சிவன் அபிஷேகப்பிரியர் என்பதால் விதவிதமான பொருட்களைக் கொண்டு ஒவ்வொரு
காலத்திலும் அபிஷேகம் செய்வார்கள். அதே போல நிவேதனமும் வேறுபடும்.
☘️
#முதல்_காலம்
☘️
இந்தக் காலத்தில் சிவன் சோமஸ்கந்த ரூபத்தில் வணங்கப்படுகிறார். அப்போது அவருக்கு
பஞ்சகவ்ய அபிஷேகம் நடக்கும். அது முடிந்ததும் களபம் சாத்தி (சந்தனப் பூச்சு) செய்து சிவப்பு
பட்டு வஸ்திரம் சாத்துவார்கள்.
பச்சைப் பருப்பு கலந்த வெண் பொங்கல் நிவேதனம் செய்வார்கள். பழங்களில் வில்வம் பழம்
முதல் கால்தில் நிவேதனம் செய்யப்படுகிறது. ரிக் வேத பாராயணம் நடைபெறும்.
விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவர். அதோடு மாணிக்க வாசகரின் சிவபுராணமும்
ஓதப்படும். ஸ்வாமிக்கு திருநீற்றுப் பச்சிலை, தாமரை, அரளி போன்ற மலர்களை சமர்ப்பிப்பர்.
☘️
#இரண்டாம்_காலம்
☘️
இரண்டாம் காலம் மௌன குருவான தட்சிணாமூர்த்தி ரூபம். பல பழங்களைப் பாலோடு சேர்த்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வார். அப்போது பச்சைக் கற்பூரக் காப்பு, மஞ்சள் பருத்தி ஆடை சாற்றப்படும். பாயசமும், லட்டும் நிவேதனமாகப் படைக்கப்படும்.
பலாப்பழம் இந்தக் காலத்துக்கு உரியது. யஜுர் வேத பாராயணம் நடைபெறும். அதோடு தாமரையும், வில்வமும் சமர்ப்பிக்கப்படும். இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றப்படும். ருத்ர தாண்டகம் என்ற திருத்தாண்டகம் ஓதப்படும்.
☘️
#மூன்றாம்_காலம்
☘️
இந்தக் காலத்தில் சிவன் லிங்கோத்பவ ரூபியாக ஆராதிக்கப்படுகிறார். இறைவனுக்குத் தேனால் அபிஷேகம் செய்து, அகில் காப்பு சாத்துவார்கள். வெள்ளைக் கம்பளி ஆடையாக சாத்தப்படும். நிவேதனமாக சத்து மாவும், பாயசமும் படைக்கப்படும்.
மாதுளம் பழமும் இந்த பூஜைக்கு உரியது. சாம வேதப் பிரியனான சிவனுக்கு சாம வேதத்தைப் பாராயணம் செய்வது இந்தக் காலத்தில்தான். நெய்விட்டு கும்ப தீபம் ஏற்றப்படும். அறுகம்புல்லும் தாழம் பூவும் சமர்ப்பிக்கப்படும்.
தாழம்பூ இந்த நாளில் மூன்றாம் காலத்தில் மட்டுமே இறைவனுக்கு சாத்தப்படும். வேறு எந்த சமயத்திலும் எந்த நாளிலும் அந்தப் பூ சிவ பூஜையில் பயன்படுத்தப்படுவதே இல்லை. லிங்க புராண திருக்குறுந்தொகை ஓதப்படும்.
☘️
மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவ ரூபியாக சிவன் வணங்கப்படுவதால், லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அதே நேரம் கருவறைக்குப் பின்னால் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.
அவருக்கு நெய் பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து கம்பளி ஆடை அணிவிப்பர். ஸ்ரீ ருத்ரம், சமகம் போன்ற துதிகளை பாராயணம் செய்வர். சிவ சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து பொரி உருண்டை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்யப்படும்.
☘️
#நான்காம்_காலம்
☘️
நான்காம் காலம் சிவஸ்வரூபமாகவே லிங்கம் வழிபடப்படுகிறது. அப்போது கரும்புச்சாறு அபிஷேகம் செய்து கஸ்தூரிக் காப்பு சாத்தப்படுகிறது. பச்சை வண்ண மலர்களே ஆடையாக அணிவிக்கப்படும்.
கோதுமை, நெய், சர்க்கரை சேர்த்த உணவினை நிவேதனம் செய்வர். அதர்வண வேத பாராயணம் நடைபெறும். நல்லெண்ணெய் விட்டு மகா மேரு தீபம் ஏற்றப்படும். எல்லா விதமான மலர்களும் கலந்து சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்பர் அருளிய திருத்தாண்டகம் ஓதுவர்.
☘️
விரதம் இருப்பவர்கள் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு பூஜைகளை கண்ணாரக் கண்டு உமாமகேசனை உளமார நினைத்து வழிபட வேண்டும். இந்த நான்கு கால பூஜை முடிந்தவுடன் சற்று நேரத்தில் உஷத் கால பூஜைகள் நியமப்படி நடக்கும். அதோடு உச்சிக்கால பூஜையையும் சேர்த்து முடித்து விடுவார்கள்.
பக்தர்கள் வீடு வந்து சிறிதுநேரம் அமர்ந்த பின்னர் நீராடி பஞ்சாட்சரத்தை ஜபித்து திருநீறு அணிந்து யாராவது ஒரு வறியவருக்கு உணவிட்டு தானும் உண்ண வேண்டும். அதுவே விரதத்தை முடிக்கும் முறை. அவ்வாறு செய்தால் எல்லா ஞானமும் சித்தியும் கை வரப்பெறுவதோடு அவர்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
☘️
பெண்கள் சிவராத்திரி விரதமிருந்து பூஜை செய்தால் மிகச் சிறந்த கணவன் வாய்க்கப் பெறுவார்கள். மணமான பெண்கள் விரதமிருந்தால் கணவனுக்கு நீண்ட நோய் நொடியற்ற வாழ்நாளும், புத்திரர்களுக்கு நல்ல படிப்பும் சேர்க்கையும் கிடைக்கும். மனை சிறக்கும். மங்களங்கள் பெருகும்.
இன்று மஹா சிவராத்திரி. இன்று நியமப்படி விரதமிருந்து சிவனை வணங்கி அவன் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரர் ஆவோம். விரும்பிய அனைத்தையும் பெற்று வளமோடு வாழ்வோம்.
☘️
ஓம் நமச்சிவாய.











