மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் – அபூர்வ சேதிகள்
32 சிவத் தலங்களில் 24-வது தலம் திருமயிலை. இது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கே, சுமார் 8 கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னையின் அனைத்து இடங்களில் இருந்தும் திருமயிலைக்கு பேருந்து வசதிகள் உண்டு.
மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.
உமையவள், மயிலாக வந்து, இங்கு ஈசனை வழிபட்டதால்- மயிலை, சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகா விஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால்- வேதபுரி, சுக்ராச்சார்யார் இங்குள்ள
ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால்- சுக்ரபுரி, மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனை போற்றி வழிபட்டதால்- கபாலீச்சரம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது திருமயிலை.
மூவேந்தர் காலத்தில், புலியூர் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்ததாக விளங்கிய மயிலை, வடமொழியில் ‘கேகயபுரி’ எனப்பட்டது.
‘மயிலாப்பி’ என்றும் இந்தத் தலம் அழைக்கப்பட்டதை அப்பர் பெருமானின், ‘மயிலாப்பிலுள்ளார்…’ என்ற திருத்தாண்டகத்தின் வரிகளில் இருந்து அறியலாம்.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வார்- ‘மாமயிலை’ என்றும், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார்- ‘மயிலை’ மற்றும் ‘மாமயிலை’ ஆகிய பெயர்களாலும், சுந்தரர் ‘தொன்மயிலை’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
கி.பி 7-ஆம் நூற்றாண்டில் இந்தத் தலம், ‘மயிலாப்பில்’ ‘மயிலாப்பு’ ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டது. கி.பி.9-ஆம் நூற்றாண்டில் திருமயிலை, ‘மயிலாபுரி’ என்று வழங்கப்பட்டதை, நந்திக் கலம்பகம் உணர்த்துகிறது. சமணர்கள், இந்தத் தலத்தை பத்மநாதபுரம், வாமநாதபுரம் ஆகிய பெயர்களால் அழைத்தனர்.
முதலாம் குலோத்துங்கன் காலத்தில், ஜயங் கொண்டாரால் பாடப் பெற்ற கலிங்கத்துப்பரணி (11-ஆம் நூற்றாண்டு) ‘பண்டை மயிலை’ என்று குறிப் பிடுகிறது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த வெனிஸ் வணிகர் மார்கோபோலோ, ‘மயில்கள் நிறைந்த பகுதி’ என திருமயிலையைக் குறிப்பிடுகிறார்.
14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜான் டி. மரிக்நோலி என்ற மேலை நாட்டு யாத்திரிகர், ‘மைரா போலிஸ்’ ( Myropolis ) என்றும்
16-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த டூரேட் பார்போஸா என்பவர் ‘மைலா பூரா’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
மேல்நாட்டு புவியியல் அறிஞர் தாலமி (காலம்: கி.பி.119-161), தனது புவியியல் நூலில், ‘மலியார்பா’ என்று குறிப்பிடுவது, திருமயிலையையே என்பர் வரலாற்று அறிஞர்கள்.
போர்ச்சுக்கீசியர்கள் மயிலையை, ‘மெலிய பூர்’ ( Meliyapur ) என அழைத்தனர். இவர்களது வருகைக்குப் பிறகு, மயிலையின் கடற்கரை பகுதி புனித தாமஸ் என்பவரது நினைவாக ‘சாந்தோம்’ எனப்படுகிறது.
17-ஆம் நூற்றாண்டில் மிலாப்பூர் ( Milapur ) என வழங்கப்பட்டது மயிலை. ஆங்கிலேயர்கள் மயிலாப்பூர் என்று அழைத்தனர். சென்னை வாழ் மக்களும் அதையேப் பின்பற்றுகின்றனர்.
பல்லவ மன்னன் நந்திவர்மனை, ‘மயிலைக் காவலன்’ என்கிறது ‘நந்திக் கலம்பகம்’.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் மற்றும் சேக்கிழார் ஆகியோரால் பாடப் பெற்ற அற்புதத் தலம் மயிலை.
திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம்,
சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி, ஆகியன கபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள்.
கற்பகவல்லியம்மை பதிகம், திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம், கற்பகவல்லி மாலை, கற்பகவல்லியார் பஞ்சரத்தினம், ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள், கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம், திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலை, திருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகியன ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள்.
திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ், திருமயிலைக் கோவை, சிங்கார வேலர் மாலை, திருமயிலைக் குகன் பதிகங்கள், மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலை, அருட்புகழ், மயிலைச் சிங்காரவேலர், இரட்டை மணிமாலை, திரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம் ஆகியன மயிலை
ஸ்ரீசிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள்.
தவிர, திருமயிலைப் பிள்ளைத் தமிழ், திரு மயிலைக் கோவை, திருமயிலை உவமை வெண்பா, திருமயிலை வெண்பா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள், திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள், தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள், கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள் ஆகியனவும் மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் ஆகும்.
‘வைத்தீஸ்வரன் கோவில்- விளக்கழகு; மாயூரம்- கோபுர அழகு; திருவாரூர்- தேர் அழகு…’ என்பர். அந்த வரிசையில், திருமயிலையின் அழகு அதன் மாட வீதிகள்! ‘மங்குல்மதி தவழும் மாட வீதி மயிலாப்பூரில்…’ என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.
திருமயிலை உலா எனும் நூல், ‘நீரும் மணி மாட வீதிகள்’, என்றும் ‘வானளக்கும் பொன் மாட வீதி’ என்றும் மயிலையின் மாட வீதி களைச் சிறப்பிக்கிறது.
ஏழு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச் சிறப்பு. ஏழு சிவன் கோயில்கள் (கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்த பாலீஸ்வரர்).
ஏழு பெருமாள் கோயில்கள், ஏழு குளங்கள் (கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடவுள் தீர்த்தம் (கடல்), ராம தீர்த்தம்) என்று இந்தப் பட்டியல் நீளுகிறது.
இங்குள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் முறையாக தரிசித்தால் எல்லாப் பேறுகளும் கிடைக்குமாம். அதனால் ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று பெயர் பெற்றது.
பேயாழ்வார், திருவள்ளுவர் மற்றும் வாயிலார் நாயனார் ஆகியோர் அவதரித்த தலம் இது. மயிலை யில் வள்ளுவருக்கு தனிக்கோயில் ஒன்று உண்டு.
உமையவள் உட்பட பல்வேறு தெய்வங்கள், தேவர்களால் வழிபடப்பட்டது திருமயிலை. சோமுகாசுரனால் கைப்பற்றப்பட்டு,
திருமாலின் மச்ச அவதாரத்தால் மீட்கப்பட்ட வேதங்கள், தமது பெருமையையும் புனிதத்தையும் மீண்டும் பெற்றது திருமயிலையில்தான்.
சிக்கல் திருத்தலத்தில் சக்தி வேல் பெற்ற முருகப் பெருமான், மயிலைக்கும் வந்து வழிபட்டு சிங்கார வேல் ஒன்றைப் பெற்றாராம். எனவே,
இங்குள்ள முருகனுக்கு சிங்கார வேலன் என்று பெயர். இவ்வாறு தன்னை வணங்கிய முருகப் பெருமானிடம், ‘அண்ணன் விநாயகனையும் வணங்கு!’ என்று பணித்தார் ஈசன்.
அதன்படியே இங்குள்ள கணபதியையும் வணங்கி வழி பட்டார் கந்தவேள். இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்தாடினார். இவரே இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.
அரக்கர் பலரைக் கொன்ற தால், ஸ்ரீராமனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இந்த தோஷம் நீங்க ஸ்ரீராமன், மயிலைக்கு வந்து கபாலீஸ்வரரை வழிபட்டு திருவிழா எடுத்தார்.
இன்னும் பல தேவர்களும் இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இந்தத் தகவல்களை ஸ்ரீஅமிர்தலிங்கத் தம்பிரானின், ‘திருமயிலைத் தல புராணம்’ கூறுகிறது.
காஞ்சி மகா பெரியவர் 28.9.32 அன்று சென்னையில் முதன்முதலாக பட்டினப் பிரவேசம் செய்தார். அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக் கப்பட்டது. சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருத பாடசாலையில் முகாமிட்டிருந்த காஞ்சி மகான், மயிலை கபாலீஸ்வரரின் பெருமை குறித்து விரிவான உபன்யாசம் செய்தார்.










