சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள்,எக்கக்குடி, இராமநாதபுரம்.
(திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை மிக அருகில்)
ஸ்ரீ செல்லப்ப சுவாமிகள் , சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரும், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருநாதருமாவார். செல்லப்ப சுவாமிகள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூர் என்ற ஊரில் அவதரித்தார். தன் குருநாதர் போன்று, பல சித்துகள் செய்தவர்.
சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் மன்னார்குடியில் தோன்றி, கட்டிக்குளம் குவளைவேலி, புதுக்குளம் கிராமங்களில் கோயில்கள் எழுப்பி சித்துகள் பல செய்து, பக்தர்களுக்கு அருள்புரிந்தவர்.
அவர் வழிவந்த தஞ்சாக்கூர் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள், தங்கள் குரு ராமலிங்க சுவாமிகள் பெயரில் பல இடங்களில் மடங்களை நிறுவினார்.
ராமநாதபுரம் திருச்சுழி என்று வெவ்வேறு இடங்களில் ஆரிய சித்துகளைச் செய்து சஞ்சரித்து வந்த செல்லப்ப சுவாமிகள் ஒருநாள், ராமநாதபுரம் கண்மாய் மடக் குழியில் இறங்கினார்.
வெகுநேரம் அவரைக் காணாமல் அன்பர்கள் தவித்தனர். ஆனால் சுவாமிகள் அப்போது ராமநாதபுரம் அரண்மனை வாசலில் இருந்து கொண்டு ராஜாவுக்கு அவரது நோய்க்கான பச்சிலை மருந்துக்ளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அன்பர்கள் இதைக் கண்டு அதிசயித்துப் போயினர்.
அன்று முதல் ராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க சேதுபதி அவரைப் பெரிதும் போற்றி வந்தார். இத்தகைய சிறப்புகளுடன் திகழ்ந்த செல்லப்ப சுவாமிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மாயாண்டி சுவாமிகள், அவரையே குருவாகக் கொண்டார்.
செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து உபதேசம் செய்து வைத்தார்.
கட்டிக்குளத்தில் இருந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள், கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது.
ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பின்னர் இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.
சுவாமிகள் சமாதி, பிரபல திருக்கோயில்கள் உடைய திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை ஆகிய இடங்களுக்கு, மிக அருகில் உள்ளது. அடியார்கள் பார்த்து வழிபட வேண்டிய ஒரு மகான். தொடர்புக்கு – 09843287501










