வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகத்தை, இன்பத்தை, சந்தோஷத்தை, பொன்,
பொருளை, சொத்துகளை தேடி நாம் முயன்றுகொண்டே இருக்கிறோம். ஆனால் பூரண
சாஸ்வத இன்பமான மன அமைதி தரும் சந்தோஷத்தை தேடுவதில்லை.
நாடுவதில்லை. ஆணவம், அகங்காரம், போட்டி, பொறாமை போன்றவற்றால்
பீடிக்கப்பட்டு துன்பம் அடைகிறோம்.நாம் எவற்றால் துன்பம் அடைகிறோம்?
வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் துன்பம் அடைகிறோம்.
வேண்டியது நமக்கு கிடைக்காமல் வேறொருவனுக்கு கிடைக்கும்போது இன்னும் அதிக
மன உளைச்சல், துன்பம் அடைகிறோம்.
இப்படி எல்லாவற்றிலும் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் நமக்கு ஏற்படும் மன
உளைச்சல் பொருமலாக ஆரம்பித்து, பொறாமையாக உருவெடுத்து, குரோதமாக
வெடிக்கிறது. விளைவு உடல்நலம் பாதிப்பு. மனநலம் பாதிப்பு. இதனால் ஏற்படுவது
நாசம் மட்டுமே.
ஒப்பிட்டுப் பார்த்தல் என்பது எல்லோருடனும் நிகழ்வதில்லை. நமக்கு மிகவும் தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்கள், குடும்ப நண்பர்கள், உற்றார் உறவினர், ரத்த சொந்தங்கள் என நாம் அறிந்தவர்களோடு மட்டுமே இந்த ஒப்பிட்டு பார்த்தல் நிகழ்கிறது. ‘நான்’ எனும் ஆணவ அகங்கார மமதையே இதற்கு முக்கிய காரணம். அது மட்டுமின்றி, விடை தெரியாத சில கேள்விகளும் காரணமாக இருக்கிறது.
மனதை குழப்பும் கேள்விகள்
* தவறே செய்யாதவன் தண்டிக்கப்படுகிறான். தவறு செய்தவன் தண்டனையில் இருந்து தப்பிவிடுகிறான். தர்ம நியாயப்படி நடப்பவன் பல துன்பங்களுக்கு ஆளாகிறான். பாவம் செய்பவர்கள் சுகமாக இருக்கின்றனர். எந்த தீய பழக்கமும் இல்லாதவன் கொடிய நோய் தாக்கி மரணமடைகிறான். எல்லா தீய பழக்கங்கள் உள்ள ஒருவன் நிம்மதியாக சாகிறான். இது ஏன்?
* பணம் இருந்தும் அமைதி இல்லை. பணம் இல்லாதவன் நிம்மதியாக இருக்கிறான். பணக்காரன் சாப்பிட முடிவதில்லை. ஏழைக்கு சாப்பாடு இல்லை. ஒருவனுக்கு சொத்து ஏராளம். மற்றொருவன் ஒதுங்கக்கூட இடமில்லை. குழந்தை இல்லையே என ஏங்குவோர் ஒருபுறம். இந்தக் குழந்தைகள் ஏன் பிறந்தன என வாடுவோர் மறுபுறம். ஏன் இந்த வித்தியாசம்?
* இறைவனை தரிசிக்க செல்பவர்களும் சுப விசேஷங்களுக்கு செல்கிறவர்களும் விபத்துக்குள்ளாகி மரணமடைகின்றனர். இது ஏன்?
இத்தனை விஷயங்களுக்கும் நம் வினைப்பயனே காரணம். சுக துக்கங்கள் பூர்வ கர்மங்களின் விளைவுகளேயன்றி. இப்போது செய்யும் செயல்களால் அல்ல. கடந்துபோன பல்வேறு பிறவிகளின் பயன்களாலேயே ஒருவனுக்கு எல்லாம் கிடைக்கிறது. அதேபோல பற்பல பிறவிகளில் செய்த பாவ கர்மங்களால் ஊழ்வினை காரணமாக துன்பப்படுகிறான்.
ஆகையால், ‘அவனுக்கு இது கிடைக்கிறதே.. இவனுக்கு அது கிடைக்கிறதே’ என்று எண்ணி பொறாமை, பொருமல் அடையாமல் ‘நம் பிராப்தம் இதுதான்’ என்று நினைத்து பக்தி மார்க்கத்தில் மனதை திருப்புவதே சிறந்த உபாயம். ஆணவம், அகங்காரம், ‘நான் செய்தேன்’ என்ற ஆணவ பேச்சு ஆகியவற்றை விட்டுவிட்டு, ‘என் செயல் ஆவது ஏதுமில்லை’ என்று பகவானை சரணாகதி அடைந்தால் நம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உறுதி . அவர் காட்டிய வழியில் பக்தி செலுத்தி, மனப் பக்குவம் அடைந்து நல்வாழ்வு பெறுவோம்.










