இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனாரின் சிவநெறி
வளமிகுந்த சோழமண்டலத்திலே, காவேரி கடலோடு சங்கமிக்கும் காவிரிப்பூம்பட்டினத்திலே, வணிகர் குலத்திலே , திரு அவதாரஞ் செய்தவர் இயற்பகையார் .
இவர் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு இல்லை எனாது அவர்கள் கேட்பதை நிறைந்த மனதோடு கொடுத்து வந்தார்.
அடியவர் தோற்றத்தில் சிவபெருமான்:
தன் பக்தனை சோதிக்க எண்ணிய சிவபெருமான், அடியவர் வேடம் பூண்டு இயற்பகையாரின் மாளிகை முன்பாக வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் ஆனந்தம் கொண்ட இயற்பகையார், அடியவர் தன் வாசல் தேடி வந்தது நான் செய்த பாக்கியம் என்று கூறி, அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.
பின்னர் உயர்வான ஒரு ஆசனம் ஏற்படுத்திக் கொடுத்து, அதில் அமரச் செய்தார். பின்னர் அடியவருக்கு யாது வேண்டும் என்பது பற்றி கேட்டார்.
தான் வந்த வேலை சுலபமாகிப்போனதை நினைத்து மகிழ்ந்தார் சிவபெருமான். ‘நீர், ஈசன் அடியவர் எது கேட்பினும் இல்லை என்று கூறாமல் வழங்குவாய் என்று கேள்விப்பட்டேன்.
ஆகையால்தான் உன் இருப்பிடம் தேடி வந்தேன்’ என்றார்.
அதற்கு இயற்பகையார், ‘ஐயனே! எதுவாக இருப்பினும் தயங்காமல் கேளுங்கள். என்னிடம் இருக்கும் பொருள் எதுவுமே எனக்கு சொந்தமானது இல்லை.
எல்லாம் ஈசன் தந்தது. ஆகையால் அதை இறைவனின் அடியவர் களுக்கே கொடுத்து ஆனந்தம் கொள்கிறேன். உங்களின் தேவையை தெரிவியுங்கள்’ என்று கூறினார்.
வந்த அடியவர், ” உனது மனைவியை வேண்டி வந்தனம்” அவளை என்னுடன் அனுப்பி வை’ என்றார்.
சாதாரண ஒரு மனிதனாக இருந்தால், இந்த இடத்தில் நடக்கும் செயல் வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். ஆனால் இறைவனின் சித்தத்தை உணர்ந்த இயற்பகையார், சிவனடியாருக்கு வேண்டியதைத் தருவதாக ஒப்புக் கொண்டார்.
‘ஐயனே! தாங்கள் என்னிடம் இல்லாத பொருளைக் கேட்டு, என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவீர்களோ என்று கவலை கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடைபெற வில்லை. ஆகையால் என் மனம் இப்போது மகிழ்ச்சியில் திளைக்கிறது.
தங்கள் விருப்பப்படி இதோ என் மனைவியை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன்’ என்று கூறியவர் வீட்டின் உள் அறைக்குள் சென்றார்.
அங்கு தன் மனைவியிடம் நடந்த விவரங்களை கூறினார். இயற்பகையாரின் இயல்பை நன்றாக அறிந்து வைத்திருந்த, அவரது உத்தம மனைவி, கணவனின் பேச்சுக்கு மறுபேச்சின்றி அவர் கட்டளையை ஏற்றுக் கொண்டாள்.
தான் சிவனடியாருடன் செல்வதாக ஒப்புக் கொண்டாள். இதையடுத்து இயற்பகையார் மனைவியை சிவனடியார் முன் நிறுத்தி, அழைத்துச் செல்லும்படி கூறினார்.
வேடதாரியான சிவபெருமானும் அங்கிருந்து சென்றார். அவர் பின்பாக இயற்பகையாரின் மனைவியும் புறப்பட்டார். சற்று தூரம் சென்ற சிவனடியார், ஏதோ ஒரு யோசனையில் அப்படியே நின்றார்.
காவலாக சென்ற இயற்பகை நாயனார்:
இன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், ” யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்” என்றார்.
அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், ” இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் ” என மொழிந்தார்.
இறை அருள்:
இவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தனது மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாயாவனம் என்ற பகுதி வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, சிவனடியாரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில்
சிறிது தூரம்தான் சென்றிருப்பார் இயற் பகையார், அப்போது சிவனடியாரின் ‘காப்பாத்துங்கள் இயற்பகையாரே! காப்பாத்துங்கள்!’ என்ற ஓலக்குரல் கேட்டது.
பதறிப்போன இயற் பகையார் குரல் வந்த திசை நோக்கி ஓடினார். ‘ஐயனே! உங்களுக்கு தீங்கிழைப்பவர், எஞ்சியிருப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை கொன்றொழிப்பேன்’ என்று எண்ணியபடி சென்றார். ஆனால் அங்கு சிவனடியாரைக் காணவில்லை.
தன் மனைவி மட்டும் தனியாக நிற்பதைக் கண்டார். சற்றே குழப்பத்தில் ஆழ்ந்தார்.
அப்போது ஒரு பேரொளி விண்ணில் எழுந்தது. அந்த ஒளியின் ஊடே அசரீரியாக சிவவேதியரின் குரல் மட்டும் ஒலித்தது. ‘இயற்பகையாரே! உம்மை சோதிக்க யாமே வந்தோம். ஊரார் என்னை காமாந்தகாரன் என்று வசைபாடினர். நீரோ உலக மாந்தரின் இயல்பான சுபாவங்களையெல்லாம் உதறியெறிந்து,
உமது கொள்கையில் உறுதியாக நின்றீர். சிவனடியாரே உபசரிக்கும் உமது பண்பு இந்த உலகம் கண்டு வியக்கக்கூடியது. அதை அனைவருக்கும் உணர்த்தவே உம்மை இவ்வாறு சோதித்தோம். சிவலோகம் உம்மை வரவேற்கக் காத்திருக்கிறது’ என்றார் இறைவன்.
இயற்பகையார் மெய் சிலிர்த்து நின்றார். அவர் மீதும், அவர் மனைவி மீதும் விண்ணவர் பூமாரி பொழிந்தனர். சிவனடி சேர்ந்து அவ்விருவரும் அரிதிலும் அரிதான பாக்கியம் பெற்றனர். அவர்களுடன், இயற்பகையாரின் வாளுக்கு பலியானவர்களும் சிவலோகம் சென்றனர்.











