காசி மாநகரத்தின் மாபெரும் ரகசியங்கள்.
காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும் ஆன்மீக நகரம்.
நாம் பயணம் செய்யப்போவது இரண்டாம் நகரமான ஆன்மீக நகரம். கங்கை நதியின் பயணத்திற்கு ஏற்ப கரையில் படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 350க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருக்கின்றன. இவற்றை காஹட் (Ghat) என அழைக்கிறார்கள். ஒவ்வொரு காஹட்க்கும் ஒரு பின்புலமும் காரணமும் இருக்கிறது. படித்துறைகளை மூன்று வகையாக பிரித்திவிடலாம். அரசர்கள் கட்டிய படித்துறை, ஆன்மீக மடங்கள் கட்டிய படித்துறை மற்றும் பொதுமக்களுக்கான படித்துறை என வகைப்படுத்தலாம். இதில் ஆன்மீக மடங்களின் படித்துறை பொதுமக்களின் படித்துறையாகவே பயன்படுத்தபடுகிறது.
விஷேஷ காலத்தில் மட்டும் ஆன்மீக மடாதிபதிகள் அவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அரசர்களின் படித்துறை என்பது அரசர் மட்டுமே பயன்படுத்தும் அமைப்பாக இருந்துவந்தது. தற்காலத்தில் அரசர்கள் மற்றும் முடியாட்சி இல்லாத காரணமாக இவை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
காசியில் அதிகாலை தியானம் முடிந்ததும் நான் கண்ட காட்சி.
குடும்பமோ வேறு நபர்களோ அதிகமாக படித்துறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அரசர்களின் படித்துறை என்றவுடன் ஒன்று தான் என நினைத்துவிடக்கூடாது. பாரத தேசத்தின் பல அரசர்கள் இங்கே தங்களுக்கு என பிரத்யோகமான படித்துறையை கலைநயத்துடன் கட்டியிருக்கிறார்கள். அதில் அவர்கள் மட்டும் ஏகாந்தமாக கங்கையை ரசிக்கவும், ஆராதிக்கவும் ஏகப்பட்ட விஷயங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.
பல அரசர்களுக்கு படித்துறை கட்டும் அளவுக்கு காசி நகரம் பொதுவான ஊராக இருந்தது. இவற்றை புரிந்துகொள்ள வரலாற்று பாடத்தின் சில பக்கங்களை நாம் புரட்ட வேண்டும். காசி என்பது நகரம் என்பதை காட்டிலும் அது ஒரு நாடு என கூறலாம். பாரத தேசம் பல சிற்றரசர்களால் சிதறுண்டு ஆளும் காலத்தில் காசி நகரம் ஒரு அரசின் கீழ் இருந்தது.
காசி மற்றும் அதன் சுற்றுபுற நகரங்கள் இணைந்து காசி சமஸ்தானமாக இருந்தது. காசி சமாஸ்தானம் பிற அரசுகளை விட ஒரு தனித்துவமாக இருந்தது. காசி சமஸ்தானத்தில் ராணுவம் மற்றும் போர்படை என்பது இல்லை. காசி ராஜா காசியை நிர்வாகிக்கும் தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தார். காசி மேல் யாரும் போர் தொடுக்கவோ, காசி அரசர் பிறர் மேல் போர் தொடுக்கவோ மாட்டார். தற்காலத்தில் கூட உலகில் ஒரு நாடு அப்படி இருக்கிறது. அது உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?
காசியில் பல கல்விச்சாலைகள் இருந்ததால் பாரத தேசத்தில் பல நாட்டு அரசர்களும், அறிஞர்களும் அங்கே வந்து பாடம் பயின்றனர். அதனால் காசி மாநகரம் கல்விக்கு பிரதானமான விஷயமாக இருந்தது. ஐநூறு வருடத்திற்கு முன் தமிழகத்தில் ஒருவர் காசி சென்று படித்தவன் என கூறினால் அவருக்கு கிடைக்கும் மதிப்பு அளவிட முடியாதது. காசி ராஜா அங்கே இருக்கும் பல்கலைகழகத்தின் சிறந்த கல்வியாளராக தேர்ச்சி பெற்று சமஸ்தானத்தில் அறிஞர்களுடன் அலங்கரிப்பவராக இருப்பார்.
பாரத தேசத்தில் உள்ள அறிஞர்கள் தங்களின் ஆறிவை நிரூபணம் செய்யவும், ஆராய்ச்சிகளை வெளியிடுவதற்கும் காசிக்கு செல்லுவார்கள். அங்கே அறிஞர்கள் குழு ஒன்று (Senate members) ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்கும். சான்றிதழ்கள் செப்பு தகட்டில் அமைந்திருக்கும். சில அறிஞர்கள் தனது செப்பு பட்டையத்தை சுமந்து வர பல அடிமைகளையும், குதிரைகளையும் வைத்திருந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகிறது.
காசி ராஜாவின் அரண்மனை பிரம்மாண்டமானது. காசி அரசர்களுக்கு பல கலைகள் தெரியும் என்றும் அதில் பல அறிவிப்பூர்வமான காரியங்கள் செய்தார்கள் என நாடோடிக்கதைகள் உண்டு.
காசியில் உள்ள படித்துறைகளில் பல நாட்டு ராஜக்களுக்கு சிறிய அரண்மணைகளை கட்டுவதற்கு அனுமதித்து, இரு விரோத நாட்டு ராஜாக்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் சச்சரவு இல்லாமல் அமைதியை நிலைநாட்டுவது காசி ராஜாவின் முக்கிய பணியாக இருந்தது.
படித்துறையில் ராஜாக்களுக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாதாரணமானது அல்ல. ஒவ்வொன்றும் குட்டி அரண்மனை. சில அரண்மனைகளில் இருந்து பார்த்தால் கங்கை நதியும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக் தெரிவார்கள். ஆனால் கரையில் இருந்து பார்த்தால் அரண்மனையில் இருப்பவர்களை பார்க்க முடியாது. இது போன்ற கலை நயம் பல அதில் உள்ளன. ராஜாஸ்தான் அரசர் ராஜா ரஞ்சித் சிங் , தனது நாட்டிலிருந்து ஊதா நிற சலவைக் கற்களை கொண்டு வந்து இங்கே அரண்மனை கட்டி இருக்கிறார். சத்ரபதி சிவாஜி இங்கே ஒரு அரண்மனை படித்துறை அமைத்திருக்கிறார். நேப்பாள் மஹாராஜாவும், சோழ அரசர்களும் இங்கே தங்கள் சந்ததியினர் வந்தால் தங்குவதற்கு அரண்மனை கட்டியிருக்கிறார்கள்.
காசி நகரம் இவ்வளவு தொன்மையான ஊராகவும், பல நாட்டு அரசர்கள் விரும்பும் ஊராகவும் இருந்தது.
நிற்க… எதற்கு இந்த விக்கிப்பிடியா விளக்கம் என்கிறீர்களா?
பாரத தேசத்தில் இருக்கும் அரசர்கள் மக்கள் விரும்பும் படி காசியில் என்ன இருக்கிருக்கிறது ? அங்கே ஐந்து அதிசயங்கள் நடக்கிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். அவற்றை பட்டியலிடுகிறேன்
1) பல்லி சப்தம் எழுப்பாது. : – காசியில் பல்லிகள் உண்டு. ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக எடுப்பவர்கள். காசியில் அதற்கு இடமில்லை.
2) பிணம் நாற்றம் எடுக்காது : பிணம் எரியும் பொழுது பக்கத்தில் நின்று இருக்கிறீர்களா? பிணத்தின் கேசமும், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடை வார்த்தையால் விளக்க முடியாது. இதைத்தான் பிண வாடை என சொல்வழக்கில் கூறுவார்கள். ஆனால் இங்கே பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது.
3) கருடன் வட்டமிடாது – காசியில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும், உணவுகள் சிதறிகிடந்தாலும் இறைக்காக கருடன் வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும் ஆனால் வட்டமிடாது.
4) பூ மணக்காது : இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும். 🙂 என்ன செய்ய காசியில் அப்படித்தான் இருக்கிறது. தென்நாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது, முக்கியமாக மல்லி முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்தி பூ அதிகமாக கிடைக்கும். தென்நாட்டில் சாமந்திபூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும்.
பலருக்கு இந்த பூவின் வாசம் பிடிக்காது எனலாம். அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் காசியில் இந்த பூக்கள் அதிகம் கிடைக்கிறது. ஆனாலும் அவை வாசங்கள் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கிறது. வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும். ஆனால் காசி பூக்கள் மணப்பதில்லை.
5) பால் வற்றாது : இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது. பசுக்கள் கட்டப்படுவதில்லை. பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள். பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை. மனிதனை கண்டு மிரளுவதில்லை. சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும். இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை. பசுக்கள் கங்கையின் உருவில் உலாவருவதாக மக்கள் கருதுகிறார்கள். அதனால் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு. கங்கை இந்த நகரத்தில் என்றும் ______ அதனால் பசுக்களின் பாலும் வற்றாது என்கிறார்கள்.
அது என்ன வாக்கியம் விடுபட்ட இருக்கிறது என்கிறீர்களா? கங்கை ___ என கூறினால் பல கோடிவருடம் தினமும் ஆயிரம் பசுக்களை கொன்ற பாவம் கிடைக்குமாம். நான் என்றைக்காவது கங்கை ___ உண்டா என கேட்க தனது துடுப்பை எடுத்து என்னை தாக்க வந்தான் ஒரு படகு ஓட்டி. எனக்கு ஏற்கனவே பாவம் கிடைத்தது. அதை கங்கையில் குளித்து சரி செய்துவிட்டேன் :).
படகோட்டி கூறிய அதிசங்களைதான் நான் இங்கே கூறி இருக்கிறேன். இதில் ஐந்தையும் ஆராய்ந்து உண்மை என உணர்ந்து இங்கே பட்டியலிடுகிறேன். பலவருடங்கலாக இன்றும் இயற்கையாகவே ஐந்து விஷயங்கள் நடக்கிறது. காசியில் மட்டும் என்ன இப்படி நடக்கிறது என உங்களால் காரணத்தை யூகிக்க முடியுமா? கொஞ்சம் யோசியுங்கள். அதற்குள் நான் கங்கை கரையின் படித்துறையில் உலா சென்று வருகிறேன்.
யஸ்யாமிதம் கல்பிதமிந்த்ரஜாலம்
சராசரம் பாதி மனோ விலாஸம் மி
ஸச்சித்ஸுகைகா பரமாத்மாரூபா
ஸா காசிதாஹம் நிஜபோதரூபா மிமி
இந்திர ஜாலம் போல இந்த உலகமானது நம் மனதில் மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. இவை அனைத்தும் மனம் போன போக்கில் தோற்றுவிக்கபட்டது. பரமாத்மாவின் சத்- சித்- ஆனந்த ரூபமே காசி நகரம். ஆகவே நான் காசியாக இருக்கிறேன்…!
-ஆதிசங்கரர்.
உலகின் புகழ் பெற்ற நகரங்களில் தொன்மையானது என காசியை கூறலாம். காசி என்பது எந்த மதத்திற்கும் சார்ந்த நகரம் அல்ல. இந்த செய்தி உங்களுக்கு சற்று ஆச்சரியமாக இருக்கலாம்.
இந்துக்கள்,ஜைனர்கள்,சமணர்கள்,முகமதியர்கள், சீக்கியர்கள் என ஆசிய கண்டத்தின் அனைத்து மதத்தினருக்கும் ஒருவித இறைவழிபாடு செய்யும் முக்கிய நகரமாக வாரணாசி விளங்குகிறது.
இந்துக்களின் திருமணத்தில் காசி யாத்திரை என்ற ஒரு நிகழ்வு உண்டு. அதாவது ஒருவர் தனது வாழ்க்கையை துறந்து சன்யாசம் பெற்றுக்கொள்ளும் செயலை குறியீடாக சொல்லுவது காசியாத்திரை. பிறகு மணமகனின் மனதை மாற்றி திருமணம் செய்வது போல இந்த நிகழ்வை செய்வார்கள். முன்காலத்தில் உணர்வு பூர்வமாக இருக்கும் ஒரு நிகழ்வு, தற்பொழுது உணர்வற்று வெறும் சடங்காக இருக்கிறது. நம் கோவிலில் முன்பு பக்தியுடன் செய்யும் பூஜைகள் நாளடைவில் இவ்வாறு சடங்காக மாற்றம் கொள்வது உண்டு.
காசி யாத்திரை என்ற இந்த சடங்கை திருமணத்திலிருந்து தப்பிக்க மண மகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு என வேடிக்கையாக சொல்லுவார்கள்.
வாரணாசியின் நகர வடிவமைப்பு சற்று வித்தியாசமானது. நகரம் முழுவதுமே ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கும் சிறுவர்களுக்கான வலைவிளையாட்டு போன்று பல சந்துகள் கொண்டது. சாலைகள் என்பதே கிடையாது. அனைத்தும் சந்துகள் தான். உங்கள் இரு கைகளையும் அகல விரித்துக்கொண்டு நடுவில் நின்றீர்கள் என்றால் உங்கள் உள்ளங்கையில் சலையின் இரு புறமும் தட்டுப்படும். அவ்வளவு குறுகிய சந்துகள். ஒருவிதத்தில் வாரணாசியின் அமைப்பில் சுவாரசியம் கூட்டுவது இந்த சந்துகள் தான்.
பழம்பெரும் நகரம் எல்லாம் நாளடைவில் கட்டிட ஆக்கிரமிப்புகளால் குறுகும் என நாம் அறிவோம். ஆனால் காசிநகரம் இதிலும் வித்தியாசமானது. ஆக்கிரமிப்பு இருக்க கூடாது என்பதற்காக இங்கே கட்டிடங்கள் கட்டபட்டது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் காசி குறுகிய சந்துகளால் ஆனது அல்ல.
ஆப்கான் தேசத்தவர்களின் படையெடுப்பால் இந்தியாவில் பல நகரங்கள் கொள்ளையடிக்கபட்டது. அதில் குஜராத்தில் உள்ள சோமநாத் கோவிலும், காசியில் உள்ள விஸ்வநாத் கோவிலும் முக்கியமானது. இவ்வாறு தொடர் கொள்ளையால் கோவில்கள் சிதைக்கபட்டு, அதில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயின. சில முட்டாள் ஆப்கான் அரசர்கள் இஸ்லாமியத்தை கடைபிடிக்கிறேன் என பல கோவில்களில் இருக்கும் மூர்த்தங்களை மூர்க்கமாக சிதைத்தார்கள்.
ஐநூறு வருடங்களுக்கு முன் இந்தியாவின் ஜோதிர்லிங்க கோவில்கள் மிகவும் சிறப்பன செல்வ நிலையில் இருந்தன. இதனால் கோவிலை அழித்த மாதிரியும் ஆயிற்று செல்வம் கிடைத்த மாதிரியும் ஆயிற்று என அத்துமீறல்களை செய்தார்கள்.
காசி என்ற நகரில் விஸ்வநாதர் கோவில் ஜோதிர் லிங்கத்தில் ஒன்று மற்றும் முதன்மையானது. அதனால் அதில் செல்வத்தின் அளவு அதிகமாகவும், மக்கள் வணங்குவது அதிகமாகவும் இருந்தது. இதனால் அங்கே கொள்ளையடிக்க வந்த ஒளரங்க சீப் போன்றவர்கள் முதலில் சிதைக்க நினைத்தது விஸ்வநாதர் கோவிலையும் அதன் உள் இருக்கும் விஸ்வநாதரின் லிங்கத்தையும் தான்.
முகமதிய அரசர்களின் படை நெருங்கக் கூடாது என்பதற்கும் எளிதில் அடையாளம் கண்டறியக்கூடாது என்பதற்கும் பல சந்துகள் மற்றும் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து விஸ்வநாதர் இருக்கும் இடத்தை மறைத்தார்கள். காசியின் முக்கியவீதியில் இருந்து எந்த பக்கம்
திரும்பினாலும் சந்துகளாகவே இருக்கும். அனைத்தும் ஒன்று போலவே இருக்கும். மக்கள் தங்கள் கோவிலை காப்பாற்ற செய்த இந்த முயற்சிகள் சில காலம் கைகொடுத்தது. முக்கிய வீதியிலிருந்து கோவில் இருக்கும் இடம் வரை இரண்டு கிமீ தூரம் சந்துகள்தான். சிறிய கார் கூட செல்ல முடியாது. சரக்கு எடுத்து செல்லும் மூன்று சக்கர சைக்கிள் சென்றாலே எதிரில் வருபவர்கள் நடக்க முடியாது.
காசியில் இந்த நகர கட்டமைப்பு உலகின் எந்த பகுதியிலும் இல்லை என்பது சிறப்பு. இந்த வீதிகளில் நடந்தால் இதற்கு முன் எப்பொழுதோ இங்கே வந்தது போன்ற உணர்வு இருக்கும். புதிய இடமாக இருக்காது. இந்த திருப்பத்தில் வலது பக்கம் திரும்பினால் இன்ன இடம் என்பது போல எல்லாம் பழகிய இடமாக இருக்கும். சந்துகள் எல்லாம் வளைவுகளாக இருந்தாலும் இந்த வலையினுள் தான் விஸ்வநாதரும் இருக்கிறார்.
இப்படி மக்கள் பிறரிடம் இருந்து பாதுகாத்து வைத்து புனிதமாக வணங்கி வந்த விஸ்வநாதருக்கு வந்தது ஒரு சங்கடம். ஆறுகால பூஜை நடந்து வந்த லிங்க திருமேனியின் மேல் ஒரு அகோரி என்ன செய்தார் தெரியுமா?
அவரை திட்டிக்கொண்டிருங்கள்…..
தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம் மி
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே மிமி
தேவர்களின் தலைவன் வணங்கும் திருவடியை கொண்டவரும், சந்திரனை போன்ற ஒளி பொருந்திய யஜ்ந்ஞோபவீதம் கொண்ட கருணை மிகுந்தவரும், யோகிகளால் வணங்கப்படும் யோகியர்களின் தலைவனும், உடலில் ஆடைகள் இன்றி திகம்பர நிலையில் காசி மாநகரில் இருக்கும் கால பைரவரை நான் வணங்குகிறேன்.
– ஆதிசங்கரர், கால பைரவ அஷ்டகம்
இறைவனை மூல சக்தியாக கண்டால் ஒன்று தான். ஆனால் இறை சக்தி செயல்படும் பொழுது பல்வேறு சக்தியாக மாற்றமடைகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அனுக்களால் ஆனது. அனு என்பது இதன் மூலம். ஆனால் அனைத்து பொருளும் ஒன்று போலவே இருப்பது இல்லை அல்லவா?
”கால பைரவ்” என வட மொழியில் கூறப்படும் காலபைரவர் என்ற இறை சக்தி மூல சக்தியின் பரதிபிம்பம் என்றாலும் தனித்துவமானது. காசி என்ற நகரத்தின் முழுமையான கடவுள் கால பைரவர். ஞானத்தின் வடிவமாகவும் ஞானிகளுக்கு எல்லாம் முதல் ஞானியாகவும் இருக்கும் இறைவனே கால பைரவன்.
அகோரிகள் தங்களையே இறைவனாக வணங்குபவர்கள். ஆனாலும் அவர்கள் தங்களை காலபைரவனாகவே வணங்குகிறார்கள். காலத்தை கடந்து நிற்பவர்களும், ஞானத்தை உணர்ந்து இருப்பவர்களும் கால பைரவர்கள் தான்.
நாய் காலபைரவரின் வாகனம் என்பார்கள். என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் தன்மை நாயாக உருவகப்படுத்தபடுகிறது. ஆடையில்லாமல் இருப்பதே கால பைரவரின் தன்மை என்றாலும் சில கோவில்களில் கருப்பு ஆடை அணிவிக்கிறார்கள்.
கருப்பு என்ற உடை நிறங்கள் அற்ற தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது. இந்த கருத்தை நினைவில் கொள்ளுங்கள் பின்னால் இதற்கு வேலை இருக்கிறது.
கால பைரவரின் தன்மை அறியாமையை ஒழித்து ஞானத்தை வணங்குவதாகும். ஆணவம் மற்றும் மாயை என்ற மயக்கத்தில் இருப்பவர்களுக்கு தகுந்த நிலையில் உணர்வுகொள்ள செய்து ஞானத்தை வழங்குவார். ஆனால் காலபைரவரிடம் சாத்வீகமான அனுகுமுறையை எதிர்பார்க்க முடியாது. அவரின் ஒவ்வொரு செயலும் அதிரடியாகவே இருக்கும்.
ஒரு சந்தையில் ஒருவர் அனைவரையும் அழைத்து ஒரு செய்தி சொல்லுகிறார் என கொள்வோம். அந்த செய்தியை அனைவரும் கூடி கேட்பார்களா என கூற முடியாது. இதே ஒருவர் சில சாகசங்களை மக்கள் முன் செய்து அதிரடியாக ஒரு செய்தியை கூறினால் பாமர மக்களுக்கு அந்த செய்தி சென்று அடையும். கால பைரவர் ஞானம் வழங்கும் நிலை இந்த இரண்டாம் வகையை சார்ந்தது.
அகோரிகளின் ஆதி குரு காலபைரவர். அகோரிகள் தங்களை காலபைரவ ரூபமாகவே நினைக்கிறார்கள். அதனால் அகோரிகளின் சில செயல்பாடுகள் மக்களின் அறியாமையை அதிரடியாக சுட்டிகாட்டுவது போல இருக்கும். சிலர் அதில் அருவருப்படைவார்கள் சிலர் அகோரிகளை விட்டு ஓடிவிடுவார்கள்.
சில வருடங்களுக்கு முன் நான் காசி பயணத்தில் கண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அருவெறுப்பு அடையக்கூடியவர்கள் அடுத்த பத்தியை கடந்து செல்லுவது நல்லது.
கங்கை கரையில் நான் அமர்ந்திருக்கும் பொழுது நான் இருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு அகோரி அமர்ந்திருந்தார். வெளி ஊரிலிருந்து வரும் சிலர் அகோரியை கடந்து செல்லும் பொழுது வணங்கிவிட்டு சென்றார்கள். அவரும் அதை தவிர்த்து வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டார். ஆனாலும் மக்கள் விடுவதாக இல்லை. சிலர் அவரை வணங்குவதை பார்த்த மேலும் சிலர் அந்த அகோரியை வணங்க துவங்கினார்கள். ஆனால் அனைவர் முன்னிலையில் யாரும் சற்று எதிர்பாராத சூழலில் அருகில் இருந்த மலத்தின் ஒருபகுதியை கைகளில் எடுத்து சுவையாக உண்ணத் துவங்கினார் அந்த அகோரி. அவ்வளவுதான் அங்கே ஒரு ஈ காக்கா இல்லை. வணங்கத்தக்க ஒருவர் மலம் தின்றுகொண்டிருந்தால் நம் மக்கள் புனிதராக பார்க்குமா? சொல்லி புரியவைப்பதில்லை அகோரிகள்…!
ஒளரங்கசீப் காலத்தில் செல்வம் கொள்ளை என்பதை தாண்டி மத திணிப்பு மற்றும் மதப்போர்கள் நடந்துகொண்டிருந்தது. காசியை இஸ்லாமிய புனித நகரமாக மாற்ற முயற்சி செய்துவந்தார் ஒளரங்கசீப். ஒருபுறம் கடினமான போர் தந்திரம் மற்றும் பிரம்மாண்டமான போர் படை என ஒளரங்கசீப் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை மற்றும் அவர்களின் குழப்பம் விளைவிக்கும் செய்கை ஆகியவற்றால் முகலாய சக்ரவர்த்தியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
காசியில் சந்துகளை கட்டி குழப்பம் விளைவித்தனர். சிலர் எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்களை அமைத்து அதை வணங்கினார்கள். இதனால் ஒளரங்கசீப் குழப்பம் அடைந்தார். முடிவில் சில சூழ்சிகளும் தந்திரங்களை செய்து விஸ்வநாதர் கோவிலை கண்டுபிடித்து முற்றிலும் சிதைத்தார். அங்கே இந்த சுயம்பு சிவலிங்கத்தை சுக்குநூறாக்கினார்.
விஸ்வநாதர் கோவில் சிதைக்கவருகிறார்கள் என்றும் கைமீறி போகிறது என்பதையும் தெரிந்துகொண்ட சிலர் சுயம்பு லிங்கத்தை எடுத்து கோவிலுக்கு அருகில் இருக்கும் கிணற்றில் வீசிவிட்டார்கள். சுயம்பு லிங்கம் இருந்த இடத்தில் வேறு ஒரு பாணலிங்கம் வைக்கப்பட்டது.
ஒளரங்கசீப் சிதைத்தது சுயம்புலிங்கத்தை அல்ல..!
சிதைத்தது மட்டுமல்லாமல் விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் பெரிய மஸ்ஜித் கட்டி தொழுகை நடத்தினார் ஒளரங்கசீப். இன்று விஸ்வநாதர் கோவில் என மக்கள் வழிபடும் இடம் முன்பு விஸ்வநாதர் கோவில் இருந்த இடம் அல்ல. முன்பு மூலஸ்தானத்தை பார்த்து இருந்த நந்தி இப்பொழுது மசூதியை பார்த்து நிற்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட படம்.விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதி. புகைப்படத்தின் வலது கோடியில் சிதிலம் அடைந்த கோவில் கோபுரம் தெரியும்.
நந்திக்கு அருகில் இருக்கும் கிணற்றில்தான் இன்றும் விஸ்வநாதர் இருக்கிறார். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை பல முறை சிதைத்து மறுபடியும் மறுபடியும் கட்டபட்டது விஸ்வநாதர் கோவில். முகலாய பேரரசு வீழ்ந்ததும் தற்சமயம் இருக்கும் விஸ்வநாதர் கோவில் வடிவம் பெற்றது. இன்றும் அந்த கேணிக்கும், மசூதிக்கும் துணை ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அரசியலில் இன்றளவுக்கு சிவன் முக்கிய துருப்பு சீட்டு இல்லை. இருந்தால் ராம ஜென்ம பூமி என்பதற்கு பதில் நம் ஆட்கள் சிவ ரவுத்திர பூமி என கூவ துவங்கி இருப்பார்கள்.
விஸ்வநாதர் கோவிலில் இருக்கும் கேணியை ஞானக்கேணி என கூறுகிறார்கள். இதில் இருக்கும் நீர் தீர்த்தமாக குடித்தால் ஞானம் கிடைக்கும் அறிவு பெருகும் என நம்பிக்கை நிலவுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விஸ்வநாதர் கோவிலை பூஜிப்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவர்கள் பாண்டாக்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வரும் மக்களிடம் பணம் பறிப்பது, மேலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வது போன்ற துவேஷங்களை செய்து வந்தனர்.
கங்கையில் குளித்துவிட்டு சிறிது நீரை எடுத்து வந்து விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது பக்தர்களின் வழக்கமாக இருந்தது. அதற்கு மிகப்பெரிய வரிசையாகவும், நீர் அபிஷேகம் செய்வதே ஆன்மீகத்தின் முக்கிய நிலை என்றும் மக்கள் நம்பத்துவங்கினார்கள். இவ்வாறு அறியாமை பெறுக விஸ்வநாதர் கோவிலை பூஜை செய்துவந்தவர்களும் காரணமாக இருந்தார்கள்.
மக்களின் அறியாமையை அதிரடியாக போக்கும் தன்மை கொண்டவர்கள்தான் அகோரிகள் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு வேளை வந்தது. ஞான கேணியில் இருக்கும் விஸ்வநாதரை கண்டுகொள்ளாமல் மக்கள் தங்கள் விஸ்வநாதரை பூஜிக்கிறோம் என்ற அகந்தை மற்றும் அறியாமையில் இருப்பதை கண்ட அந்த அகோரி கூட்டமாக இருந்த விஸ்வந்தாரர் கோவிலுக்குள் சென்று அந்த காரியத்தை செய்தார்.
அனைவர் முன்னிலையிலும் திடீரென சிறுநீரை நேராக சிவலிங்கத்தின் மேல் செலுத்தினார். அனைவரும் அறுவெறுப்படைந்து வெளியேரினார்கள். தனது கையில் இருக்கும் சங்கை எடுத்து மிகவும் சப்தமாக ஒலி எழுப்பி பிறகு கூறினார்….
உங்களுக்குள் இருக்கும் விஸ்வநாதரை வணங்கு….
உன் ஞானம் என்ற கங்கையால் அபிஷேகம் செய்..
இவ்வாறு கூறிவிட்டு ஒடி மறைந்தார் அந்த அகோரி. அனைவரும் உணரத்துவங்கினார்கள்.
அகோரிகளின் குழுவை அகடா என கூறுவார்கள். அகோரிகளின் இந்த குழுவை தவிர அகோரிகளின் ஆற்றல் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அகோரிகள் தங்களின் ஆற்றலை பிறருக்குள் செலுத்தி அவர்களை கருவியாக்கி சமூகத்தை தூய்மையாக்குவார்கள்.
காசி மாநகரம் சென்ற பலருக்கு அகோரிகளின் ஆற்றல் மாற்றபட்டாலும், முக்கியமாக சிலருக்கு இப்படி மாற்றம் செய்யபட்டு அவர்கள் கருப்பு உடையில் நம் சமூகத்தை வலம் வந்தார்கள். ஒருவர் பாரதி மற்றொருவர் பெரியார்…! கருப்பு என்பது சமூகத்திற்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்பது மட்டுமல்ல காலபைரவரின் நிறம் அது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காசி நகரமே காலபைரவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காசி நகருக்கு சென்று திரும்பும் எவரும் ஏதோ ஒருவிதத்தில் தங்களுக்குள் மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்வார்கள்.
அகோரிகளின் அதிரடிக்கு மேலே சில உதாரணங்கள் கூறினேன். இதைவிட ஆதிசங்கரருக்கே ஒரு அகோரி ஆப்பு வைத்தார்.
காசியை, ‘ஒளிப் பிழம்பு’ என்பார்கள். அதோடு காசி என்பது தரையில் இல்லை, அது சற்றே உயரத்தில், சிவனின் திரிசூலத்தின் மீது இருக்கிறது என்றும் சொல்வர்.
இதற்குக் காரணம், ‘காசி’ என்பதற்கு நிலத்தில் ஒரு பொருள் உருவமும், அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய சக்தி உருவம் இம்மண்ணை விட்டு சற்றே உயரத்தில் இருக்குமாறும் அமைத்தார்கள்.
இந்த சக்தி உருவம் தரையில் இல்லாமல், மேலே நிறுவப்பட்டிருப்பதால், காசி தரையில் இல்லை, சற்று மேலே உள்ளது என்றார்கள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளும், கோணங்களும் உருவாக்கி, அவை 72000 மாக பெருகுவதற்கு வழி செய்தனர்.
இதை எந்த அளவிற்கு விஞ்ஞானம் என்று ஒப்புக்கொள்வீர்கள் என சொல்ல முடியாது. இருப்பினும், அமெரிக்காவில் இருந்து வந்த சிலரும், சில ருஷிய விஞ்ஞானிகளும் ‘கிர்லியன் ஃபோடோகிரஃபி’ என்ற தொழில்நுட்பம் வாயிலாக காசியைப் படம் பிடித்தார்கள்.
அந்தப் படங்களில், விண்வெளியில் இருந்து காசிக்கு பல அணுத்துகள்கள் வருவதாகத் தெரிகிறது. இதை வெளிச்சத்தின் தூறல்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இதுவே நம் அனுபவத்தில், நாம் உணர்ந்து அறிந்த உண்மை. காசி என்பது 168 மைல் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைத்தற்கே அரிய சக்தி யந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சக்திநிலை. இதுபோல் ஒரு மாபெரும் யந்திரம் அதற்கு முன்பு செய்யப்பட்டதும் இல்லை, அதற்குப் பின் யாரும் முயற்சி செய்யவும் இல்லை.
சிவன் வடிவமைத்த காசியின் வடிவியல்
168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்கள்
காசி நகரின் வெளி வட்டம், ‘சௌராசிக்ரோஷி யாத்ரா’ 168 மைல் சுற்றளவு, 144 சக்திமையங்கள் இந்த வெளிவட்டத்துள் இன்னும் 4 சிறிய வட்டங்களாக, ‘பஞ்சக்ரோஷி யாத்ரா’ 55 மைல் சுற்றளவு, 108 சக்தி மையங்கள் ‘நகரப் பிரதிக்ஷனா’, 16 மைல் சுற்றளவு, 72 சக்தி மையங்கள் ‘அவிமுக்த’, நகரைச் சுற்றி 4 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் ‘அந்த்த க்ருஹ’ காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றி 7 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் என ஐந்து வட்டங்களில் 468 சக்தி மையங்கள் அமைக்கப்பட்டது.
இந்த ஒவ்வொரு வட்டத்திலும், வெவ்வேறு அளவிலான சக்தி தீவிரம் இருக்கும். உள்ளே செல்லச் செல்ல, சக்தியின் தீவிரம் அதிகரிக்கும். இது உடலின் பஞ்சகோஷ அமைப்பை குறிப்பதாகவும் இருக்கிறது.
காசி விஸ்வநாதர் கோவிலும் இதே அமைப்பில் ஆனால் சிறிய அளவில் அமைக்கப்பட்டது. அது மிக மிக நுணுக்கமாக, பலவற்றைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் இது தகர்க்கப்பட்டு, இன்று அவ்விடத்தில் மசூதி அமைந்து, இன்றைய கோவில் ஒரு ஓரமாக சின்ன இடத்தில் நிற்கிறது. நம் உடலில் மொத்தம் 72000 நாடிகள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளும், கோணங்களும் உருவாக்கி, அவை 72000 மாக பெருகுவதற்கு வழி செய்தனர். கோவிலும் சரி, நகரமும் சரி இதை ஒத்தே இருந்தன.
ஏன் 5: பஞ்சபூதங்கள் 5 என்பதாலும், சிவன் பூதேஷ்வரா என்பதாலும், இந்நகரை 5 இன் அடிப்படையில் அமைத்தார்கள்.
ஏன் 468: நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்சபூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468 சக்தி ஸ்தலங்கள். பஞ்ச பூதங்களில் ஆகாஷைத் தவிர்த்ததற்குக் காரணம், நம் உடலின் அமைப்பில், நீர் 72%, நிலம் 12%, காற்று 6%, நெருப்பு (உடல் சூடு) 4%, ஆகாஷ 6%. இதில் மற்ற நான்கையும் நாம் சரியான வழியில் பார்த்துக் கொண்டால் போதும். ஆகாஷ பற்றி நாம் ஏதும் செய்வதிற்கில்லை.
ஏன் 108: நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் அமைக்கப்பட்டன.
இதுபோல் ஒரு மாபெரும் யந்திரம் அதற்கு முன்பு செய்யப்பட்டதும் இல்லை, அதற்குப் பின் யாரும் முயற்சி செய்யவும் இல்லை. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் காசியை உருவாக்கினார்கள்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்? 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப் பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம்!
ஏன் காசி: இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.
இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியைப் போற்றி வந்தனர். இதை மதம் சம்பந்தப்பட்ட இடமாக நினைப்பது மிகக் குறுகிய கண்ணோட்டம்.
இது மதம் சம்பந்தமட்ட இடமல்ல. ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கும் ஏக்கத்தை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி, அதை நிறைவேற்றுவதற்காக, முறையான தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட சக்தி யந்திரம், இந்த காசி. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம்!
இன்றளவும் ஆன்மீக வாய்ப்பை அள்ளி வழங்கும் இடமாக அறியப்பட்டாலும், இசை, கலை, கல்வி, கைவினைப்பொருட்கள், பட்டு நெசவு என பல்வேறு துறைகளிலும் காசி புகழ் பெற்றிருக்கிறது.
ஆயுர்வேதம் கூட காசியில்தான் எழுதப்பட்டது.
யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார்.
துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான்.
இசையில் தலைசிறந்த பாடகர்களும், கணிதத்தில் புகழ்பெற்றவர்களும் வாழ்ந்த இடம் காசி. இந்தியாவின் தலைசிறந்த சித்தார் மேதை பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் உஸ்ஸாத் பிஸ்மிலாகான் போன்ற பெருமைக்குரிய கலைஞர்களை உலகுக்கு வழங்கியதும் காசியே. ஆர்யபட்டா போல் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடிய மேதைகள் எல்லாம் இப்பகுதியிலிருந்து வந்தவர்கள்தான்.
இவர்கள் எல்லாம், உயிரோட்டம் நிறைந்திருந்த காசியின் கலாச்சாரத்தில் உருவானவர்கள். காசி என்னும் கருவியால், இத்தனை புத்திசாலித்தனமும், திறனும் இங்கு தோன்றியது. இதன் மூலம், சாதாரணமாக ஒரு மனிதன் அணுகமுடியாத பரிமாணங்களை எல்லாம் இவ்விடத்தில் வாழ்பவர்களால் அணுக முடிந்தது.
இவை அத்தனையும் பிரபஞ்சத்தை தர்க்கரீதியாக பார்த்து, உருவாக்கப்பட்டவை அல்ல. இப்பிரபஞ்சத்தை, அது எப்படி இருக்கிறதோ அதை அவ்வாறே பார்த்தனர். இப்படி படைப்பின் தன்மையை, அது இருக்கும் நிலையிலேயே பார்ப்பவர்களின் புத்திசாலித்தனம், நம்பமுடியா அளவிற்கு பண்பட்டு முதிர்ச்சி அடைகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “இந்தியக் கணிதவியலின் துணை இன்றி, இன்றைய விஞ்ஞானம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”. இப்படிப்பட்ட கணிதம் தோன்றியது உயிரோட்டம் நிறைந்த காசியிலே, காசி எனும் மகத்தான யந்திரத்தின் துணையிலே!
சிவனின் ஏக்கம்: காசி நகரம் உருவானபின், அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதால், ஒரு அரசனின் கையில் அந்நகரை ஒப்படைக்க முடிவு செய்தார்கள். ஆனால் அதற்கான நிபந்தனை, தேவர்களும், முக்கியமாக சிவனும் காசிக்கு வரக்கூடாது என்பது தானாம். சிவன் காசிக்கு வந்துவிட்டால், பிறகு எல்லோரும் அவரையே பின்பற்றுவர். அரசனிற்கு அப்புறம் என்ன மரியாதை இருக்கப் போகிறது?
இதற்கு ஒப்புதல் கொடுத்ததும், ஆட்சி கைமாறியது. சிவனும் கைலாயத்தில் இருந்தார். ஆனால் பார்வதியை மணந்தபின், பார்வதியால் கடுங்குளிர் தாங்க முடியாது என்பதால், மலையை விட்டு கீழிறங்க வேண்டிய கட்டாயம் சிவனிற்கு ஏற்பட்டது. தங்குவதற்கு சரியான இடம் தேடியவர், காசியைப் பார்த்ததும், அவருக்கு வேறு எங்கு தங்குவதற்கும் மனம் ஒப்பவில்லையாம்.
ஆனால் அவர் காசிக்குள் வருவதற்குத் தடை இருக்கிறதே! அதனால் காசிக்குள் வருவதற்கு அவர் பல தந்திரங்களையும் கையாண்டு, ஒன்றும் பலிக்காமல், கடைசியாக காசி மன்னன் திவோதாசனுக்கு முக்தி ஆசை காட்டி, அவருக்கு முக்தி வழங்கி அதன் பின்னே தான் அவர் காசிக்குள் வரமுடிந்ததாம். உள்ளே வந்தவர், இனி காசியை விட்டுப் பிரியேன் என்று சொன்னாராம். அதனால் அங்கு ‘அவிமுக்தேஷ்வரா’ எனும் கோவிலும் உண்டு. இக்கதைகள் அனைத்தும் காசியில் வாழ ஒவ்வொருவரும் எவ்வளவு ஏங்குவர் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்டது











