அதிமனச் செயல் இங்கு நடைபெறுவதும் சாத்தியமாகும்
ஸ்ரீ அரவிந்தர் அருளிய அன்னை (அத்தியாயம் 6 தொடர்ச்சி பக்கம் 74-75)
இந்நான்கைத் தவிர தெய்வ அன்னையின் மகாசக்திகள் மற்றும் உள்ளன. ஆனால் அவற்றைக் கீழே கொணர்வது மேலும் கடினமாய் இருந்துள்ளது; புவி ஆன்மாவின் பரிணாமத்தில் அவை இவ்வளவு முதன்மை வகித்து முன்னணியில் இருக்கவில்லை.
அவற்றுள் அதிமன சித்திக்கு இன்றியமையாவையான சாந்நித்யங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது ஒன்று.
அது மகோன்னத தெய்வீக அன்பிலிருந்து பொங்கிப் பாய்ந்து வரும் அதிசயமான, சக்திவாய்ந்த பரவசம், ஆனந்தம் இவற்றின் மூர்த்தி. இவ்வானந்தம் ஒன்றே அதிமனத்தின் அதி உயரங்களுக்கும் சடத்தின் அதல பாதாளங்களுக்கும் இடையே உள்ள அகழிக்குப் பாலம் அமைக்க வல்லது. இவ்வானந்தத்திடம் அதி அற்புதமான பர தெய்வீக வாழ்க்கையின் திறவுகோல் உள்ளது.
இப்போதுங்கூடத் தனது இரகசிய நிலைகளிலிருந்து பிரபஞ்சத்தின் மற்ற மகாசக்திகளின் வேலையை இதுவே தாங்கிநிற்கிறது. ஆனால் கட்டுண்ட, அகங்காரமயமான, இருள் மண்டிய மனித இயல்பு இம்மாபெரும் சாந்நித்யங்களை ஏற்கவோ, அவற்றின் வலிமை வாய்ந்த செயலைத் தாங்கவோ தகுதியற்றதாயுள்ளது.
திருவுருமாற்றமடைந்த மனம் உயிர் உடல்களில் நான்கு மகா சக்திகளும் தங்கள் இசைவையும் சுதந்திர இயக்கத்தையும் நிலைநாட்டிய பிறகே அந்த மற்ற அரிய பெரிய சக்திகள் புவி இயக்கத்தில் வெளிப்பட்டு விளங்குவதும், அதிமனச் செயல் இங்கு நடைபெறுவதும் சாத்தியமாகும்.











