சங்கராம்ருதம் – 250
சங்கடத்துக்கு பரிபூரணமா நிவர்த்தி அடைஞ்ச
சம்பவம்.
தம்பதிக்கு பரமாசார்யாகிட்டே ஏதோ சொல்லி தீர்வு
கேட்கணும்னு கோரிக்கை இருந்தது. ஆனா, அவா
ஆசார்யா முன்னால வந்து நின்னதும் எதுவும்
சொல்றதுக்கு முன்னாலேயே குங்கும பிரசாதத்தைக்
குடுத்து அவாளை அனுப்பிவிட்டார் ஆசார்யா.
அதனால ரொம்பவே கவலையோட நகர்ந்த அவாகிட்டே மடத்து
சிப்பந்தி ஒருத்தர் பெரியவாளோட காஷ்ட மௌனத்தைப்
பத்தி சொல்லி,இன்னொரு நாள் மடத்துல இருக்கறச்சே
வந்து பாருங்கோன்னு ஆறுதலா சொல்லி அனுப்பினார்.
மறுபடியும் அதே தம்பதிகள் வேறொரு நாள் மடத்துக்கு
வந்து,வரிசைல நின்ற அவாளோட முறை வந்தது.
தன் முன்னால நின்ன அவாளை ஒருதரம் ஏற இறங்கப்
பார்த்தார் ஆசார்யா. கைகளைக் குவிச்சு நமஸ்காரம்
செஞ்ச அவா, தங்களோட குறையை சொல்ல நினைச்சு
“பெரியவா எங்க..” அப்படின்னு ஆரம்பிச்சதுதான் தாமதம்
சட்டுனு நிறுத்துங்கோங்கறமாதிரி கையைக் காட்டினார்
பரமாசார்யா.
என்னடா இது நம்ப பிரச்னைக்கு தீர்வே இல்லையோ?..
சொல்றதுக்கு முன்னாலயே வேண்டாம்னு தடுக்கறாரே
பெரியவா. காரணம் என்னவா இருக்கும்னு அவா திகைச்சு
நின்னா.சுத்தி இருந்தவா, ஆசார்யா அவாளைத் தடுத்ததுக்குக்
காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வப்பட்டா. ஆனா,
இதெல்லாம் எதையும் கவனிக்காதவர் மாதிரி,
“நீங்க ரெண்டுபேரும் இப்போ திரும்பிப் போங்கோ..
தங்கத்தால சின்னதா ஒரு வேல் பண்ணி எடுத்துண்டு
அப்புறம் இங்கே வாங்கோ!” அப்படின்னார், மகாபெரியவா.
வந்தவாளுக்கு ஒரே குழப்பம்.’நாம சொல்லவந்ததை ஏன்
பாதியிலேயே தடுத்தார்? ஒருவேளை அதுக்குத் தீர்வே
இல்லையோ! போனதரம் மௌன்விரதம்னு பேசாமே
இருந்துட்டார். இந்த தரம் இப்படி ஆயிடுத்து. ஏதாவது தெய்வ
குத்தமா இருக்குமோ! எதுக்காக வேல் பண்ணி எடுத்துண்டு
வரச் சொல்றார்னு புரியலை. சரி, தங்களோட கோரிக்கை
என்னன்னு கேட்டுட்டு இதைச் சொல்லி இருந்தாலாவது
அதுக்கான பரிகாரம்னு நினைச்சுக்கலாம். ஆனா, அதைக்
கேட்டுக்காமலே சொல்றாரே..இது எதனால இருக்கும்?
என்றெல்லாம் குழம்பினவா, சரி எல்லாம் தெய்வ சித்தம்.
நாம போய் வேல் செஞ்சு எடுத்துண்டு வந்து பார்ப்போம்.
அப்பவாவது கோரிக்கையை கேட்டுண்டு தீர்வு சொன்னார்னா
போதும்’னு நினைச்சுண்டு புறப்பட்டா.
பத்துப் பதினைஞ்சு நாள் கழிச்சு, பெரியவா சொன்ன மாதிரியே
தங்கத்தால சின்னதா வேல் செஞ்சு எடுத்துண்டு வந்தா அந்தத்
தம்பதி. வரிசையில் நின்ற அவாளைப் பார்த்த பெரியவா, கிட்டே
கூட்டிண்டு வரும்படி ஒரு சீடனை அனுப்பினார்.
“பெரியவா நீங்க சொன்னமாதிரியே வேல் செஞ்சு எடுத்துண்டு
வந்துட்டோம். எங்களுக்கு ஒரு…!” தம்பதிகள் முடிக்குமுன்
இந்தமுறையும் அவாளை எதுவும் சொல்ல வேண்டாம்கறமாதிரி
கையைக் காட்டினார், பரமாசார்யா.
“இந்த வேலை உங்க அகத்துல பூஜை அறையில் வைச்சு தினமும்
பசும்பாலால் அபிஷேகம் பண்ணு. அதோட வாரம் ஒரு தரம்
செம்பருத்திப் பூவால முருகன் நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை
செஞ்சுண்டே வா!” சொல்லிட்டு கொஞ்சம் நிறுத்தினார் ஆசார்யா.
‘நம்ப கோரிக்கை என்னன்னே கேட்டுக்காம இவரா ஏதோ சொல்றார்.
ஒருவேளை நாம சொல்ல வந்த விஷயத்துக்குத் தீர்வே கிடையாதோ
இல்லை இப்போ இவர் சொல்றது ஏதாவது பரிகாரமா இருக்குமோ?
ஒண்ணும் புரியாம பிரசாதத்தை வாங்கிண்டு புறப்படலாம்னு
நினைச்சுண்டு பவ்யமா கையை நீட்டினா ரெண்டுபேரும்.
“என்ன,முக்கியமான விஷயத்தை சொல்லி முடிக்கறதுக்குள்ளே
அவசரமா? இன்னும் நான் சொல்லி முடிக்கலை. அதையும்
கேட்டுட்டுப் புறப்படுங்கோ. வேலுக்கு தினமும் பால் அபிஷேகம்
பண்ணச் சொன்னேன் இல்லையா? அந்தப் பாலையும் அர்ச்சனை
பண்ணின அப்புறம் செம்பருத்திப் பூவையும் உன்னோட மாமியாருக்கு
குடுத்துடு. அவாளை தெனமும் ரெண்டு மூணு செம்பருத்திப் பூவை
சாப்டுட்டு அந்தப் பாலையும் குடிக்கச் சொல்லு. அவாளோட
சிரமத்துக்கு அதுதான் தீர்வு” பரமாசார்யா சொல்லச் சொல்ல,
அப்படியே திகைச்சுப் போய் நின்னா, அந்தத் தம்பதி. அவா
ரெண்டுபேரோட உடம்பும் சிலிர்த்துண்டு அந்த ஆச்சரியத்துல லேசா
நடுங்கினதுகூட அங்கே இருந்தவா எல்லாருக்கும் தெரிஞ்சுது.
கொஞ்சநாழி கழிச்சு,சுயபிரக்ஞைக்கு வந்தவா, ஆசார்யாளை
நமஸ்காரம் பண்ணினா. சாத்துக்குடி பழம் ஒண்ணைத் தந்து
அவாளை ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா.
வரிசையில் நின்ற பலரும் அவளுடைய திகைப்புக்கு காரணம் கேட்க;
“என்னோட மாமியாருக்கு ரெண்டு மூணு வருஷமாவே அடிக்கடி
வயத்துவலி வந்து பாடாப் படுத்திண்டு இருந்தது. சமீபகாலமா
அந்த வலி அவாளுக்கு நிரந்தரமாவே ஆயிடுத்து. பார்க்காத
வைத்தியம் இல்லை. வேண்டாத சுவாமி இல்லை. ஆனாலும்
தினமும் அவா துடிக்கறதைப் பார்க்கறச்சே எனக்கே தாள முடியலை.
தாயாரோட கஷ்டத்தைப் பார்க்க சகிக்காம இவரும் வேதனைப்
பட்டுண்டு இருக்கார்.பெரியவாகிட்டே சொன்னா, தீர்வு கிடைக்கும்னு
தெரிஞ்சவா சொன்னா. அதான் வந்தோம். பரமாசார்யா எங்களைப்
பேசவிடாம தடுத்தப்போ,மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது!. ஆனா
இப்போ..” பேசமுடியாம நாக்கு தழுதழுக்க கொஞ்சம் நிறுத்தினா.
“இப்போ நாங்க எதையும் சொல்லாம அவராவே என் மாமியாரோட
பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கார். இப்படிக் கண்ணுக்கு முன்னால
நடமாடற தெய்வத்தை, நாம சொன்னதைக் கேட்கலையேன்னு தப்பா
நினைச்சுட்டோமேங்கறதை நினைச்சா அழுகை அழுகையா வருது!”
சொல்லி முடிச்சா. அப்புறம் பெரியவா இருந்த திசைப்பக்கமா திரும்பி
நமஸ்காரம் செஞ்சுட்டு புறப்பட்டா.
கொஞ்ச நாள் கழிச்சு அந்தத் தம்பதி திரும்ப வந்தா, “பெரியவா உங்க
அனுகிரகத்தால என் மாமியாரோட வயத்து வலி பரிபூரணமா
குணமாயிடுத்து”ன்னு பெரியவாகிட்டே சொன்னா அந்தப் பெண்மணி.
“இதெல்லாம் என்னோட வேலை இல்லை. எல்லாம் பரமேஸ்வரனோட
கிருபை. முருகனை நினைச்சுண்டு நீ பண்ணின பூஜையோட பலன்!”
அப்படின்னு சொன்ன பரமாசார்யா,அவாளை பரிபூரண சௌக்யமா
இருங்கோன்னு ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பினார்.











