காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், இறைவன் சிருஷ்டியை தோற்றுவிக்கும் பொழுதே, ஒரு மனிதனுக்கு ஞானத்தைக் கொடுக்கும், கேது திசையின் நட்சத்திரத்திலேயே உலகை சிருஷ்டித்தான்.
( கேதுவின் நட்சத்திரம் அஸ்வினி மகம் மூலம்)
நவக்கிரகங்களில் நைசர்க்கிக பலத்தின் அடிப்படையில் முதலிடம் பெறுவதும் கேதுவே.
இன்று இருக்கும் காலகட்டங்களில் ,எந்த ஒரு மனிதனும், 120 வருடம் முழுமையாக வாழ்ந்தால் அதுவே சாதனை தான்.
பிறக்கும் மனிதன் அனைவரும், அடுத்த நூறாவது வருடத்தில், நிச்சயமாக இருக்கப்போவதில்லை.
வாழ்வு நிலையற்றது .ஆனால் வாழும் வாழ்க்கை அர்த்தம் உள்ளது.
அந்த ஞானத்தை கொடுப்பவர் கேது.
கேது ஒருவரை ஈர்த்து ஞானத்தை வழங்கி விட்டால் , அதன்பிறகு வரும் எந்த திசையிலும் மனம் சலனப்படாது.
இறப்பிற்கு பின் தான், இன்பம் முழுமையாக உள்ளது என்ற ஞானத்தை கேது மட்டுமே கொடுக்கும்.
சிற்றின்பம்,பேரின்பத்தை முழுமையாக உணர வைப்பது கேது மட்டுமே.
சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்ற பழமொழி உள்ளது .அது போல் கேது ஒருவரை முழுமையாக ஆக்கிரமித்து ஈர்த்து விட்டால், எந்த நிலையிலும்,எந்த விஷயத்திற்காகவும், அவர் மனம் சலனப்படாது.
ஆனால் கலிகாலத்தில் அனைத்தும் மாறி தான் நடக்கும் என்பதால், சிற்றின்பத்தை நோக்கிதான், சீறிப்பாய்ந்து செல்கிறோம்.
கேது வெறுமையையும் கொடுக்கும் .வெறுப்பையும் கொடுக்கும் .ஆனால் கூடவே ஞானம் என்ற அனுபவத்தையும் சேர்ந்தே கொடுக்கும்.
மற்ற கிரகங்களின் திசை, எதிர்மறையான அமைப்பில் திசை நடத்தினால், எப்படா இந்த பிரச்சினையில் இருந்து மீள்வோம் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கும்.
நல்ல திசைகள் நடைமுறையில் வந்தவுடன், கெட்ட திசையில் நடந்த பாடங்கள் அனைத்தும், மனதை விட்டு அழிந்துவிடும்.
கேதுதிசை எல்லாவற்றிலும் படிப்பினையை கொடுத்து ,ஞானத்தையும் கொடுத்து இருந்தால் , அடுத்து வரும் சுக்கிர தசையில் ஆட்டம் போட தோணாது. அடக்கி வாசிப்பார்கள்.
மண், பொன் ,பெண் என எதிலும் மனம் மயங்காது.
ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தாலும் ,அமைதியாக மனம் அதைக் கடந்து செல்லும்.
ஆனால் கேது திசையில் அந்த ஞானத்தை, நீங்கள் முழுமையாகப் பெற்றிருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
கேது திசையில் விட்டதை பிடிக்கிறேன் என்ற போர்வையில் ஆட்டம் ஆடினால் , சுக்கிர தசையும் நன்றாக இருந்தால் ,நன்றாக ஆட்டம் ஆடி ,பிறப்பு ,இறப்பு சக்கரத்தில் மறுபடியும் சிக்கிக்கொள்ள நேரிடும்.
கலிகாலத்தில் நல்லது எல்லாம் கண்ணை மறைக்கும் என்பதாலும், ராகுவின் தாக்கம் அதிகமாக மாயையை ஏற்படுத்தி, உங்களை ஈர்க்கும் என்பதாலும், இந்த மாயபிடியின் கண்ணில் மண்ணை தூவி ,மீண்டு வருகிறீர்கள் என்பது உங்களை பொருத்தவரை ஒரு சவாலான விஷயமே.
கேது திசையில், ஞானம் சிலருக்குப் புலப்படும் .அந்த பாதையை நோக்கி பயணம் செய்யத் தொடங்குங்கள்.பயணம் ஜெயமாகும்.
நிச்சயமாக பிறப்பு ,இறப்பு தளையில் இருந்து, விடுபடுவதற்கான வாய்ப்பை கேது திசை தான் வழங்கும்.
குடும்பப் பற்று இருந்தாலும், தாமரை இலை தண்ணீர் போல், வாழ பழக வேண்டும்.
கழுவுற மீனில், நழுவுற மீனாக, எல்லாவற்றையும், தெரிந்துகொண்டு, பற்றற்ற நிலையில் ,அவற்றிலிருந்து நழுவி விட வேண்டும்.
கேது திசைக்கு பின் வரும், சுக்கிர தசையில் நீங்கள் ,கேது கொடுத்த ஞானத்தால் ,சாதுவாக மாற போகிறீர்களா? அல்லது மாதுவிடம் (பெண்) சிக்கி சேதுவாக போகிறீர்களா? என்பதெல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது .
ஓம் நமசிவாய











