ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை ஏன் பார்க்கக்கூடாது?
ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி திதியானது வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி என்று இரண்டு நாட்களில் வரும். அன்றைய தினத்தில் விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.
ஆனால் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது வழக்கத்தில் உள்ளது. அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
ஒரு நாள் நாரதர் ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொண்டு சிவபெருமானை சந்திக்க சென்றார். சிவபெருமானை சந்தித்த நாரதர், தான் கொண்டு சென்ற மாம்பழத்தை சிவபெருமானிடம் கொடுத்தார்.
நாரதர் கொடுத்த மாம்பழத்தை வாங்கிய சிவபெருமான், அந்த மாம்பழத்தை தம் மகன்கள் இருவரில் யாருக்கு கொடுப்பது? என பிரம்ம தேவனிடம் யோசனை கேட்டார்.
பிரம்மன், இந்த மாம்பழத்தை முருகனுக்கு அளிக்கலாம் என்று சொன்னார். பிரம்ம தேவன் கூறியதைக் கேட்ட விநாயகருக்கு மிகவும் கோபம் வந்தது.
பிரம்ம தேவன் அந்த மாம்பழத்தை விநாயகருக்கு கொடுக்க சொல்லாமல், முருகனுக்கு கொடுக்கலாம் என்று கூறியதை, சிவபெருமான் தலையின் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சந்திரன், விநாயகரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். சந்திரன் தன்னைப் பார்த்து சிரிப்பதை கண்ட விநாயகருக்கு மேலும் கோபம் அதிகமாக வந்தது.
உடனே விநாயகர் கோபமாக, பெரியோர் முன்னிலையில் என்னை சிரித்து கேலி செய்த உனது ஒளி உலகில் பரவக்கூடாது என சபித்தார். பிறகு சந்திரன், தான் செய்த தவறை மன்னித்து அருள வேண்டும் என்று விநாயகரை வேண்டி நின்றான்.
சந்திரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால், சாபம் நீங்க ஒரு பரிகாரத்தையும் கூறினார்.
அதாவது ஆவணி சதுர்த்தியன்று வானில் தெரியும் சந்திரனைப் பார்க்காமல், தன்னை மனமுருகி வழிபடுபவர்கள் என்னுடைய அருளைப் பரிபூரணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி அருளினார்.
அன்று முதல் ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற பழக்கம் உருவானது.
அதுவே யாரேனும் தெரியாமல் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்துவிட்டால்,
அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு பிடித்த அருகம்புல்லை அவருக்கு தந்து வணங்கினால், சந்திரனைப் பார்த்ததால் ஏற்பட்ட தோஷம் விலகும்.











