திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம்.
செவ்வாய் தோஷம் நீக்கும் திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம்
சோழ நாட்டு நவக்கிரக தலங்களில் செவ்வாய் பரிகாரத் தலமாக புகழ் பெற்று விளங்குவது “புள்ளிருக்கு வேளூர்’ எனும் வைத்தீஸ்வரன் கோயிலாகும்.
இது பரிகாரத் தலமாக விளங்க, அதற்கு இணையாக காவிரியின் தென்கரையின் தேவாரத் தலமாகவே திருச்சிறுகுடி திருத்தலம் விளங்குகிறது.
“சிறு பிடி’ என்பது மருவி “சிறுகுடி’ என்றானது. திருக்கயிலாயத்தில் உள்ள இறைவன் சூட்சமமாக மறைந்து, இங்கு மீண்டும் காட்சியருளியதால் “சூட்சமபுரி’ என்று அழைக்கப்படுகிறது.
இறைவனுக்கு “சூட்சுமபுரீஸ்வரர்’ , “சிறுகுடியீசுவரர்’ உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் மங்களநாயகி, மங்களாம்பிகை என்பதாகும்.
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும், பலிபீடம், நந்தி அமைந்துள்ளன.
வலச் சுற்றுப் பிரகாரத்தில் மங்கள விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், பைரவர், அங்காரகன் ஆகிய சந்நிதிகள் அமைந்துள்ளன. முன் மண்டபத்தில் உள்ள சனீஸ்வரருக்கு கீழே “சனிச்சரன்” என்று எழுதப்பட்டுள்ளது.
உற்சவ மூர்த்தியான சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பு வாய்ந்தவர். தலமரம் வில்வம்.
கருங்கல் மண்டபத்தின் கோட்டத்தில் சாளரத்தில் அருகே, பதினாறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட சதுரக் கருங்கல் கல்வெட்டில், தமிழ் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை வலமிருந்து இடம், மேலிருந்து கீழ் என எப்படி கூட்டினாலும் கூட்டுத்தொகையாக 40 வருகிறது.
நவக் கிரக சந்நிதி அருகே பெரிய வடிவில் திருஞானசம்பந்தர் தனது கழுத்தில் மாலையணிந்து, இடுப்பில் அரைஞாண் கயிற்றுடன் அழகான திருமேனியராகக் காட்சி தருகின்றார்.
முன் மண்டபம் வழியே இறைவன் சந்நிதி அமைந்திருக்கிறது. சுயம்பு மண் திருமேனி எனும் பிரித்வி லிங்கத்திருமேனி. நெற்றியில் பள்ளம் காணப்படுகிறது.
பார்வதியின் கைப்பிடி அளவு மண்ணால் உண்டாக்கி வழிபட்டதால் அன்னையின் திருக்கரங்களின் வடுக்கள் காணப்படுகின்றன.
சிறுபிடி பெயருக்கு ஏற்றபடி மிகச் சிறிய லிங்க வடிவம் அமைந்துள்ளது. இதற்கு அபிஷேகம் கிடையாது. கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. திருமேனிக்கு சாம்பிராணித் தைலம் மட்டுமே சாத்தப்படுகின்றது.
தெற்கு நோக்கி அம்மன் சந்நிதியில், நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையோடு காட்சி தருகிறார். அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.











