நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து – கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் – பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல்.
தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும்,
தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும்,
மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்.
உணவின்றி உயிரில்லை. உலகில்லை.
உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும்.
அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும்.
மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும்.
ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் – அன்னதானம் மட்டுமே ஆகும்.
எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும்.
உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
அன்னதானத்தின் பெருமைகளை அளவிடமுடியாது. எங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்வோம். இன்றைய உலகில் பல பாகங்களில் எத்தனையோ சிறார்கள் உணவுக்கு கஷ்டப்படுவது நாம் அறிந்த ஒன்று .
அங்கு நாம் செல்ல முடியாவிட்டாலும் இருந்த இடத்தில இருந்தபடியே அன்னதானம் ஒழுங்குகள் செய்ய இன்று எவ்வளவோ வசதிகள் வந்து விட்டன.மனமிருந்தால்
இடமுண்டு என்று சொல்வார்கள். அன்னதானம் செய்வோம்.பலனை பெறுவோம் புண்ணியத்தை பெறுவோம் அதன் மூலம் இறைவனின் அனுக்கிரகத்தை பெறுவோம்.
நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில்,நமது கர்மவினையை மாற்றும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு;
எளிமையான சுயபரிகாரம் இது;அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த சுயபரிகாரமும் இதேதான்!
அன்னதானம் செய்வதால் நமது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் மட்டுமல்ல;நமது 14 வயது முதல் இன்று வரையிலும் நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களிடமிருந்து நாம் பெற்ற சாபங்களும் நீங்கிவிடும்;
ஒருபோதும் அசைவ அன்னதானம் செய்யக் கூடாது;
ஒருபோதும் கட்டாய அன்னதானம் செய்யக் கூடாது;
அன்னதான உணவுப்பொட்டலத்தை கோவில் வாசலில் தரும்போது ஏதாவது ஒரு
துறவியோ,சாதுவோ எனக்கு வேண்டாம் என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
அவரிடம் நீங்கள் வாங்கித் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரிடம்
உணவுப் பொட்டலத்தைத் திணிக்கக்கூடாது;
வீடு,வாசல் இல்லாமல் வாழ்பவர்களுக்கு இலவசமாக தரும் உணவுக்கே அன்னதானம் என்று பெயர்;
மகன்/மகள்களால் கைவிடப்பட்டு நிராதரவாக வாழ்ந்து வரும் வயதானவர்களுக்கு
தரும் இலவச உணவும் அன்னதானக் கணக்கில் வரும்;
ஒருபோதும் அகால அன்னதானம் செய்யக் கூடாது;அதாவது இரவு 9 மணிக்கு மேல்
விடிகாலை 5 மணி வரை அன்னதானம் செய்யக் கூடாது;அதனால் பலன்கள் கிட்டாது.
அனாதை இல்லங்களில் செய்யும் அன்னதானத்திற்கும் பலன் உண்டு;
அதை விடவும் பழமையான சிவாலயங்கள், நமது ஊரில் இருக்கும் புராதனம் மிக்க சிவாலயங்களில் செய்யப்படும் அன்னதானத்திற்கே தெய்வீக சக்தி அதிகம்!
ஒரே ஒரு துவாதசி திதியன்று அண்ணாமலையில் செய்யப்படும் மூன்று வேளை (காலை,மதியம்,இரவு)அன்னதானமானது காசியில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பேர்கள்
வீதம் நமது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்தமைக்கான பலன்களை விடவும்
அதிகமான பலன்களைத் தரக்கூடியது.
யாருடைய பிறந்த ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் சேர்ந்திருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும்;
நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் பலருடைய பிறந்த ஜாதகத்தில் சனி+ராகு,செவ்வாய்+கேது; அல்லது செவ்வாய்+ராகு,சனி+கேது;அல்லது ராகுவுடன் சனி+செவ்வாய் அல்லது கேதுவுடன் செவ்வாய்+சனி என்று கிரகச் சேர்கைகள்
இருந்தால் அவர்கள் கடுமையான கர்மவினைகளை அனுபவிக்கப்பிறந்துள்ளார்கள் என்றே அர்த்தம்.இப்படிப்பட்ட கிரகநிலையுடன் பிறந்துள்ளவர்கள் சனி மஹாதிசை
அல்லது செவ்வாய் மஹாதிசை அல்லது ராகு/கேது மஹாதிசை வருவதற்கு முன்பே அண்ணாமலையில் குறைந்தது 24 துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்வதால் கடுமையான கர்மவினைகளின் தன்மையை பெருமளவு குறைக்க முடியும்.
ஒரு தமிழ் வருடத்தில் மூன்று முக்கியமான நாட்களில் அன்னதானம் செய்தாலே நமது முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்தமைக்கான பலன்கள் கிடைத்துவிடும்;
நமது முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த கர்மவினைகளின் வலிமையை குறைத்துவிடவும் முடியும்;
நமது முன்னோர்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக(நமது அம்மா+அப்பா,நமது தாத்தாக்கள்+பாட்டிகள்,நமது பாட்டனார்கள்+பாட்டிகள்,நமது முப்பாட்டன்கள்+முப்பாட்டிகள்)செய்த கர்மவினைகளையும் நீக்கிவிட முடியும்.
அதுதான் ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை!
இந்த மூன்று அமாவாசை நாட்களிலும் நாம் வாழ்ந்து வரும் ஊரில் இருக்கும்
பழமையான சிவாலயத்தின் வாசலில் காலை 7 மணிக்குள்ளாகவும்,மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 6 மணிக்கு மேல் 7மணிக்குள்ளாகவும் ஒரே ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.
காலையில் ஐந்து இட்லிகள்+சட்னி+சாம்பார்+நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை அன்னதானமாகச் செய்வது மிகவும் சிறந்த புண்ணியம் தரும்;
இதையே இரவு நேரத்திலும் செய்யலாம்;
இரண்டு வேளைகளிலும் செய்யலாம்;
மதிய நேரத்தில் முழு உணவினை அன்னதானமாகச் செய்யலாம்;
விரைவான நிம்மதியையும்,தொழிலில் ஸ்திரத் தன்மையையும்,வேலையில் பதவி உயர்வையும்,குடும்பத்தில் கணவன்+மனைவி;பெற்றோர்+பிள்ளைகள்;
ஒற்றுமை பெற விரும்புவோர் தை அமாவாசை வரும் நாளில் பின்வரும் சிவாலயங்களில் ஏதாவது ஓரிடத்தில் அன்னதானம் செய்வது அவசியம்.
திருஅண்ணாமலை
சதுரகிரி
பர்வதமலை
கொல்லிமலை
இந்த இடங்களில் அன்னதானம் செய்ய இயலாதவர்கள் அவரவர் வசிக்கும் ஊரில் இருக்கும் சிவாலய வாசலிலேயே அன்னதானம் செய்யலாம்.
நமது மனப்பூர்வமான அன்னதானமே முக்கியம்;இந்த அன்னதானம் செய்வதை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது.
நாம் அன்னதானம் செய்வதோடு நமது மனம் நிறைவடைந்துவிடும்;நம்மிடமிருந்து அன்னதானத்தைப் பெற்றவர்கள் அதை தவறாகப் பயன்படுத்தினால்,அது நம்மைக் கட்டுப்படுத்தாது
வேதத்தில் அன்னதானம்
அன்னநநிந்த்யாத் – தத்வ்ரதம்
அன்னம் பகுகுர்வீத! தத்விரதம்!
நகஞ்சன வஸதௌ ப்ரத்யால சக்ஷீதா! தத்வ்ரதம்!
தஸ்மாத் யயா கயாச விதயா பஹ்வண்ணம் ப்ராப்ணுயாத்!
ஆராத்யஸ்மா அன்ன மித்யா சக்ஷதே!
(தைத்ரீயோப நிஷத் – ப்ருகுவல்லி)
பொருள் : அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. – அது விரதம்.
அன்னதாதா சுகி பவ
(அன்னத்தை வழங்குபவர் சுகமாக வாழ்வார்)
– என்ற மூதுரையும்,
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி
(திருக்குறள் – 226)
என்ற திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன.
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
அற்றார் அழிபசி தீர்த்தல் – வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது – பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான்.
(எல்லா நன்மைகளும் அழிய வருதலின், ‘அழி பசி’ என்றார். ‘அறம் நோக்கி’ என்பது எஞ்சி நின்றது. ‘அற்றார் அழிபசி தீர்த்த’ பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.).











