எல்லா நோய்களும் தீர்க்கும் நாங்குநேரி எண்ணெய்க் கிணறு
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே
கண்ணா என்றும் என்னையாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேனமாம் பொழில் தண்
சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை
வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே
– என்று பரவசத்துடன் நம்மாழ்வார் துதித்து மகிழ்வது வானமாமலைப் பெருமாளே. .
ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் தனிச் சிறப்பை விளங்க வைக்கும் வகையில் தனித்தனியான, வித்தியாசமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த வானமாமலைப் பெருமாள் கோயிலில் கிடைப்பது, எண்ணெய் பிரசாதம்!
இந்தக் கோயில் வளாகத்தில் ஓர் எண்ணெய்க் கிணறே இருக்கிறது.
இந்தக் கிணற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் ஊற்றாக வருவதல்ல; ஊற்றுவதால் நிரம்பி இருப்பது.
பெருமாளுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் இந்தக் கிணற்றில் ஊற்றி சேகரிக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது வெறும் பிரசாதமல்ல; மருந்தே என்கிறார்கள் பக்தர்கள்.
சர்வ ரோக நிவாரணியாகப் பயன்படுகிறது, இந்த எண்ணெய்.
பெருமாளுக்கு இவ்வாறு எண்ணெய்த் திருமஞ்சனம் செய்வது ஒரு முக்கியமான வேறெந்த திவ்ய தேசத்திலும் காணக் கிடைக்காத சம்பிரதாயம்.
ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் ஒரு கோட்டை அளவு (210 லிட்டர்) சுத்தமான நல்லெண்ணெய் தரவழைக்கப்பட்டு, பெரிய வெள்ளிக் கொப்பரைகளில் சேகரிக்கப்படுகின்றன.
இந்த எண்ணெயில் சில மூலிகைப் பொருட்கள் இடப்பட்டு பக்குவப்படுத்தப்படுகிறது
பிறகு மந்திர கோஷங்கள் முழங்க, எண்ணெய் பெருமாளை உச்சி முதல் பாதம்வரை தழுவி மகிழ்கிறது.
இது தவிர தினமுமே பெருமாளுக்கு மூன்று லிட்டர் எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட வேண்டும்,
இந்த எண்ணெய் மூலவர் சந்நதிக்கு வெளியே கோமுகி வழியாக தொட்டிக்கு வந்து சேருகிறது.
இந்தத் தொட்டியிலிருந்து முகந்தெடுத்து மண்டபத்துக்கு வெளியே உள்ள கிணற்றுக்குள் விடுகிறார்கள்.
இந்தக் கிணற்றிலிருந்து இறைத்து பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
”அந்தகால மரபுப்படி எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது வாரந்திர வழக்கமாக இருந்தது . பல்வேறு காரணங்களால் உண்டாகும் உடல், மன சூட்டைத் தணித்து, உடல் நலத்தை சீராக வைத்திருக்கும் அந்தப் பழக்கம்,
பல குடும்பங்களில் இப்போது முற்றிலும் காணாமலேயே போய்விட்டது. மக்கள் மறந்த ஒரு நற்பழக்கத்தை மாதவன் மறக்காமல் தான் மேற்கொண்டு, அந்த எண்ணெயையே பிரசாதமாக்கி பக்தர்களுக்கு வழங்குகிறார்’
வானமாமலை அல்லது நான்குநேரி என்றழைக்கப்படும் இத்தலம், அந்நாளில் தாயாரின் திருப்பெயராலேயே ஸ்ரீவரமங்கை என்று போற்றப்பட்டது.
நான்கு பெரிய ஏரிகளாகப் பிரித்து, பாசனத்துக்கும் பிற உபயோகத்துக்கும் இங்குள்ள குளத்து நீர் பயன்பட்டதால், நான்கு ஏரி என்று பெயர் படைத்து, நான்(ங்)குநேரி என்று இப்போது அறியப்படுகிறது.
மூலவர் சந்நதியில் கூட்டம் மிகுந்திருக்கிறது , கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக மூலவர் தோத்தாத்ரிநாதன், கருடாழ்வார், பிருகு முனிவர், விஷ்வக்சேனர், மார்க்கண்டேயன், சூரியன்- சந்திரன், உற்சவர் தெய்வநாயகன், மூலவருக்கு சாமரம் வீசும் ஊர்வசி, திலோத்தமை…
பிறவி இல்லாததும் அழிவற்றதானதுமான நிலை என்பது திருமாலடியோடு ஐக்கியமாவதுதானே! அந்த அரிய வரத்தை இந்தத் தல நாயகன் ஊர்வசி, திலோத்தமை இருவருக்கும் அருளினார்.
ஆகவே அவர்கள் இருவரும் இந்தத் தலத்தில் பெருமாளுக்கு சாமரம் வீசும் கைங்கரியத்தை மேற்கொண்டு மகிழ்ந்தார்கள். ..
தோத்தாத்ரிநாதர் அமர்ந்திருப்பதால் அவரது ஒரு பாதத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. பெருமாள் பிரயோக சக்கரம் ஏந்தியிருப்பது, கருடனுக்கு அவர் கொடுத்த வாக்கை நினைவூட்டுகிறது. கருவறை முன்னால் சிறு மாடத்தில் நரசிம்மர் காட்சியளிக்கிறார்.
சீரிவரமங்கை என்ற திருவரமங்கைத் தாயார் தனி சந்நதியில் அருள் பொங்க நோக்கி நம் மனக்குறைகளைக் களைகிறாள்.
இங்கே மாமரம் தலவிருட்சமாகத் தழைத்தோங்கி நிற்கிறது.
திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ள இந்தக் கோயிலுக்கு நிறைய பேருந்து வசதி உண்டு.











