அக்டோபர் 6 மஹாளய அமாவாசை – அன்னதானம் செய்வோம்
இந்த மஹாளய பட்சம் செப்டம்பர் 22-09-2021ஆம் நாள் அன்று தொடங்கி அக்டோபர் 6
ஆம் தேதி மஹாளய அமாவாசை அன்று, அதாவது 6-10-2021 வரை, மொத்தமாக 15
நாட்கள். இதை தான் மஹாளய பட்ச நாட்கள் என்று சொல்லுவார்கள். பொதுவாக இது
புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளில் வரும் பிரதமை திதியில் தான் தொடங்கும்.
மஹாளய பட்சம் என்று சொல்லக்கூடிய இந்த 15 நாட்களுக்குள் அப்படி என்னதான்
சிறப்புகள் அடங்கியுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
நமக்கு ஏதாவது தீராத பிரச்சனைகள் இருந்து வந்தால், வாழ்க்கையில் தொடர்ந்து
துன்பங்களை அனுபவித்து வந்தால், அதற்கான தீர்வு காண நம் ஜாதகத்தை கொண்டு
போய் ஜோதிடரிடம் காட்டி என்ன பிரச்சினை என்று கேட்கும்போது
முதலில் அவர் நம்மிடம் கேட்கும் கேள்வி பித்ருக்களுக்கு செய்கின்ற திதிகளையும்,
தர்பணத்தையும் சரியாக முறையாக தவறாமல் செய்து வருகிறீர்களா என்று தான் கேட்பார்கள்.
ஏனென்றால் நம்முடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் சரியாக
செய்யவில்லை என்றால், அதன்மூலமாக *பித்ரு தோஷம்* ஏற்பட்டு, *பித்ரு சாபம் ஏற்பட்டு,*
உண்டாகக் கூடிய பிரச்சனைகள் ஏராளம்.
அந்த சாபம் நம்மோடு நின்று விடாது. நம் பரம்பரைக்கே வழிவழியாக தொடர்ந்து வரும். இப்படியாக உங்களுக்கு ஏதேனும் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பாக்கி இருந்தால் இந்த மஹாளய பட்சத்தில் அதை சரி செய்து விட முடியும்.
மேலோகத்தில், அதாவது நம்முடைய பாஷையில் சொல்லப்போனால், எமலோகத்தில் நம்முடைய பித்ருக்கள் எல்லாம் வசிக்கும் இடம் என்று ஒன்று இருக்கும் அல்லவா? அவர்கள் எமலோக தர்மப்படி எமலோகத்தின் விதிமுறைக்கு கட்டுப்பட்டு எமலோகத்தில் வசித்து வருவார்கள்.
மேலோகத்தில் இருந்து நம்முடைய பித்ருக்களின் ஆத்மா அமாவாசை தினத்தன்று நம்மை தேடி, பூலோகத்திற்கு வரும் என்பது ஐதீகம் இதனால் தான் அமாவாசை திதி அன்று தர்ப்பணம் செய்கின்றோம்.
இந்த மஹாளய பட்சத்தில் செய்யும் பித்ரு பூஜை மற்றும் அன்னதானமானது யாகம் செய்த பலனை தரும். இந்த மஹாளய பட்சத்தில் நம்முடைய முன்னோர்கள் 15 நாட்களும் நம்முடன் இருந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள்.
மாதந்தோறும் வரும் அமாவாசை தினம் அல்லாமல், நம்முடைய பித்ருக்களின் ஆத்மா, சுதந்திரமாக இந்த பூலோகத்திற்கு வலம் வரும் நாள்தான், இந்த 15 நாட்கள் மஹாளய பட்சம். முடிந்தவர்கள் இந்த 15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.
அப்படி 15 நாட்களும் தர்ப்பணம் கொடுக்க முடியாது என்று நினைப்பவர்கள் இந்த 15 நாட்களில் ஏதாவது ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து உங்களுடைய முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுப்பது,
அல்லது மஹாளய அமாவாசை அன்று தர்பணம் மற்றும் அன்னதானம் கொடுப்பது மிக மிக சிறப்பு வாய்ந்தது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நம்முடைய அம்மாவிற்கும், அப்பாவிற்கும் தர்பணம் கொடுக்கும்போது நம்முடைய தலைமுறையில் இருந்து மூன்று தலைமுறையினரை மட்டும் தான் அழைத்து எள்ளும் தண்ணீரும் இறைப்பார்கள்.
ஆனால் இந்த மஹாளய பட்சத்தில் நாம் கொடுக்கக்கூடிய தற்பணமானது மூன்று தலைமுறையையும் தாண்டி மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கும் போய் சேரும் என்று சொல்கிறது சாஸ்திரம்.
எடுத்துக்காட்டாக, உங்களுடைய பங்காளிகளில் யாருக்காவது ஆண் வாரிசு இல்லாமல் இருக்கலாம். அதன் மூலம் அவருக்கு வருடாவருடம் திதி கொடுக்க முடியாமல் நின்று போயிருக்கும்.
அப்படி வாழ்ந்து இறந்து போன உங்கள் அண்ணா, தம்பி, சகோதரிகள், அண்ணி,(மன்னி) , அத்தை, மாமா, மாமனார், மாமியார், பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் குருவிற்கும் மற்றும் உங்கள் வம்சத்தில் உள்ள அனைவருக்கும்,
இந்த மஹாளய பட்சத்தில், தர்பணம் மற்றும் அன்னதானம் செய்யும் போது. அவர்கள் பூலோகத்திற்கு உங்களைத் தேடி வருவார்களாம். அவர்களுக்கு செய்ய வேண்டிய முறையான தர்பணத்தை நீங்கள் செய்துதானே ஆகவேண்டும்.
இப்படியாக நீங்கள் செய்யும் தர்பணமும், அன்னதானமும் அந்த ஆத்மாவுடைய பசியை ஆற்றும். இது எவ்வளவு பெரிய விஷயம் என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
இப்படியாக இந்த மஹாளய பட்சத்தில் நீங்கள் செய்யும் தர்ப்பணம், மற்றும் அன்னதானம் உங்களுக்கு அடுத்து வரக்கூடிய 21 தலைமுறைக்கும் ஈடேறும்.
நீங்கள் செய்கின்ற இந்த ஒரு புண்ணிய காரியம், உங்களுடைய அடுத்தடுத்த தலைமுறையை சீரும் சிறப்பாக வாழ வைக்கும்.
அதாவது, நம் தலைமுறை செழிப்பாக வளர, முன்னோர்களின் மனநிறைவான ஆசீர்வாதம் ஒன்றே போதும் என்று சொல்கிறது சாஸ்திரம்.











