காஞ்சியில் அபீத் என்றொரு பையன் வசித்து வந்தான். பிறப்பால் அவன் ஒரு முஸ்லிம். இருந்தாலும், அவனுக்கு மகா பெரியவா மீது அளவு கடந்த அன்பு. மடத்தில் நடைபெறும் சந்திர மௌலீச்வர பூஜைக்காக அவன் ஆர்வத்துடன் கொன்றை மலர்கள் பறித்து வந்து கொடுப்பான். இதனால் மடத்தைச் சேர்ந்த அன்பர்கள் அவனை ‘கொன்னை அபீத்’ என்றே அழைப்பார்கள்.
மகா பெரியவா அவ்வப்போது அவனுக்குப் பழங்களும் கல்கண்டும் தந்து ஆசீர்வதிப்பார். பிறப்பால் முஸ்லிமான அவன் பிற தெய்வங்களின் பிரசாதத்தை ஏற்பது தவறு. எனவே, பெரியவா அவனுக்கு ஒருபோதும் பூஜைப் பிரசாதங்கள் கொடுக்க மாட்டார்.
இந்நிலையில் கொன்னை அபீத்தின் தந்தைக்கு இடமாறுதல் உத்தரவு வந்தது. அவர்கள் குடும்பம் காஞ்சியை விட்டு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை. இனிமேல் மடத்துப் பூஜைக்குப் பூக்கள் பறித்துத் தர முடியாது என்ற வருத்தம் அபீத்தை வாட்டியது.
ஊரை விட்டுக் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. வழக்கம்போல அன்றைய தினமும் மலர்களைப் பறித்துப் பூக்குடலையில் எடுத்துக்கொண்டு மடத்துக்கு வந்தான் அபீத். எப்படியாவது பெரியவாளை நேரில் பார்த்து, ஊரை விட்டுக் கிளம்பும் செய்தியை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது அவனது ஆசை.
ஆனால் பாவம், அவனால் அன்று மடத்துக்குள் நுழைய முடியவில்லை. காரணம், மடத்தில் ஒரு வித்வத் ஸதஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரியவாளைத் தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சின்னஞ்சிறுவனான அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
இப்படியே சில நிமிடங்கள் நகர்ந்தன.
ஸதஸில் அமர்ந்திருந்த பெரியவா திடீரென மடத்து ஊழியர் ஒருவரை அழைத்து, ”ஸதஸில் பங்குபெறும் அனைவரையும் வழிவிட்டு உட்காரச் சொல்லு. வாசலில் பூக்குடலையுடன் ஒரு பையன் நின்றுகொண்டிருக்கிறான். அவனை உள்ளே வரச்சொல்லு” என்று உத்தரவிட்டார்.
ஸதஸில் அமர்ந்திருந்தவர்கள் நகர்ந்து அமர, சபையின் நடுவே நடைபாதை உருவானது. வெளியே பூக்குடலையுடன் நின்று கொண்டிருந்த அபீத்திடம் வந்த ஊழியர் அவனைப் பெரியவா அழைப்பதாகத் தெரிவித்தார். மிகுந்த கூச்சத்துடன் மடத்தின் உள்ளே நுழைந்த அபீத், பூக்குடலையைப் பெரியவா பக்கத்தில் வைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றான்.
கருணையே வடிவெடுத்த பெரியவாளின் கண்கள் கொன்னை அபீத்தின்மீது பதிந்தன. மெதுவாகப் பூக்குடலைக்குள் கையை விட்ட பெரியவா கைநிறையப் பூக்களை அள்ளினார். அபீத்தைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே, ”எனக்கோசரம்தானே கொண்டு வந்தே (எனக்காகத்தானே கொண்டுவந்தாய்)!” என்று சொல்லியவாறே அந்தப் பூக்களைத் தனது தலைமீது அபிஷேகம் செய்துகொண்டார். ஸதஸில் இருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, பெரியவாளோ மீண்டும் மீண்டும் ‘எனக்கோசரம்தானே கொண்டு வந்தே’ என்று சொல்லிப் பூக்களை அள்ளி அள்ளி, தலையில் சொரிந்துகொண்டார்.
மிதமிஞ்சிய உணர்ச்சிப் பெருக்கி்ல் இருந்த அபீத்தின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. சபையெங்கும் ஹரஹர சங்கர ஜயஜய சங்கர கோஷம் ஒலித்தது.
மகா பெரியவா கொன்றை மலர்களைத் தனது தலை வழியே அபிஷேகம் செய்துகொண்ட இந்தச் சம்பவம் மிகவும் விதிவிலக்கான ஒன்று. இது பெரியவாளின் இயல்புக்கு விரோதமான சம்பவம் என்பதுதான் இதன் விசேஷம்.
காஞ்சியம்பதியில் பீடாதிபதியாக வீற்றிருந்த பெரியவா சாக்ஷாத் அந்தக் கைலாசபதியேதான் என்பதில் பக்தர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், மகா பெரியவா தன்னை எப்போதாவது அவதார புருஷர் என்று சொல்லிக்கொண்டதுண்டா? ”இல்லவே இல்லை” என்பதே உண்மை.
சாமானியன், பாமரன், பாமர பாமரமானவன், அல்பசக்தன் முதலியவைதான் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவதற்குப் பெரியவா அடிக்கடி பயன்படுத்திய வார்த்தைகள். ஞானமே வடிவெடுத்த அந்த பரப்பிரம்மம், தன்னை அஞ்ஞானத்தின் மொத்த வடிவம் என்றே அழைத்துக்கொண்டது. மானுட வேடம் தாங்கி வந்த சங்கரன் இவர் என்று அன்பர்கள் அவர் பாதத்தில் விழுந்து வணங்கினால், அவரோ, தனக்குப் பணிவும் இல்லை, பக்தியும் இல்லை என்றே எப்போதும் குறைப்பட்டுக் கொண்டார்.
முட்டாள்களில் எல்லாம் பெரிய முட்டாள் என்று அவர் தன்னை வர்ணித்துக் கொண்டதுண்டு. ஆச்சார்யாள் பெயரைச் சொல்லி காலட்சேபம் செய்து வயிறு வளர்த்து வருபவன் நான் என்று குறிப்பிட்டதும் உண்டு.
இதுவாவது பரவாயில்லை. அக்னியே திரண்டெழுந்து மானுட தேகம் தரித்ததோ எனும் அளவு தூய வாழ்க்கை வாழ்ந்த அந்தத் துறவியர் திலகம் தனக்குத் தூய்மை இல்லை, ஞானம் இல்லை என்றே குறைப்பட்டுக் கொண்டது. தனக்குத் தபஸ் இல்லை, அனுஷ்டானம் குறைவு என்றும் அவர் பலமுறை சொல்லியிருக்கிறார்.
வேத தர்மத்துக்கே அதாரிடியாகத் திகழ்ந்த அவர் தனது கருத்து என்று எதையும் முன்வைத்தது இல்லை. முன்னோர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் நடப்பதும், மற்றவர்களை அந்தப் பாதையில் நடக்க ஊக்குவிப்பதும்தான் தனது பணி என்றே அவர் சொல்லி வந்தார்.
பெரியவாளின் அவதார சக்தியைத் திரை போட்டு மறைக்க முடியாது. அவரது அன்பும் அருளும் அளப்பரிய அவதார சக்தியும் அன்பர்களின் நெஞ்சில் நிறைந்திருப்பவை. அதேநேரத்தில் பெரியவா தனது அவதார உண்மையைத் திரை போட்டு மறைத்தே வைத்திருந்தார் என்பது பரம சத்தியம். அவர் தன்னை பகவத் அம்சம் கொண்டவராக ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை.
ஆனாலும், எப்போதாவது விதிவிலக்கான ஒருசில சூழ்நிலைகளில் தன்னையறியாமல் அவர் தனது அவதார ரகசியத்தை வெளியிட்டதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் இந்தச் சம்பவம்.
கொன்றை மலர் சிவபெருமானுக்கு உகந்தது. தனது தலைமீது கொன்றை அணிந்தவன் என்பது சிவனைப் பற்றிய வர்ணனைகளில் அடிக்கடி இடம்பெறுவது. பரப்பிரம்மமான அவனது இருப்பை (சத்தியம்) விளக்குவதே கொன்றை மலர் என்பது ஆன்றோர் வாக்கு. கொன்றை மலரால் சிவனை வழிபடுவது பொன்மலரால் அர்ச்சனை செய்வதற்குச் சமம் என்பார்கள். அதனால்தான் கொன்றை மலரை சொர்ண புஷ்பம் என்றும் சொல்வதுண்டு. அபீத் கொண்டுவந்ததும் கொன்றை மலர்தான். சந்திரமெளலீச்வர பூஜைக்காக பறித்துவரப்பட்ட மலர்கள் அவை.
மடத்து ஆசாரங்களில், குறிப்பாக, பூஜை விஷயங்களில், மகா பெரியவா எள்ளளவும் விதிமீறிச் செயல்பட்டதே இல்லை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அன்றைய தினம் மகாபெரியவா, மடத்து பூஜைக்கான புஷ்பங்களை எடுத்துத் தனது தலை மீது அபிஷேகம் செய்துகொண்டார். அதுமட்டுமல்ல, சந்திர மௌலீச்வர பூஜைக்கான புஷ்பங்களைத் தனக்கானவை என்று சொன்னார் மகா பெரியவா. ”எனக்கோசரம்தானே கொண்டு வந்தே எனக்கோசரம்தானே கொண்டு வந்தே’’என்று அவர் திரும்பத் திரும்பக் கூறியது இன்னும் விசேஷம்.
இஷ்ட சித்தி அருள் சஷ்டி நாதன்
“போ” என்றார்; போயே போச்சு!
சொன்னவர்; எஸ்.பலராம ராவ்.காஞ்சிபுரம்.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் திருத்தணி
மலை மீது, பைரவ சுப்ரமணி ஐயர், பிரசாதக் கடை
நடத்திக் கொண்டிருந்தார்.அக்கடையில் வேலை செய்த
தொழிலாளர்களில் அடியேனும் ஒருவன். ஓய்வற்ற
வேலை செய்ததால் ஒரு சமயம் உடல் சுகமற்று படுத்து
விட்டேன். நேரம் ஆக,ஆக ஜுரம் அதிகமாகி விட்டது.
இரவு 10 மணிக்குள் வீட்டிற்கு சென்று விடலாம் என்று
முடிவு செய்து, மலையிலிருந்து கீழே வருவதற்குள்
தள்ளாடியவாறும்,அங்காங்கே அமர்ந்தும்,ஓய்வெடுத்து,
ஓய்வெடுத்து, மெதுவாக இறங்கி ஒருவழியாகக்
கடைசி படியில் வந்து நின்றேன்.
கீழே தெப்பக்குளத்துக் கரையில் ஒரு பல்லக்கு
இருந்தது.அப்போது என்னை நோக்கி வந்த ஒருவர்,
“நீங்கள் மலை மீது இருந்துதானே வருகிறீர்கள்?” என்றார்.
“ஆம்” என்றேன்.”அப்படியென்றால், வாருங்கள்” என்று
என்னை அழைத்தவர் பல்லக்கின் அருகே கூட்டிச்
சென்றார். சற்றே பல்லக்கின் உள்ளே உற்று நோக்கினேன்.
அங்கே ஸ்ரீ மகா பெரியவர் அவர்கள் சாந்த ரூபமாய்
என் இருண்ட கண்களுக்கு காட்சி தந்தருளினார்.
மெய் மறந்து கை கூப்பி வணங்கி நின்றேன்.
“நீ மலையிலிருந்துதானே வருகிறாய்? கோயில்
திறந்திருக்கா?” என்று கேட்டார் ஸ்ரீ பெரியவர்.
மிக பவ்யமாய் “கோயில் சாத்தியிருக்கு சுவாமி!” என்றேன்.
“அங்கே ஒரு பிரசாதக் கடை இருக்குமே?’-ஸ்ரீ பெரியவர்.
“அதுவும் சாத்தியிருக்கு” என்றதும், சில வினாடிகள்
மௌனம். பிறகு, ” என்னை சுமந்து வந்த இவர்கள்
மிகவும் பசியோடு இருக்கிறார்கள். புத்தூர், நகரியில் கூட
இவர்களுக்கு ஆகாரம் கிடைக்கவில்லை.திருத்தணிக்குப்
போனால் உங்களுக்கு கண்டிப்பாக ஆகாரம்
கிடைக்குமென்று சொன்னேன். இங்கே வந்து
தெப்பக் குளக்கரை பக்கமுள்ள ஓட்டல்களிலெல்லாம்
ஏறி இறங்கியும் ஆகாரம் ஏதும் கிடைக்கவில்லை”
என்று ஸ்ரீ பெரியவா சொன்னதும் எனக்கு ஒன்றுமே
புரியவில்லை.
ஜுரத்தோடு தள்ளாடிய நிலையில் இருந்த நான்,
நம் உடம்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
நினைத்து, “மகா பெரியவா உத்தரவு இட்டால், அடியேன்
இவர்களுக்கு ஆகாரம் தயாரிக்க முடியும்” என்று
சொன்னதும், “இந்த ராத்திரியில் உன்னால் என்ன
செய்து விட முடியும்?” என்று ஆச்சரியமாக கேட்டார்,
ஸ்ரீ மகா பெரியவர்.
“நான் மலை மீது உள்ள பிரசாதக் கடையில்
இருப்பவன். இவர்களுக்குப் பசியாற வெண்பொங்கல்
செய்துதர முடியும்” என்றேன்.
ஸ்ரீ பெரியவர் “அப்படின்னா ரொம்ப நல்லதாப்போச்சு.
அவர்களை மலைப்பாதை வழியாக மேலே போகச்
சொல்லி, நான் படி வழியாக நடந்து வருகிறேன்.
நீ போய் சீக்கிரம் செய், போ “என்றார்.
அதுவரை நோயினால் அவஸ்தைபட்டிருந்த என்னுடைய
ஜுரம் ‘போ’ என்று ஸ்ரீ பெரியவர் சொன்னதும், எப்படிப்
போனதென்றே தெரியாமல் போய்விட்டது.நான்,
பந்தயத்தில் ஓடும் விளையாட்டு வீரனைப் போல ஓடி,
ஒற்றையடிப் பாதை வழியாக மலைக்கு வந்து சேர்ந்தேன்.
அன்று பிரசாதக் கடை முதலாளி இல்லை. அவரது
மனைவியிடம் நான் தகவலைச் சொன்னேன்.
அப்பெண்மணியோ “நீ டாக்டரை பார்க்கத்தானே கீழே
இறங்கினாய்? வைத்தியநாதனே உன்னை குணப்படுத்தி,
உனக்கு உத்திரவு கொடுக்க, என்னை வந்து கேட்கிறாயே!
எல்லோரும் நலமோடு இருப்பதற்காக அல்லவா இந்த
நிகழ்ச்சி நடந்திருக்கு! நீ போய் தாராளமாக ஆகாரம்
தயார் செய்!” என்றார். உடனே அடுப்பைப் பற்ற வைத்து
வெண் பொங்கல் தயாரித்தேன் நான். அதன் பிறகு,
அங்கு படுத்திருந்த ஒருவரை எழுப்பி, மர அகப்பை,
மந்தார இலைகள், பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள
புளிக்காய்ச்சல் இவைகளை எடுத்துக் கொண்டு முருகனின்
த்வஸ்தம்பத்தின் அருகே வந்து நின்றேன் நான்.
சில நிமிடங்களில் ஸ்ரீ பெரியவர் மலையிலுள்ள
கோயிலை வந்தடைந்தார். எல்லா பிரகாரத்திலும்
மின்சார விளக்குகள் ஒளி வீச, வாத்தியங்கள் முழங்க
அதிகாரி கிருஷ்ணா ரெட்டியார், கோயில் நிர்வாகி
குலசேகர நாயுடு,இன்னும் பல ஊழியர்கள்,குருக்கள்
அனைவரும் சேர்ந்து அழைத்துச் செல்ல முற்பட்ட போது
ஸ்ரீ மகா பெரியவர் நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தார்.
கைகூப்பி அவரெதிரில் வந்து நின்றேன்.
ஸ்ரீ பெரியவர் “ஆகாரம் தயார்தானே” என்றதும்,
“தயார் செய்து இங்கேயே கொண்டு வந்திருக்கிறேன்”
என்றேன்.”சரி, இவர்களுக்குப் பரிமாறி விட்டு வா”
என்று உத்திரவிட்டார். ஸ்ரீ பெரியவர், பல்லக்கைத்
தூக்கியவர்களை உட்காரச் சொல்லி,எல்லோருக்கும்
இலை கொடுத்து வெண் பொங்கலைப் பரிமாறிய நான்,
“இதெல்லாம் உங்களுக்கென்று தயார் செய்தது.
புளிக்காய்ச்சல் இருக்கு. திருப்தியாக சாப்பிடுங்கள்.
நான் கோயில் சென்று பெரியவாளை தரிசிக்க வேண்டும்”
என்றேன். அவர்களும், “நீங்க போங்க நாங்க பார்த்துக்
கொள்கிறோம்” என்றதும் நான் கோயில் உள்ளே போனேன்.
அங்கே மூலஸ்தானத்தின் அருகே ஸ்ரீ ஸ்வாமிகள்
நின்றிருந்தார். அக்காட்சியைக் கண்ட நான்,
“யார் தணிகைமலை முருகன்? யார் பரமாசாரியார்?”
என்று கண்களைக் கசக்கிக் கசக்கி உற்றுப் பார்த்தேன்.
தெய்வ குருவாகவும், ஜகத்குருவாகவும்
ஸ்ரீ பெரியவர் இருந்த நிலை கண்டு, என் கண்களில் நீர்
மல்கிப் பெருக்கெடுத்து ஓடியது.தரிசனம் முடிந்தது.
ஸ்ரீ மகா ஸ்வாமிகள் வெளியே வந்தார்.
அவரை சேவித்து நின்ற கோவில் சிப்பந்திகள்
விலகிச் செல்ல நான் அவரெதிரில் கைகூப்பி நின்றேன்.
ஸ்ரீ பெரியவர் “அவாளெல்லாம் ரொம்ப சந்தோஷப்படறா.
ரொம்ப ருசியாகவும்,வயிறு நிரம்ப சாப்பிடவும் செய்தாயே!
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அவாளுக்கு. வயிறும் ரொம்பிப்
போச்சு” என்று சந்தோஷமாக ஆசிர்வதித்து நிற்கையில்,
கீழே விழுந்து நான் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து
எழுந்தேன்.
“நீ தினமும் தூங்கப் போகும்போது ‘ராம’ நாமாவை
சொல்லு” என்று ஆசிர்வதித்தார், ஸ்ரீ பெரியவா.










