழிபட்டுவிட்டு அப்படியே நடையை கட்டிவிடுகின்றனர். அப்படி செய்வது மிகப்பெரும் தவறாகும்.
சைவ ஆலயமாக இருந்தால், கோவிலுக்குள் நுழைந்ததும் இடமிருந்து வலமாக முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு பின்னர், முருகப்பெருமானை
வணங்கிவிட்டு, பரிவார தெய்வங்களை வணங்கிவிட்டு, தொடர்ந்து நவக்கிரகங்கள் இருந்தால் அவற்றையும் வழிபட்டு, அதன் பின்னர் கொடிமரத்தை வணங்கிய பின்பு, மூலவரை தரிசிக்க வேண்டும். இதெல்லாம் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும்.
வைணவ ஆலயமாக இருந்தால், கோவிலுக்குள் நுழைந்த உடனே நாம் வணங்க வேண்டியது தும்பிக்கையாழ்வார் எனப்படும் விநாயகரைத்தான்.
அதன் பின்பு, தாயாரை வணங்கிவிட்டு, வலப்புறம் உள்ள ஆண்டாளை வணங்கிவிட்டு, அப்படியே ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு, அதன் பிறகு கொடிமரத்தையும் பலிபீடத்தையும் தொட்டு வணங்க வேண்டும்.
முக்கியமாக, மூலவரை வணங்க செல்லும்போது, மூலவருக்கு எதிரில் உள்ள கருடனை முதலில் பணிந்து வணங்கிவிட்டு தான், பிறகு மூலவரான பெருமாளை வணங்க வேண்டும். அப்படி செய்தால் தான் பெருமாளின் முழுமையான அருள் நமக்கு கிடைக்கும்.
ஆனால், பெரும்பாலானவர்கள், கருடன் இருப்பதையே மறந்துவிட்டு, நேராக மூலவரை தரிசிக்க சென்று விடுகின்றனர். இன்னும் சிலர், பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயரையும் வணங்கினால் போதும் என்று திருப்தியோடும், அலட்சியத்தோடும் வணங்கிவிட்டு நடையை கட்டிவிடுகின்றனர்.
திருப்பதி கோவிலில் ஏழுமலையான தரிசிக்க செல்பவர்கள், எப்போதுடா பெருமாளை தரிசிப்போம் என்ற நினைப்பில், அவருக்கு எதிரில் இருக்கும் கருடாழ்வரை பார்க்காமலேயே, நேராக பெருமாளை வணங்கிவிட்டு செல்கின்றனர்.
ஆனால், வைணவ ஆகம விதிகளின் படி, முதலில் மூலவரை வணங்குவதற்கு முன்பாக முதலில் கருடனைத் தான் பணிந்து வணங்க வேண்டும். காரணம், கருடன் தான் பெருமாளின் வாகனம். கருடன் ஆசீர்வதித்தால் மட்டுமே பெருமாளின் ஆசீர்வாதமும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
கருடன் பெருமாளுடைய வாகனம் என்பதோடு, அவரின் பெரிய திருவடி என்றும் பயபக்தியுடன் அழைக்கப்படுகிறார். அதோடு, மனிதர்களின் பாவ புண்ணித்திற்கு ஏற்ப கிடைக்கும் பலா பலன்கள் என்னவென்பதை விளக்கும் கருட புராணத்தை அருளியவர் கருடன்.
இதனால் தான், வைணவ கோவில்கள் மட்டுமல்லாது, எந்தவொரு இந்து கோவிலாக இருந்தாலும் சரி, அந்த கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் சமயத்தில், கருடன் வந்து வட்டமிட்டால் தான் கும்பாபிஷேகம் முழுமையடையும் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, இனிமேலாவது பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள், கருடனை வணங்கிவிட்டு பின்பு பெருமாளை வணங்கினால், கருடனின் அருள் கிடைப்பதோடு, பெருமாளின் அருளாசியும் முழுமையாக கிடைக்கும்.











