ஆடி மாதம் – தவிர்ப்பதன் விளக்கம்
ஆடி மாதம் புதுமண தம்பதியர்கள் தாம்பத்தியம் கொண்டுவிட்டால், அதிலிருந்து 10 ஆம்
மாதமாகிய சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை கோடையின் வெய்யில் உச்ச கட்டத்தில்
இருக்கும். இதனால் கோடை சம்பந்தப்பட்ட, அம்மை, சிரங்கு, கட்டி ஆகியன தோன்றுகின்றன.
பெரியோர்களாலேயே இதை தாங்கமுடிவதில்லை. சின்னஞ்சிறு சிசு எப்படி தாங்கிக்கொள்ளும்?
தெரிந்தே நாம் இந்த துன்பத்தை சிசுவுக்கு தரலாகாது. எனவே புதுமண தம்பதியர்
தாம்பத்தியத்தில் இணைந்துவிடாமலிருக்க அவர்களை பிரித்துவிடுகிறார்கள். இது ஒரு
காரணமாக சொல்லப்படுகிறது. இந்த காரணத்தின் பின்னணியில் நமக்கு பல சந்தேகங்கள்
முளைக்கின்றன.
1. இக்காலத்தில் வைகாசியிலும் கோடை தகிக்கிறது. புதுமண தம்பதியர் ஆவணியில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால், அதன் 10 ஆம் மாதமான வைகாசியில் குழந்தை பிறந்தால், அது வைகாசி கோடையை அனுபவித்து துன்பப்படாதா? ……….
2. நமது முன்னோர்கள் ஆடியில் புதுமண தம்பதியர்கள் மட்டும் பிரிய வேண்டும் என்று சொல்லிவைத்திருக்கிறார்களா? இதற்கு ஆதாரம் ஏதேனும் உள்ளதா? ………………
3. சற்று மூத்த தம்பதியர்கள் கூட ஆடி மாதத்தில் தாம்பத்தியத்தில் இணைய வாய்ப்பு உள்ளது. இதனால் பிறக்கும் குழந்தை சித்திரை கோடையில் அவதிப்படாதா? ………….
4. கோடையில் பிறக்கும் குழந்தை, அதன் தாக்கத்தால், அது சம்பந்தப்பட்ட நோயால் வாடும் என்பது மட்டும் காரணாமா? வேறு ஏதேனும் உள்ளதா? …………………
5. ஒரு சில இனத்தவர், ஆடியில் திருமணமே செய்து, முதலிரவை விமரிசையாக கொண்டாடுகிறார்க
ளே. அவர்கள் ஏன் இந்த ஆடி மாதத்திற்கு அஞ்சவில்லை? …………
6. இவற்றுக்கெல்லாம் ஜோதிடசாஸ்த்திரம் பதில் சொல்கிறதா? ……………….. என்று பார்ப்போம்.
ஸ்ரீ வராஹிமிஹிரர் தொகுத்த ப்ருஹத்ஜாதகத்தில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது. நம் மீது கிரகங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை அறிய ஜாதகம் கணித்து அறிந்துகொள்கிறோம்.
அது போல் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும். கருவின் மீதும் கிரகங்கள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. கரு வளரும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகம் தனது ஆதிக்கத்தை கரு மீது செலுத்துகிறது. கருவின் 4 ஆம் மாதத்தில் சூரியன் ஆதிக்கம் செலுத்துகிறது.
இதனால் கருவில் எலும்புகள் உருவாகி, நல்ல வளர்ச்சி அடைகிறன. சூரியனின் காரகத்துவங்களில் ஒன்று எலும்பு. ஜோதிட சாஸ்த்திரம் சொல்லும் இந்த உண்மையை விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டுள்ளது.
எனவே கருவின் 4 ஆம் மாதத்தில் சூரியன் நீசம், பகை போன்ற ஸ்தானங்களை அடையக்கூடாது. நீசம் அடைந்தாலும் நீசபங்கம் பெறவேண்டும். இப்படி சூரியன் கெட்டால், கருவின் எலும்புகள் வளர்ச்சி குன்றி, குள்ளம், கூன், கை, கால்களில் எலும்பில் தேவையற்ற வளைவுகள் தலை பெரிதாகி உடல் சிறுத்துப்போவது, போன்ற குறைபாடுகள் உண்டாகின்றன.
ஆடி மாதம் தம்பத்தியம் கொள்வதால், ஐப்பசி 4 ஆவது மாதமாக அமையும், அப்போது சூரியன் நீசமடைகிறது.
எனவே தாம்பத்தியத்திற்கு நம் முன்னோர்கள் ஆடியை தவிர்த்தனர். தாம்பத்தியத்தை தானாகவே தவிர்த்துக்கொள்ளும் அளவுக்கு பக்குவமடையாத, புதுமணத்தம்பதியரை வலுக்கட்டாயமாக பிரித்தனர். தையில் திருமணம் செய்து, தாம்பத்தியம் கொள்வதால், அதன் 4 ஆவது மாதமாக சித்திரை அமையும்.
சித்திரையில் சூரியன் உச்சம். எனவே கருவின் எலும்புகளின் வளர்ச்சியில் எந்த குறைபாடும் இருக்காது. அதுபோல் வைகாசியில் திருமணம் செய்துகொண்டு, தாம்பத்தியம் கொள்வதால், அதன் 4 ஆவது மாதமாக ஆவணி அமையும். ஆவணியில் சூரியன் ஆட்சி. எனவே கருவின் எலும்பு வளர்ச்சி நன்றாக அமையும்.
எனவே திருமண முஹூர்த்தம் வைப்பதில் இவ்விரு மாதங்களுக்கு முதலிடம் கொடுத்தனர் நம் முன்னோர்கள். ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களுக்குரிய 4 ஆம் மாதம் சூரியன் பகையாவதால் இந்த மாதங்களில் திருமணம் செய்யக்கூடாது என்றனர் ஆடி மாதத்தில் திருமணம் செய்யும் சில குறிப்பிட்ட இனத்தவர்கள் கூட, ஐப்பசியில் சூரியன் மாதம் முழுதும் நீசபங்கம் அடைகிறாரா? என்று ஆராயந்த பின்னரே திருமணம் செய்கிறனர்.
ஐப்பசிமாதம் முழுதும் சூரியன் நீசபங்கம் அடைய வேண்டுமென்றால், அம்மாதம் முழுதும், சூரியனுடன் சுக்கிரன் இருக்க வேண்டும். அல்லது அம்மாதம் முழுதும் சுக்கிரன் சிம்மத்திலிருக்க வேண்டும். ……
…. ம்ஹும்………………. இப்போது எல்லாம் மாறிவிட்டது. சில சாஸ்த்திர சம்பிரதாய மீறல்களால், எலும்பு குறைபாடுடன், உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறந்துவிடுகிறன. இதற்கு முழு பொறுப்பு பெரியோர்களே. இக்குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்காக நம் முன்னோர்கள் சில பரிகார வழிபாடுகளுக்கும் வழி காட்டியிருக்கிறார்கள்.











